Friday, November 24, 2023

தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோவில்

 தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோவில்

ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இங்குள்ள இறைவனின் பெயர் தீர்த்தகிரீஸ்வரர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தீர்த்தமலையில் இருந்து பல நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவில் இருக்கும் தீர்த்த மலைக்கு கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. மேற்கே ராம தீர்த்தம் வாயு தீர்த்தம் வருண தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது. மேலும் அக்னி தீர்த்தம் கௌரி தீர்த்தம் குமாரா தீர்த்தம் அகத்தியர் தீர்த்தங்கள் இமய தீர்த்தம் கந்த தீர்த்தம் உள்ளன. இதில் ராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை. தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது.
வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினார். இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார். ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர் தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம் பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர் சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ராம தீர்த்தம் என்று பெயர். இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான் தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால் கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது அனுமந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ராம தீர்த்தம்
மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. ராமரால் உருவாக்கப்பெற்ற இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ ராம ஜெயம் என்று தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.
அனுமன் தீர்த்தம்
அனுமான் ஒரு கிண்ணம் கங்கை நீரை இந்த பகுதியில் தெளித்ததாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்றின் சிறப்பு என்னவென்றால் பென்னாற்றில் நீர் வற்றினாலும் இந்த நீரூற்று மட்டும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.
குமார தீர்த்தம்
முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும் என்று புராணம் கூறுகிறது.
கௌரி தீர்த்தம்
இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் வடிவாம்பிகை இறைவனை மணந்து இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள் என புராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டும் பருகியும் இறைவனையும் இறைவியையும் வணங்கினால் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும் என்று புராணம் கூறுகிறது.
அகத்திய தீர்த்தம்
அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் (அல்சர்) நீங்கி வயிற்று வலியும் குணமடையும் என்று புராணம் கூறுகிறது.
அக்னி தீர்த்தம்
அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று புராணம் கூறுகிறது.
தீர்த்தகிரிசுவரர் கோவிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்தார் என்று கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். தீர்த்தகிரிசுவரர் கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. ராஜேந்திரச் சோழன் தினந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து அவர் கையாலே சிவபூசை செய்வார் என்று கல்வெட்டுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் சிறப்புப் பாயிரம் சாற்றுக்கவி பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன. என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

All reac
3

தக்ஷினேஸ்வர் மஹாதேவ் திருக்கோயில், கனகல், ஹரித்துவார்.

 அன்னை சதிதேவியின் திருமேனியினை இறைவன் தூக்கிவைத்திருக்கும் படிமம், திருவனந்தபுரம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் உள்ளது. அன்னை சதிதேவி தன் திருமேனியினை மாய்த்துக் கொண்டருளிய யாக குண்டம். தக்ஷினேஸ்வர் மஹாதேவ் திருக்கோயில், கனகல், ஹரித்துவார்.

சாளுக்கிய மகிஷாசுரமர்த்தினி.

 கங்கை கொண்ட சோழபுரத்தில் கொலுவிருக்கும் சாளுக்கிய மகிஷாசுரமர்த்தினி.

நந்தி தேவர்

 நந்தி தேவர்

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரம் கோயிலில் உள்ள நந்தி தேவரின் அழகிய சிற்பம். கரிகாலசோழன் காலத்தில் கட்டப்பட்ட சிற்பம். காலம் 2 ஆம் நூற்றாண்டு.

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும்.-ஆமாம் பாரசீகத்தில்

 குமர குருபரர்

தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் என்னும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயர் சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. கவலையடைந்த பெற்றோர் குழந்தை முருகன் கொடுத்த வரம். அவனால் குழந்தைக்கு பேசும் ஆற்றலை அந்த முருகன்தான் தர முடியும் என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்று விரதம் இருந்தார்கள். முருகனை வழிபட்டு ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர் குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லக் கூடாது என்று முடிவோடு இருந்தார்கள். 45 வது நாள் மாலையில் கோவிலுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது குமரகுருபரன் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் குமரகுருபரன் கடும் மழை பொழிவது போல முருகனைப் பற்றி கவிதை மழை பொழிந்தான். குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். குமரகுருபரன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக பாடியிருந்தார் குருபரர். திருச்செந்தூரில் அவர் இருந்த போது தன் குருவைக் கண்டவுடன் தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். சில வருடங்களுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.
குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே தன் குருவைக் காணும் நோக்கத்தில் கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி பெற்றோர் ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்று மீனாட்சி அன்னையை சிறு குழந்தையாக பாவித்து அவளது அழகு அருள் ஆற்றல் திருவிளையாடல்கள் அனைத்தையும் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலாக பாடினார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி மன்னா என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருக்க மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலை இயற்றினார்.
குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். தருமபுரத்தில் பாரம்பரிய திருக்கயிலாய பரம்பரையான தருமபுர ஆதீன சைவ மடம் இருந்தது. அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர் குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாராலும் விளக்க முடியாத இந்த பாடலுக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டதும் வாயடைத்து நின்றார் குமரகுருபரர். தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதை மாசிலாமணிதேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரின் எதிர் காலத்தை உணர்ந்த அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரை சீடராக இருக்க ஒப்புக் கொண்டு குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.
குமரகுருபரர் தனது குருவின் ஆணைப்படி காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தர வேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார். முதியவரே நீர் என்ன சொல்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கின்றீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.
மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரை கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார். அவர் நரைத்த தலைமுடியும் தலைப்பாகையும் வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும் இறையை உணர்ந்த உறுதியான முகமும் போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின. அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபையில் இருந்தவர்கள் பலர் கலைந்து ஓடினார்கள். பலர் தனது ஆசனத்தில் இருந்து காலைத் தூக்கிக் கொண்டார்கள். நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது என்று கத்தினான். நேற்று நீர் எமக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம் என்றார். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உனது ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்றார்.
சிங்கம் ஒன்று பாய்ந்து நவாபுக்கு அருகே சென்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண் சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றி வந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. குமரகுருபரர் இங்கே வா என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்து விட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னயே நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்து கொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே என்றார். ஆமாம் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொது என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் நவாப் பணிவாகப் பேசினான். மேலும் காசியில் மடத்தை நிறுவினார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார். குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள்இறைவனடி சேர்ந்தார்.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது. கயிலாசபுரத்தில் இவர் பிறந்த வீட்டுப் பகுதி மடமாக 31-8-1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார். பாரதிதாசன் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் குமரகுருபரரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் குமரகுருபரரைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்கள் நூல்கள் தோன்றியது பற்றிய கதைகளை மு. அருணாசலம் கையெழுத்து நிலையில் குறிப்புகளாக வைத்திருந்தார். இவரது நூல்கள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

நடனமாடும் சிவபெருமான்-நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

 நடனமாடும் சிவபெருமான்

சிவபெருமான் தனது 20 கைகளில் பல ஆயுதங்கள் ஏந்தியபடி தாமரை பீடத்தில் நடனமாடும் தோரணையில் இந்த வெண்கலச் சிற்பம் உள்ளது. சிவபெருமானின் இரண்டு பக்கமும் பரிவார தேவதைகள் உள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி

 சிவ வடிவங்கள் 64 - 59. கூர்மசம்ஹாரமூர்த்தி

தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்து இருந்தார்கள். தங்களின் வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைய வேண்டும். அதனைக் கடைவதற்கு கூட தங்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தார்கள். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும் வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திர மலையின் அடியை தாங்கினார். பாற்கடலை கடைய கடைய பல பொருட்கள் வந்தது. அப்பொருட்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டார்கள். ஆலகால விஷத்திற்கு பின் இறுதியாக அமிர்தம் கிடைத்தது.
அமிர்தத்தை அசுரர்கள் பெற்றால் உலகிற்கு மேலும் தீமைகள் நடைபெறும் என்று எண்ணிய திருமால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தத்தை குடித்தார்கள். இதனை அறிந்த திருமால் கையில் இருந்த அகப்பையால் அவர்களது தலையை வெட்டி அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல் சிவபூஜை செய்து ராகு கேது கிரகங்களாக உருமாறினார்கள். இதனிடையே மந்திர மலையைத் தாங்கியபடி நின்ற திருமாலின் அவதாரமான ஆமை ஏழு கடல்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் அனைத்து கடல் நீரையும் குடித்த ஆமை கண்ணில் கண்ட அனைத்தையும் உண்டது. இதனால் உலக மாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர்கள். ஆமையை அழிக்குமாறு கூறினார்கள். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் ஆமையின் உடலைக் குத்தி ஆமையின் வலிமையை குறைந்து அதன் ஓட்டை தன் திருமார்பில் ஆபரணமாக அணிந்து கொண்டார். நடந்தவற்றிற்கு திருமால் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தனது திருபாற்கடலுக்கு சென்றார். திருமாலின் ஒரு அவதாரமாகிய ஆமையின் உருவத்தை அழித்ததால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
சென்னையில் பாரிமுனைக்கு அருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது ஓவியம் காணப்படுகின்றது. சிவலிங்கம் ஆமையின் மீது இருப்பதைக் காணலாம். கந்த புராணமும் காஞ்சி புராணமும் இந்த வரலாற்றை சிறப்பாக சொல்கிறது.
May be a doodle of text
All reactions:
5

கல்யாண சுந்தரமூர்த்தி இடம் பங்களாதேஷ் டக்காவின் தேசிய அருங்காட்சியகம்.

 கல்யாண சுந்தரமூர்த்தி

கல்யாண சுந்தரமூர்த்தியின் புராண சிற்பம். இடம் பங்களாதேஷ் டக்காவின் தேசிய அருங்காட்சியகம்.

மச்ச சம்ஹார மூர்த்தியாகும்.

 சிவ வடிவங்கள் 64 - 60. மச்ச சம்ஹாரமூர்த்தி

சோமுகாசுரன் என்ற அரக்கன் மூன்று உலகத்தவராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்து பெற்றார். அந்த வரத்தினால் கர்வம் கொண்டு நானே பெரியவன் என்ற எண்ணத்தில் பிரம்மனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரம்மன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். கடலிலுள் சென்ற மீன் சோமுகாசுரனைத் தேடிக் கடலை கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டு பிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்த வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மலையைப் போன்ற அந்த மீன் கடலில் கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். அதன் வீரியம் முழுவதையும் அடக்குவதற்காக அதன் விழிகள் இரண்டையும் பறித்து அவற்றைத் தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சுய உருவத்தைப் பெற்று சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க அவரும் தந்து ஆசி கூறினார். மீன் வடிவம் கொண்ட திருமால்லின் செருக்கை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தியாகும். அதர்வண வேதம் மீனுருவில் அட்டகாசம் செய்த திருமாலை அடக்கச் சிவபெருமான் கொக்கு வடிவம் எடுத்துச் சென்றதாக கூறுகிறது. இவரை காஞ்சிபுரத்துக் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது.

All rea

சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

 சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன் சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். தேவி நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால் சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே என்று உறுதிபடக் கூறிவிட்டான். அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்? என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி. ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான். வைகைக் கரைக்கு வந்து சேர்ந்த போது இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான் சோழன். அப்போது எங்கிருந்தோ திடீரென வந்து நின்ற ஓர் ஓடக்காரன் வைகையைக் கடக்க சோழனுக்கு உதவினான். அதுமட்டுமல்ல ஆலயம் வரை வழிகாட்டியபடி வந்தான். ஆனால் ஆலயமோ அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. சிவநேசன் பரிதவிப்பதைக் கண்ட ஓடக்காரன் மனமிரங்கி கவலை வேண்டாம். ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கேசப் பெருமானைத் தரிசிக்காமல் ஊர் திரும்ப வேண்டாம் என்றான். அவ்வாறே திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான்.
அர்த்தஜாம வழிபாடு முடிந்து ஆலய நடை சார்த்தப்பட்டால் பிறகு இரவில் மீண்டும் திறக்கும் வழக்கமில்லை. அப்படி வழிபடுவதும் தவறு. எல்லாம் தெரிந்திருந்தும் சிவநேசச் சோழன் ஆர்வ மிகுதியால் சொக்கேசனை மகிழ்வுடன் வணங்கினான். ஆலயக் கதவை பழையபடி மூடிச் சாவியை ஒப்படைத்துவிட்டு வந்தான் ஓடக்காரன். சோழனை வைகையின் மறுகரையில் கொண்டு விட்டான். சோழன் கொடுத்த பொற்காசுகளையும் வாங்க மறுத்துவிட்டான் அந்த அதிசய ஓடக்காரன். மறுநாள் ஆலயத்தைத் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய இலச்சினையான மீன முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான் இரவு ஒரு கனவு. அதில் சோமசுந்தரப் பெருமான் தோன்றினார்.
குலபூஷணா சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன். அவன் பக்தியை மெச்சி நான்தான் ஓடக்காரனாகச் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி முத்திரையிட்ட போது நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா நீ நினைப்பதுபோல் நந்தி முத்திரை பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜனின் சிறப்பு அடையாளம். இதை ஒரு காரணமாக்கி நீ சோழன் மீது போர் தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும் கனவில் வந்து சிவன் பேசப் பேச மெய் சிலிர்த்து போனார் பாண்டிய வேந்தர். பிறகு சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன் பாண்டிய மன்னன் ஆனான். ஆனால் ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை. இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான்.
சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன் ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி பிரபு பழசையெல்லாம் மறந்து விடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டு விட்டதால் உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க் கிடக்கிறாரே பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள் என்றாள். இல்லை தேவி தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்து விட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். சோழனுக்காக வாதிட என் தந்தையின் கனவில் மட்டுமே தோன்றினார். எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன் என்றான்.
சோழன் மகளை மணந்து உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன் மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால் மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம். முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசை மொழிகளை அர்ச்சித்து விட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். குலபூஷண பாண்டியனின் புதல்வனே என் மீது சினம் கொண்ட பிள்ளையே எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல. அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக் கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர் தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு விழி போராடு எதிரியை வெற்றிக் கொள் என்றார். சிவபிரான் பேசக்கேட்டு சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும் வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப் படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக் கொண்டு அப்பொழுதே புறப்பட்டான்.
சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம். வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும் தீப்பந்தங்களும் ஏந்தி நின்று காத்திருந்து மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம் மதுரைக்கு எதிரிகள் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன் எல்லோரும் கூறியது ஒரே தகவல் ஆஜானுபாகுவான ஒரு மனிதர் குதிரை மீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார். அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன் பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம் என்றனர். யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழ வேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். யார் அந்த மாய மனிதன்? என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.
அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம் பிரபோ தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான் என்றான். யார் நீ? என் ஊழியரில் எவரும் உன் போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்? இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும் பாண்டிய வீரன் சிவனாகிறார். இறைவா தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்? என்றான். அதற்கு இறைவன் பதற்றம் வேண்டாம் பாண்டிய மன்னா பரிகாரம் என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று பக்தனுக்காக இறைவனும் செய்யலாம். நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன் உன் ராஜ முத்திரையை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா? என்று கேட்டார். சிவ சிவா என்ன பேச்சு சுவாமி இது தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து மன்னித்து ஏற்றுக்கொள். அப்படியே ஆகட்டும் ஐயனே இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா? விண்ணும் மண்ணும் அதிர வாய் விட்டு சிரித்தார் இறைவன். பிறகு ராஜசேகரா என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? சிவன் என் கனவில் வரவேண்டும் என்றுதானே? வந்து விட்டேன் சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான் கனவு ஒரு வாழ்வுதான். கவலையை விடு கடமையைச் செய் சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று சொக்கேசப் பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவுகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.
No photo description available.

கங்காவதரணம் என்பது சிவபெருமானின்

 கங்காவதரணம்

கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இது பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர். ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி உடலைப் பின்புறமாக வளைத்து கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோக கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...