Wednesday, January 29, 2025

காரமடை வனப்பகுதி ,பரளிக்காடு பரிசல் துறையை


 கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.

வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம்.
மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.
அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.
ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 90470 51011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

சூரியமலை ! பாதாள குகைக்குள் கொங்கண சித்தர் !

 சூரியமலை ! பாதாள குகைக்குள் கொங்கண சித்தர் !





சித்தர் வாழும் ஒற்றை மலை
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும். இந்த மலையைத்தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒற்றை மலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த மலை ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்த மலையில் ஒரு மர்மக் குகை இருப்பதாகவும், அதற்கு பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அங்குள்ளவர்கள் சில அமானுஷ்ய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
‘பாதாள குகைக்குள் வி‌ஷப்பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது. இந்தக் குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்ததாகவும், அவர் பல சித்து விளையாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2–வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. அதனுள் மைதானம் போன்ற இடமும், அதில் அமைக்கப்பட்ட நாலு கால் மண்டபத்தில் தங்கப் புதையலும் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்றைக்கும் அந்த சித்தர்தான் பாதுகாத்து வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேல போய், ‘அந்த குகைக்குள் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி சித்தர் ஓய்வெடுத்து வருகிறார்’ என்கிறார்கள். ‘குகைக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே..’ என்ற அசட்டு தைரியத்தில் சில அசகாய சூரர்கள் முயற்சி செய்தும் பார்த்துள்ளனராம். ஆனால் அவர்களால் அந்த துவாரத்தின் வழியே சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, போன வேகத்திலேயே பின்வாங்கிவிட்டார்களாம்.
குகைக்கு வெளியே மலைப் பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு, அதில் மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் இருக்கிறது. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாகவே அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர். பாதாள குகைக்கு முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் தவறாமல் வழிபாடு செய்து வருகின்றனர்.

திருமூர்த்தி மலையை

 

உடுமலைப்பேட்டையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நாள் முழுவதும் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

🛕இங்கு அமைந்துள்ள பஞ்ச லிங்க அருவியில் குளியலுக்காகவும், அமணலிங்கேஸ்வரர் தரிசனத்திற்காகவும் இங்கு ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள் என்றால் இரண்டு மடங்கு சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிந்து விடுகின்றனர்.
🚶🚶‍♂️கோவிலில் இருந்து சற்று மேல் நோக்கி நடந்தால் திருமூர்த்தி அருவியை அடையலாம், மூலிகை நிறைந்த நீர் சில்லென்று கொட்டும் அருவியில் குளித்தால், அனுபவம் சொல்ல வார்த்தைகள் இல்லை,
🍛உணவு தயார் செய்து எடுத்து போய் விட்டால் அருமையாக இந்த இடத்தை அனுபவிக்கலாம், காரணம் நிறைய கடைகளில் உணவு தரமானதாக இல்லை என்பதே, அருகில் உள்ள அமராவதி அணைக்கு சென்றால் மீன் சாப்பாடு சுட சுட கிடைத்து எனக்கு, உங்கள் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்க தெரிந்துகொள்வோம்,
🚙நீங்கள் எங்கு இருந்து பயணப்பட்டாலும்
கோவை காந்திபுரத்தில் இருந்து சரியாக 82 கிலோ மீட்டர் பயணித்தால் திருமூர்த்தி மலையை அடைந்துவிடலாம்.
🚌திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. வார இறுதியில் குழந்தைகளுடன், பெரியவர்களும் ஜாலியாக சென்றுவர ஏற்ற ஸ்பாட் இது

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...