Saturday, March 23, 2024

அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்...

லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்...

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அதில் வரும்,

(1) 480வது ஸ்லோகமான, " *பாயஸான்ன* *ப்ரியாயை* " என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்" எனப் பொருள்.

(2) 501வது ஸ்லோகமான, " *குடான்ன ப்ரீத* *மானஸாயை'* என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்" என்று அர்த்தம்.

(3) 526வது ஸ்லோகமான, " *ஹரித்* *ரான்னைக* *ரஸியை'* என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்" என பொருள் வருகிறது.

(4) அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, " *தத்யான்ன ஸக்த* *ஹ்ருதயாயை'* என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!" என்று பொருள்.

(5) " *முத் கௌத* *நாஸக்த...* என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!" என்று அர்த்தம்.

(6) " *ஸர்வெளதன* *ப்ரீதசித்தா* ' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!" எனப் பொருள்.

(7) இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், " *தாம்பூல பூரிதமுகிச்யை* " என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.
         "தாம்பூலம்" என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். 

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!யார் யார் எப்படி என்னை வழிபடுகறார்களோ அவ்வாறே அருள்கிறேன் என்கிறார் பகவான் தன் கீதையில். அம்பாளும் எண்ணத்தின் காரணமாகவும், எண்ணமாகவும், அதை தெரிவிக்கும் மொழியாகவும், வார்த்தையாகவும் பக்தனின்மனதில் அன்னம்போல் சஞ்சரிக்கிறாள் என்கிறது ஸஹஸ்ரநாமம்

*நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின் அருளை பெறுவோம்.

Thursday, March 21, 2024

கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்_சில

#கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்_சில

*1 #அன்ன_தானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.

*2 #கோ_தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்.

*3 #பசு_கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

*4 #குடை_தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

*5 #தாமிரம், நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

*6 #வஸ்திர_தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.

*7 #இரத்தம், கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

*8 #ஆலயத்திற்கு #யானை_தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்.

*9 #குதிரையும்_பல்லக்கும்_தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

*10 #நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.

*12 #பயன்_கருதாது_தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

*13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

*14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது.

*15 ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.

*16 #பொன்_வெள்ளி_ஆபரணங்களைத்தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்.

*17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

*18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும்; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

*19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.

*20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்.

*21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

*22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

*23 தாமிரப்பாத்திரத்தில் #எள்ளு_தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.

*24 சுவையான #பழங்களைத்தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.

*25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.

*26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.

*27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.

*28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.

*29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.

*30 இதைப் படிப்பவரும் கேட்பவரும்; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

*எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.

வெள்ளியங்கிரி மலை பயணம்

🔱வெள்ளியங்கிரி மலை பயணம் 🔱

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை, ஏழு மலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில்,ஏழாவது மலையின் உச்சியில், சுயம்புலிங்கமாய் வீற்றிருக்கிறார் நம் வெள்ளியங்கிரி ஆண்டவர்.

 பொதுவாக மற்ற தெய்வங்களை தரிசிக்க நாம் முழுமனதாக வேண்டினால் போதும். ஆனால், சிவபெருமானை தரிசிக்க அந்த சிவபெருமான் அருள் புரிந்தால் மட்டுமே முடியும் என்பார்கள். அது 100க்கு 200% பொருந்தும். உடல் வலிமை மனவலிமை மற்றும் ஈசனின் அருள் இருந்தால் மட்டுமே ஏழாவது மலையின் உச்சியை அடைய முடியும்.

 ஏழாவது மலையின் உச்சி அடைய நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெறும் 6km மட்டுமே. ஆனால் அது சுலபம் அல்ல.
இந்த 6km தூரத்தை கடக்க பொதுவாக 8-ல் இருந்து 10 மணி நேரம் ஆகும். மீண்டும் கீழே இறங்க 6ல் இருந்து 8 மணி நேரம் ஆகும்.
 முடிந்த அளவுக்கு பழங்களை எடுத்துச் செல்ல வேண்டும் .குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு torchlight மிக மிக அவசியம். 

முதல் மலை:

அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரின் அருளை பெற்று, மூங்கில் தடியின் துணை கொண்டு ஆரம்பிக்கிறது முதல் மலை.
ஏழு மலைகளில் மிகவும் கடினமானது இந்த முதல் மலையும் ஏழாவது மலையும் தான்.இம்மலை மிகவும் செங்குத்தாக படிக்கட்டால் ஆனது. முதல் மலை மட்டுமே 1½ km.
முதல் மலையே நம்மை மிகவும் சோதித்து விடும். சிவபெருமான் எப்போதும் தன் பக்தர்களின் நம்பிக்கையை சோதிப்பார். அப்படியான சோதனைதான் இந்த முதல் மலை.
பலமாக மூச்சு இரைக்கும். நமது உடல் தகுதியின் மேல் நமக்கே சந்தேகம் வர வைக்கும். முதல் மலையில் எங்கும் தண்ணீர் கிடைக்காது. கடைகளும் இருக்காது. ஆங்காங்கே படிக்கட்டுகளில் இரு பக்கமும் தர்பூசணி பழம் விற்று கொண்டிருப்பார்கள். அது மட்டுமே கிடைக்கும்.
அனைவரும் இரண்டு அல்லது மூன்று முறையாவது திரும்பி போய் விடலாமா என்ற எண்ணம் எழாமல் இருக்காது. அந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு உடல் உறுதிக்கு தேவையான ஓய்வும் நீர்ச்சத்தும் பெற்றுக்கொண்டு. மன உறுதிக்கு "ஓம் நமசிவாய" என்ன உச்சரித்து சிவனை சிந்தையில் நிறுத்தி தொடர்ந்தாள் மட்டுமே ஏழாம் மலை வரை செல்லும் தைரியமும் தன்னம்பிக்கையும் வரும்.
1½ முதல் 2 மணி நேரம் நடந்தால் வெள்ளை விநாயகர் ஆலயம் தென்படும். இத்துடன் முடிகிறது முதல் மலை.

இரண்டாம் மலை:

முதல் மலை முடிவில் கடைகள் இருக்கும். அது நம் கண்களுக்கு சொர்க்கம் போல் காட்சியளிக்கும். ஆனால் இங்கும் தண்ணீர் கிடைக்காது. அதனால், லெமன் ஜூஸ் லெமன் சோடா என்று முடிந்த அளவுக்கு அருந்திவிட்டு நல்ல ஓய்வெடுத்து முடிந்தால் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு கலைப்பாறிய பின்பு வெள்ளை விநாயகரின் ஆசிக்கொண்டு இரண்டாம் மலையை ஏற தொடங்குவோம்.

இரண்டாம் மலை செங்குத்தான படிக்கட்டுகளும் சமதரைகள்ளும் வழுக்குப் பாறைகளாலும் ஆனது. முதல் மலையை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் சுலபம்தான். இரண்டாம் மலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் மிகப்பெரிய வழக்குப் பாறை தென்படும் அதைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இடது பக்கம் பாம்பாட்டி சித்தர் குகையும் வலது பக்கம் பாம்பாட்டி சித்தர் உருவாக்கிய சுனையும் தென்படும் இத்துடன் முடிவடைகிறது இரண்டாம் மலை.

 மூன்றாம் மலை :

 பாம்பாட்டி சூனையில் நம்மிடம் உள்ள பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். கூட்டம் வெகுவாக இருக்கும் இருந்தாலும் பொறுமையாக இருந்து தண்ணீரை நிரப்புவது நல்லது. இதனால் நமக்கு தேவையான ஓய்வும் கிடைக்கும், தண்ணீரும் கிடைக்கும். இந்தத் தண்ணீர் தான் நம் மூன்றாவது மலை முழுவதும் உபயோகப்பட போகிறது தண்ணீரை நிரப்பி விட்டு ஓய்வெடுத்த பின் பாம்பாட்டி சித்தரை வணங்கி மூன்றாவது மலையேற்றத்தை தொடங்குவோம்.

 மூன்றாவது மலை முழுக்க முழுக்க வழுக்குப் பாறையாளானது. நம் உடன் இருக்கும் மூங்கில் தடி மட்டுமே நமக்கு பாதுகாப்பு. சிறியதாக தவறினாலும் பெரிய காயங்கள் உண்டாகும். மூன்றாவது மலையுமே செங்குத்தாகவே அமைந்திருக்கும் ஆனால் முதல் மலை அளவுக்கு இருக்காது. இருந்தாலும் இதுவும் கடினம்தான் மிகவும் கடினம்.
 எப்பொழுது மலை முடியும் என்ற எண்ணத்தை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். மூன்றாவது மலை ஏற ஏற குளிர்ந்த காற்று வீச தொடங்கும்.
 மூன்றாவது மலையுமே நீண்ட நெடிய பயணமாக இருக்கும் எனவே ஆங்காங்கே தேவையான ஓய்வும் நீர் சத்தும் மிகவும் அவசியம்.
 மூன்றாவது மலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் ஒரு அதிசய சுனையானா கைதட்டி சுனை இருக்கும்.நம் கைதட்டும் ஓசைக்கேற்ப்ப தண்ணீர் வேகமாகவும் மெதுவாகவும் வழிய தொடங்கும். இந்த சுனையும் மிகவும் முக்கியமானது. இதைத் தவிர விட்டால் அடுத்து நான்காவது மலை முழுவதும் தண்ணீர் இருக்காது.
 சுனையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு சிறிது தூரம் ஏறினால் மலையின் உச்சியை அடைவோம். உச்சியில் இருந்து கீழே அழகான பள்ளத்தாக்கும் சிறுவாணி நதியும் தென்படும். இதுவே மூன்றாவது மலை முடிந்து நான்காம் மலை தொடங்கும் இடம்.

நான்காம் மலை:

நான்காம் மலையில் கோரைப்புற்கள் நம்மை வரவேற்கும். சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் காண இது மிகவும் சிறந்த இடம்.
 நான்காம் மலை குறுகிய பாதைகளும் மேடான மணல் திட்டுகளும் பெரிய பாறைகளும் கொண்டது. நான்காம் மலையின் உச்சிக்கு செல்லும் வரை ஓய்வெடுக்க பெரியதாக இடங்கள் இருக்காது ஏதேனும் பாறை மேலே தான் அமர வேண்டும் அதுவும் ஆபத்தானதே.
 எனவே நான்காம் மலை ஏறும் முன் நன்றாக ஓய்வு எடுத்து நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஏறி வந்த மூன்று மலைகளை விட நான்காம் மலை சிறிது சுலபமாகவே இருக்கும். நான்காம் மலை உச்சியை தொட்டு சிறிது தூரம் நடந்தால் ஒட்டன் சித்தர் சமாதியை வந்தடைவோம்.இதுவே நான்காம் மலையின் எல்லை.

 ஐந்தாம் மலை:

 ஒட்டன் சித்தர் சமாதியை வணங்கி விட்டு தொடர்கிறது ஐந்தாம் மலையின் பயணம்.
 ஐந்தாம் மலை ஒரு சமதரை பகுதியாகும்.
 இந்த மலை முழுவதும் மணல் வெந்நிறத்தில் இருக்கும். இதை பார்க்க திருநீறு போன்று காட்சியளிக்கும் எனவே இது திருநீறு மலை என்றும் அழைக்கப்படும். 
 ஐந்து, ஆறு, ஏழு மூன்று மலைகளிலும் வெயிலோ குளிரோ இரண்டும் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
 ஐந்தாம் மலையில் பயணிக்க தொடங்கிய சிறிது தூரத்தில் ஒரு சுனை தென்படும். இந்தத் தண்ணீரை தவறவிட்டால் ஐந்து ஆறு இரண்டு மலைகளிலும் தண்ணீர் கிடைக்காது.
 தொடர்ந்து பயணித்து வந்தால் பீமன் களி உருண்டை என்னும் பாறையை வந்தடைவோம் இதுவே ஐந்தாம் மலையின் முடிவு.

ஆறாம் மலை :

 ஐந்தாம் மலை சமதரை என்பதால் பெரியதாக சிரமம் இருக்காது எனவே ஓய்வும் பெரியதாக தேவைப்படாது. இருந்தாலும் பீமன் களி உருண்டையின் கீழ் சற்று இளைப்பாரி விட்டு மேலும் பயணத்தை தொடரலாம்.
 நான்கு மலைகளை ஏரியும் ஐந்தாவது மலை நடந்தும் பயணம் செய்த பிறகு ஆறாவது மலையை கீழே இறங்கி பயணிக்க வேண்டும்.
 ஆறாவது மலையின் பாதை மிகவும் குறுகலானது ஒருவர் பின் ஒருவராக தான் செல்ல வேண்டும். ஆறாம் மலை இறங்குவதும் மிகவும் எளிதான பயணமே. மலை இறங்க இறங்க மணல் குளுமையானதாக இருக்கும். இதற்கு காரணம் ஆறாம் மலை கீழே இருக்கும் ஆண்டி சுனை. இந்த ஆண்டி சுனையுடன் ஆறாம் மலை முடிவடைந்து ஏழாம் மலைக்கான பயணம் தொடங்கும்.

ஏழாம் மலை:

 வெள்ளிங்கிரி மலை பயணத்தில் மிகப்பெரிய சுனை இந்த ஆண்டி சுனை.
 இச்சுணை பெரும்பாலும் பக்தர்கள் நீராடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
 உறைய வைக்கும் இந்நீரில் மூழ்கி எழுந்தாள் ஆறு மலைகளை கடந்து வந்த சோர்வு முழுமையாக நீங்கும். அந்த சோர்வு நீங்கினால் மட்டுமே நாம் ஏழாம் மலை ஏற முடியும். எனவே ஆண்டி சுனையில் நீராடுவது மிக மிக அவசியம்.

 சுனையில் மூழ்கி அதன் மத்தியில் இருக்கும் சிவலிங்கத்தை வணங்கி ஆசி பெற்று நெற்றி நிறைய திருநீறு பூசி புத்துணர்வு கொண்ட உடலோடு "ஓம் நமசிவாய" என்று சொல்லி மனதையும் புத்துணர்வு ஆக்கிக் கொண்டு நம் வெள்ளியங்கிரி ஆண்டவர் வசிக்கும் ஏழாம் மலையான கிரி மலையை ஏற தொடங்குவோம்.
 ஏழாம் மலை தொடக்கத்தில் ஒரு சுனை உண்டு அங்கு தேவையான அளவு தண்ணீரை நிரப்பிக் கொண்டு பயணத்தை தொடங்க வேண்டும். அதை தவறவிட்டால் ஏழாம் மலை ஏறி இறங்கும் வரை எங்கும் தண்ணீர் கிடைக்காது.

 ஏழாம் மலை மிகவும் செங்குத்தானது இங்கு படிக்கட்டுகள் எதுவும் இருக்காது. வெறும் பாறைகள் மீதே தான் பயணம் செய்ய வேண்டும். முதல் மலையில் ஏற்பட்ட அனைத்து சோதனைகளும் ஏழாம் மலையிலும் ஏற்படும். உடலும் மனதும் மிகப்பெரிய சோர்வடையும். வெயில் நேரத்தில் ஏறினால் கால்களில் கொப்பளங்கள் வரும். இரவில் பயணத்தை தொடங்கினால் குளிர்ந்த காற்று நம் உடலை நடுங்கவும் உரையவும் செய்யும். எனவே ஆங்காங்கே ஓய்வு மிக மிக அவசியம்.
உடல் சோர்வை தணிக்க தண்ணீரும் கொண்டு சென்ற பழங்களும் மனச்சோர்வை தவிர்க்க ஓம் நமசிவாய என்னும் மந்திரமே நமக்கு துணை. அப்படியே 1½ முதல் 2 மணி நேரம் பயணித்தால் கிரி மலையின் உச்சியை நாம் அடைவோம்.

 உச்சியை அடைந்ததும் நம்மில் ஏற்படும் மாற்றம் மிகவும் அலாதியானது. அதை உணர மட்டுமே முடியும். இயற்கை எவ்வளவு அழகானது என்பதை பார்க்க முடியும். நாம் மேகங்களுக்கும் மேலே இருப்போம். சூரிய உதயத்திலும் அஸ்தமனத்திலும் பள்ளத்தாக்கு தென்படாதவாறு மேகங்கள் மூடி வெள்ளியைப் போற்றியது போல் காட்சி அளிக்கும். இதால்தான் இம்மலை வெள்ளியங்கிரி என அழைக்கப்படுகிறது.

 வரிசையில் நின்று சுயம்பு லிங்கமாய் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசித்து பின்னர் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தால் நம்முள் ஏற்படும் மாற்றம் நம் வாழ்நாளில் மிக முக்கியமானதாக இருக்கும்.
 ஈசன் தன் மன அமைதிக்காக வந்து அமர்ந்த இடத்தில் நாமும் இருக்கிறோம் என்று நினைக்கும் போது உள்ளத்தில் ஈசனும், உதடுகளில் ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சரமும், கண்களில் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இருக்காது.

 "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" இன்னும் சிவபுராண வரிகளுக்கு ஏற்ப, அவன் அருளாலே அவனை தரிசிக்க முடிந்தது.
 அவன் கருணையால் எனக்கு உடல் உறுதியும் மன உறுதியும் தந்து அவனை தரிசிக்க இரண்டு முறை அருள் புரிந்திருக்கிறான் என் ஈசன். தொடர்ந்து அருள் புரிவான் எனவும் நம்புகிறேன்.

ஓம் நமசிவாய🔱
சிவாய நம🔱

Wednesday, March 20, 2024

குலதெய்வங்கள் என்றால் என்ன? விஞ்ஞானத்தோடு

*குலதெய்வங்கள் என்றால் என்ன?*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?*
*அவர்களின் பெருமை என்ன?*
*அனைவரும் தெரிந்து கொள்வோம்.!*
_*நமது குலதெய்வம் :-*_
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.
சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்… அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை… இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்… இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று… அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!…
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு குல தெய்வம். புகுந்த வீட்டில் ஒரு குல தெய்வம்.
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி
(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அவரவர் வசதிக்கேற்ப குலதெய்வத்தின் போட்டோவை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.!
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள்.

விஞ்ஞானத்தோடு ஒத்துபோவது எவ்வாறு..
அறிவியல் உண்மைகள் ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்பதை விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....? 

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

குரோமோசோம் இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோசோமே முடிவு செய்கிறது. தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப்படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய் கூறுகிறது.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x குரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y குரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக. வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.

க்ரோமோசோம் முக்கியத்துவம் இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர். இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x குரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x குரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y குரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y குரோமோசோம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y குரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y குரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y குரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y குரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

13 தலைமுறைகள் 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.
13 தலைவர்களுக்கு மேல் வம்சம் அற்று விடுகிறது.

எனவேதான் காலம் காலமாக தந்தை வழி முப்பாட்டனார்களின் வம்சம் தொடர்ந்த குல தெய்வ வழிபாட்டை நாம் பிரார்த்தனை செய்து வருகிறோம்..

 அவ்வகையில் நமக்கு ஒவ்வொருவரின் நிகழ்கால கண் முன்னே கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான். நம் குல முன்னோர் வழித் தோன்றல்களே குலதெய்வம் ஆகும். எனவே அவ்வகையில் நம் கண்ணுக்கு முன் தெரியும் குலதெய்வம் பெற்ற தாயும் தந்தையுமே..

“தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.”
அனுதினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வோம் வாழ்வில் முன்னேற்ற அடைவோம்.!
எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்…
_*நமது முன்னோர்கள் உருவாக்கித் தந்த மிகவும் புனிதமான குலதெய்வத்தின் சிறப்புகளை...*_
_*வருகின்ற இளைய தலைமுறைக்கும் முக்கியமாக நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்....

அவரவர் குலதெய்வத்துக்கு ஏற்ப மந்திரச்சொல்லை பயன்படுத்தவும்..

Friday, March 15, 2024

கோடி_கோடியாய்_கடன்

கோடி_கோடியாய்_கடன்

வைத்திருந்தாலும் கவலைப்படாமல் மகா பெரியவா சொன்ன இந்த பரிகாரத்தை கேளுங்களேன். கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும் மிக மிக சுலபமான தீர்வை கொடுக்கக் கூடிய மகா சக்தியை கொண்டவர் தான் மகா பெரியவா. இந்த மகா பெரியவா சொன்ன பரிகாரங்களை செய்து பலன் அடைந்தவர்கள் ஏராளமானோர். அப்படி ஒரு பக்தனுடைய கதையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

மகா பெரியவாவை பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருகை தருவார்கள். நிறைய கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் ஒரு பக்தன் கண்களில் கண்ணீரோடு முகத்தில் வாட்டதோடு வந்து மகா பெரியவா அவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, குங்குமத்தை பிரசாதமாகவும் வாங்கிக் கொண்டு செல்கின்றான்.

இதேபோல மூன்று நாட்களும் நகர்ந்து சென்றது. மூன்று நாட்களும் மகா பெரியவா, கஷ்டத்தில் வந்த அந்த ஒரு பக்தனை கவனித்துள்ளார். நான்காவது நாளும் அந்த பக்தன் கஷ்டத்தோடு வந்து, சொல்ல வந்த கஷ்டத்தை சொல்லாமல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மஹா பெரியவாவை கடந்து சென்ற போது, மகா பெரியவா அந்த பக்தனின் கைபிடித்து இழுத்து, கூப்பிட்டு ‘சொல்ல வந்த கஷ்டத்தை ஏன் சொல்லாமல் செல்கிறாய்’ என்று கேட்டபோது, பின்பு கண்கலங்கி கஷ்டத்தை அப்படியே சொல்லத் தொடங்கினான் அந்த பக்தன்.

‘தீர்க்கவே முடியாத பணக்கஷ்டம். அள்ளி அள்ளிக் கொடுத்த எங்களுடைய குடும்பம் இப்போது கிள்ளி கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லாமல் நிற்கின்றது. அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாத எனக்கு கோடி கோடியாக இருக்கும் கடனை அடைப்பதற்கான வழியே தெரியவில்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை’. என்றவாறு கஷ்டத்தோடு கண்கலங்க பிரச்சனைகளை கொட்டி தீர்த்தார் அந்த பக்தன்.

எல்லா பிரச்சனைகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மகா பெரியவா கஷ்டத்தில் வந்த அந்த பக்தனை பார்த்து, ‘உன்னுடைய வீட்டில் ஒரு கிணறு இருக்கிறது அல்லவா? அந்த கிணறில் நிரம்ப தண்ணீர் இருக்கிறது அல்லவா? என்று கேட்கின்றார்’. இவருடைய கஷ்டத்திற்கும் கிணற்றில் இருக்கும் தண்ணீருக்கும் என்ன சம்பந்தம் என்று அங்கு உள்ளவர்களும் யோசிக்க தொடங்கி விட்டார்கள். இருந்தாலும் மகா பெரியவா சொல்கின்ற விஷயத்தை செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுதானே மரியாதை. அதுதானே பக்தி.

என்னுடைய வீட்டில் கிணறு இருக்கிறது அது நிரம்ப இளநீர் போல சுவையான தண்ணீரும் இருக்கிறது என்று சொல்கிறான் அந்த பக்தன். ‘இன்னும் ஒரு சில நாட்களில் ஆடி மாதம் வரப்போகின்றது. பக்தர்கள் கோவிலுக்கு திரளாக செல்வார்கள். வெயில் சமயம் என்பதால் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், உன் கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாதை முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்து விடு. தண்ணீர் பந்தல் அமைக்கும் போது பானையில் தண்ணீர் நிரப்பும்போது ஹரே கிருஷ்ணா! ஹரே ராம! மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இரு.’ என்று ஒரு பரிகாரத்தை சொல்கிறார் மகா பெரியவா.

பக்தனும் இதைக் கேட்டுக் கொண்டு மகா பெரியவா சொன்னது போலவே பரிகாரத்தை செய்து விட்டான். தாகத்தில் வந்த பக்தர்களுக்கு தண்ணீரும் கிடைத்தது. இந்த பரிகாரம் செய்து முடித்த ஒரு சில நாட்களிலேயே பக்தனின் சொந்த ஊரான அந்த கிராமத்திலிருந்து ஒரு செய்தி வருகின்றது. ஏதோ ஒரு பூர்வீக சொத்து பத்திரம் பக்தனின் தாத்தா பெயரில் உள்ளது.

அந்த சொத்தை விற்றால் ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்ற ஒரு செய்தி. அந்த பக்தனும் சொத்து விவகாரங்களை சரியாக முடித்து சொத்தை விற்று கைக்கு வந்த பணத்தை கடனாளிகளுக்கு திருப்பி கொடுத்துவிட்டான். போக மீதம் ஒரு சிறு தொகையும் இவனுடைய கையில் இருப்பு இருந்தது. பாருங்கள் எவ்வளவு அற்புதமான பரிகாரம். ஒரு தண்ணீரை தானமாக கொடுத்ததற்கே இவனுடைய தீரா பரம்பரை கடன் தீர்த்து விட்டது. மகா பெரியவாரிவா அவர்கள் நிகழ்த்திய பல அற்புதங்களில் இதுவும் ஒன்று.

நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி, நம்மிடம் இருக்கக்கூடிய பொருளை அந்த இறைவனின் பெயரைச் சொல்லி தானமாக கொடுக்த்து அடுத்தவர்களுக்கு உதவும் போது போது, நம் கஷ்டம் தீருவதற்கு ஏதாவது ஒரு வழியை அந்த இறைவன் நமக்கு கொடுப்பான். நீங்களும் இதை பின்பற்றித்தான் பாருங்களேன்.

சிவாலய ஓட்டம்

'வாட்டம் தீர்க்கும் சிவாலய ஓட்டம்'....''சிவாலய ஓட்டம்'':8-3-2024.'நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே' என்கிறது திருமூலரின் திருமந்திரம்.ஆம்!அதற்கேற்ப சிவபெருமானைத்தேடி,சிவராத்திரி நாளில் ஓடி  சிவனருளை நாடிப்பெற்றுக்கொள்கின்றனர்.இப்படி சிவனை நாடி,திருமுறைப் பாடி,ஓடி ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.தற்போது சிவராத்திரி நன்னாளில்  நடந்தும்,ஓடியும்,சைக்கிள் மூலமாகவும்,கார்,பைக் மூலமாகவும் சென்று வழிபடுகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை மாசி மகா சிவராத்திரி அன்று அடியவர்கள் காலை முதல் துவங்கி சிவராத்திரி இரவு மறுநாள் அதிகாலைவரை ஓடிச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் ஆகும்.சிவாலய ஓட்டமானது சுமார் 118 கிமீ தூரத்தை உள்ளடக்கியது.சிவராத்திரிஅன்று காலையில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து,ருத்திராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய
 விபூதி பை எடுத்துக்கொண்டு,பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டம் ஓட ஆரம்பிப்பர்.திருநீற்றுப்பையில் அந்தந்த சிவாலயங்களில் தரும் திருநீற்றை வைத்துக்கொள்வார்கள்.'அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறு'' அல்லவா அது.கையிலிருக்கும் விசிறியால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்துக்கு வீசி,பூஜை செய்கிறார்கள்.சிவாலய ஓட்டம் நிகழ்ச்சியின் முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில் ஈசனை வணங்கி விட்டு ஓட ஆரம்பிப்பர் அடியவர்கள்.அப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலான திருநட்டாலம் ஆலய தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா,கோபாலா...தாணு நாதா..சிவாயநம...இடைமருதா
ஐயாறா...ஆரூரா...கூத்தபிரானே..அருணாசலா சோணாசலா', ''அப்பனே..சிவனே..வல்லபா சங்கர நாராயணா'' எனும் கோஷங்களை ஒலித்தபடியே இருப்பார்கள்.சிவாலய ஓட்ட 12 சிவாலயங்கள் பின்வருமாறு:''முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோயில்,திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில்,திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில்,திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோயில்,பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் திருக்கோயில்,திருபன்னிபாகம் சிவன் திருக்கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி திருக்கோயில்,மேலாங்கோடு சிவன் திருக்கோயில்,திருவிடைக்கோடு மகாதேவர் திருக்கோயில், திருவிதாங்கோடு சிவன் திருக்கோயில்,திருபன்றிகோடு மகாதேவர் திருக்கோயில்,திருநட்டாலம் சங்கர நாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்'' என்பனவாகும்.பாண்டவர்களின் தருமர் ஒருமுறை ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது.அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும்,விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு.இதனால் வியாக்ரபாத
மகரிசிக்கு சிவனும்,விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்த கண்ணபிரான் பீமனிடம் புருஷா மிருகத்தின் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.கட்டுரையாக்கம்:குமரி.சிவ.அ.விஜய் பெரியசுவாமி.,கூடவே 12 ருத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து,உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டுவிட்டு 'கோபாலா கோவிந்தா' எனச்சொல் என்று கூறி அனுப்பி வைத்தார்.பீமன் புருஷாமிருகத்தை தேடி கானகம் வந்தான்.அன்று மகா சிவராத்திரி நன்னாள்.அங்கே புருஷாமிருகம் சிவதவத்தில் முறளியடத்துப் பாறை எனும் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது.''சோணாசலா அருணாசலா...மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' என சொல்லி சிவபூஜையில் ஆழ்ந்திருந்தது.அங்கு பீமன் சென்று ''கோபாலா..கோவிந்தா'' என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றிவந்து அதன் சிவராத்திரி சிவபூஜைக்கு இடையூறு செய்தான்.''கோபாலா..கோவிந்தா'' என பீமன் திருமாலின் திருநாமத்தைக் கூறியபடியே ஓடினான்.திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும் புருஷாமிருகம் மிகவும் கோபமடைந்து பீமனை துரத்த ஆரம்பித்தது.உடனே பீமன் ஒரு ருத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான்.உடனே அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உருவாகியது.உடனே புருஷாமிருகம் ''சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' எனச் சொல்லி சிவலிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.சிறிது நேரம் கழித்து பீமன், ‘கோபாலா
கோவிந்தா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்றபோது  புருஷாமிருகம் கோபமுற்று மீண்டும் பீமனை துரத்திச் சென்று பற்றிக்கொள்ள எத்தனிக்கும்போது அடுத்த ருத்திராட்சத்தை அங்கு போட்டுவிட்டு ஓடத்தொடங்கினான் பீமன்.இதனால் அந்தஇடத்திலும் ஒரு சிவலிங்கம் உருவானது.உடனே பீமனை விடுத்து சிவலிங்க பூஜையில் ஆழ்ந்தது புருஷாமிருகம்.மறுபடியும் பீமன் ஓட,புருஷாமிருகம் துரத்த,பீமன் ருத்திராட்சம் போட, இவ்வாறு 12 ருத்திராட்சங்களும் 12 சிவத்தலங்களை
உருவாக்கி விடுகிறது.இதில் 12வது ருத்திராட்சம் விழுந்த திருநட்டாலத்தில் ஈசனுடன் கிருஷ்ணர் இணைந்து சங்கர நாராயணனாக புருஷாமிருகத்துக்கு திருக்காட்சி அளித்தார்.கூடவே ஈசன் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்திலும் அருளினார்.கட்டுரையாக்கம்:தென்குமரி.சிவ.அ.விஜய்
பெரியசுவாமி,இதன்படி சிவவிஷ்ணு ஐக்கியத்தை உணர்ந்த புருஷாமிருகம் அரியும்
அரனும் ஒன்றே என்பதனை உணர்ந்து 'அருணாச்சலனே..திருக்கயிலை நாதனே..சங்கர நாராயணா..சிவனே..மகாதேவா' என்றும் 'கோபாலா கோவிந்தா' 'அப்பனே சிவனே வல்லபா' என்றும் கூறி நட்டாலத்தில் தோன்றிய சங்கர நாராயணரைத் துதித்து சந்தோஷக் களிப்பில் தருமரின் யாகத்துக்கு பால் அளிக்க ஒத்துக்கொண்டது.இன்றும் திருநட்டாலத்தில் இரு கோயில்கள் உள்ளன.ஒன்றில் ஈசன் அர்த்தநாரீஸ்வர
மகாதேவர் எனும் திருநாமத்திலும்,இன்னொரு ஆலயத்தில் சங்கர நாராயணராகவும் அருள்கிறார்.சிவாலய ஓட்டம் தொடர்புடைய திருக்கோயில் தூண் சிற்பங்களில்
பீமனைத் துரத்தும் புருஷாமிருகத்தை நாம் காணலாம்.இந்த புராண நிகழ்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய புருஷாமிருகம் 'சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' என சிவபூஜை செய்ய,பீமன் 'கோபாலா கோவிந்தா’ எனக் குரல் எழுப்ப புருஷாமிருகம் பீமனை துரத்த என மஹாசிவராத்திரி நன்னாளில் இப்படி பன்னிரண்டு சிவாலயங்களும் உருவானதால் இந்நிகழ்வினை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும்  மஹாசிவராத்திரி நன்னாளில் ''சோணாசலா அருணாசலா .மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' , 'கோபாலா கோவிந்தா’ ,'மகாதேவா சிவனே வல்லபா சங்கரநாராயணா' என்றும் கூறி அடியவர்கள் இந்த பன்னிரு சிவாலயங்களிலும் வழிபடுகிறார்கள்.இதனையே 'சிவாலய ஓட்டம்' என்கிறார்கள்.பன்னிரு சிவாலயங்களும் மஹாசிவராத்திரி நன்னாளில் உருவானதால் இந்த பன்னிரு சிவாலயங்களிலும் மாத சிவராத்திரி,மகா சிவராத்திரி நன்னாட்கள் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சிவராத்திரி நாட்களில் இந்த தலங்களில் வழிபட கிரக தோஷங்கள்,பழவினைகள் அகன்று பதினாறுவகை நற்பேறுகளும் கிட்டும் என்கிறார்கள். தற்போது சிவராத்திரி நாளில் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சென்றும் வழிபடுகிறார்கள்.இருந்தாலும் முறைப்படி ஓடிச் சென்று வழிபடுவது மிகச்சிறப்பாம்.உடம்பில் சட்டை அணியாமலும்,காலில் செருப்பு அணியாமலும்,காவி அல்லது மஞ்சள் வேட்டி அணிந்து,ருத்திராட்சம் கழுத்தில் அணிந்து,விபூதி தரித்து,ஒரு திருநீற்று பையும்,கையில் ஒரு விசிறியும் வைத்துக்கொண்டு ''சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' , 'கோபாலா கோவிந்தா’ ,'மகாதேவா சிவனே வல்லபா சங்கரநாராயணா'' என்றும் கோஷத்தை
ஒலித்தபடியே  பன்னிரண்டு சிவாலயங்களையும் சிவராத்திரி நாளில் தரிசிப்பர்.இவர்களை 'சிவ கோவிந்தன்மார்' என்று அழைக்கிறார்கள்.திருநீற்றுப் பையில் அந்தந்த ஆலயங்களில் தரும் திருநீற்றை
வைத்துக்கொள்கிறார்கள்.அதுபோல கையில் இருக்கும் விசிறியால் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு வீசி பூஜை செய்கிறார்கள் இந்த சிவகோவிந்தன்மார்கள்.வாழ்க்கை ஓட்டத்துக்கான சகல நலன்களையும்,வளங்களையும் மகாசிவராத்திரி சிவாலய ஓட்டத்தின்மூலம் பெற்றுய்யலாம் என்கிறார்கள்.சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர்,காபி,பானகம்,சுண்டல்,கஞ்சி
தானம்,தினைக்கஞ்சி,எரிசேரி,புளியோதரை,எலுமிச்சை சாதம் என பலப்பல தானங்களையும் பொதுமக்கள் செய்கிறார்கள்.முற்காலங்களில் சிவராத்திரி அன்று மாலையில் சிவாலய ஓட்டத்தினை பக்தர்கள் தொடங்குவார்கள்.தற்போது சிவராத்திரி அன்று காலையிலேயே பக்தர்கள் சிவாலய ஓட்டத்தினை
தொடங்குகிறார்கள்.சிவாலய ஓட்ட முதற்கோயிலான முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோயில் நாகர்கோயில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள
மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இங்கு பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான விசிறி,திருநீற்று பைகள் கிடைக்கின்றன.முஞ்சிறையில்
இருந்து அடுத்துவரும் சிவாலய ஓட்டத் திருத்தலமான திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில்10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திக்குறிச்சியில் இருந்து அடுத்துவரும் திருத்தலமான திற்பரப்பு வீரபத்திரர் மகாதேவர் திருக்கோயில் அருமனை எனும் ஊர்வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திற்பரப்பிலிருந்து அடுத்துவரும் திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் திருக்கோயில் குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திருநந்திக்கரையில் இருந்து பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் திருக்கோயில் 7கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.பொன்மனையில் இருந்து அடுத்துவரும் திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி மகாதேவர் திருக்கோயில் குமாரபுரம்,முட்டைக்காடு வழியாக 11கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திருப்பன்னிப்பாகத்திலிருந்து 6
கிலோமீட்டர் தூரத்தில் கல்குளம் எனும் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.கல்குளத்தில் இருந்து அடுத்துவரும் சிவாலய ஓட்டத்திருத்தலமான மேலாங்கோடு காலகாலர் திருக்கோயில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து அடுத்துவரும் திருவிடைக்கோடு எனும் வில்லுக்குறி சடையப்பர் திருக்கோயில் 6 கிலோமீட்டர்
தூரத்தில் அமைந்துள்ளது.திருவிடைக்கோடு திருத்தலத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி திருக்கோயில்
அமைந்துள்ளது.திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர் விளை,பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பன்றிக்கோடு பக்தவச்சலர் திருக்கோயில் அமைந்துள்ளது.திருப்பன்றிக்கோடு திருத்தலத்தில்
இருந்து சிவாலய ஓட்டத் திருத்தலத்தின் நிறைவுக் கோயிலான திருநட்டாலம் சங்கரநாராயணர்,அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.பன்னிரு கோயில்கள் பற்றியும் சுருங்கப்  பார்த்துவிடுவோம்:
''முஞ்சிறை திருமலைக்கோயில்'':
இதுவே சிவாலய ஓட்டத்தின் முதல் கோயிலாகும்.குன்றின் மேல் அமைந்துள்ளது.திருமலை நாயக்கர் மன்னர் இத்தல ஈசனின் அருளால் அவரது தாய் உதிச்சிக்கு மகவாய் பிறந்தார்.பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் இங்கு சிறைபிடித்து வைத்ததால் இத்தலம்  முஞ்சிறை ஆயிற்று.அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே இத்தல ஈசன் சூலபாணியாம்.இங்கு ஈசன் மகாதேவர் என்றும் சூலபாணி என்றும் அழைக்கப்படுகிறார்.பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான திருநீற்று பை,விசிறி முதலியன இங்கு கிடைக்கும்.நாகர்,அய்யப்பன் சன்னதிகளும் உள்ளன.மாசி கும்பாஷ்டமி,கார்த்திகை மாத விருட்சிகாஷ்டமி,பங்குனி திருவிழா சிறப்பாம்.நாகர்கோயில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திக்குறிச்சி கோயில்'':
இங்கு ஈசன் மகாதேவன் எனப்படுகிறார்.நந்தி கிடையாது.ஆம்!அருகில் உள்ள தாமிரபரணி நதிக்குள் நந்தி இருப்பதாக ஐதீகம்.சாஸ்தா,காலபைரவர்,ஆகாய யட்சி சன்னதிகளும் உள்ளன.மார்கழி திருவாதிரையில் ஆறாட்டு விழா நடக்கிறது.சிவராத்திரி நாளில் பெண்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.முஞ்சிறையில்
இருந்து திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.கட்டுரையாக்கம்:குமரி.சிவ.அ.விஜய் பெரியசுவாமி

''திற்பரப்பு திருக்கோயில்'':
 இங்கு மூலவருக்கு தீபாராதனை செய்யும்போது இடது பக்கமாக சுற்றிச்செய்கிறார்கள்.மூலவர் வீரபத்திரர் என்னு திருநாமத்தில் அருள்கிறார்.நந்தி சற்று விலகி வடக்கு நோக்கிய வண்ணம் உள்ளது.இங்கு பூரணை புஷ்கலை  சாஸ்தா,நவநீத கிருஷ்ணன்,ஜுரதேவர்,பத்திரகாளிக்கும்,புளியமர இசக்கி அம்மனுக்கும் தனிக்கோயில்கள் அருகிலேயே உள்ளன.பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது.ருத்ர பூஜை,ருத்ர கலச பூஜை,மிருதுஞ்சய ஹோமம்  இங்கு சிறப்பாம்.திக்குறிச்சியில் இருந்து அருமனை எனும் ஊர்வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருநந்திக்கரை கோயில்'':
 மூலவர் நந்திகேஸ்வரர்.அவரின் எதிரில் நந்தி ஆழமான குழிக்குள் உள்ளது.நாகர்,கண்ணன்,சாஸ்தா,பரசுராமர் சன்னதிகளும் உள்ளன.இத்தல மேற்குச்சுற்று சுவரில் கொட்டாரம் யட்சி ஓவியவடிவில் அருள்கிறாள்.திற்பரப்பிலிருந்து குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''பொன்மனை கோயில்'':
 மூலவர் தீம்பிலான்குடி மகாதேவர்.மூலவரின் சிரசில் வெட்டுப்பட்ட வடு உள்ளது.நாகலிங்க மரங்கள் அதிகம் உள்ளன.நாகர்,யட்சி,சாஸ்தா சன்னதிகளும் உள்ளன.மாதாந்திர ஆயில்யம்,பங்குனி ஆறாட்டு  விழா சிறப்பாம்.திருநந்திக்கரையில் இருந்து  7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருப்பன்னிப் பாகம்  கோயில்'':
 மூலவர் கிராதமூர்த்தி மகாதேவர்.சாஸ்தா,காலபைரவர்,லிங்கவடிவ நிர்மால்ய தேவர் சன்னதிகளும் உள்ளன.இங்கு அக்காலத்தில் பூஜையின் போது புல்லாங்குழல் இசைக்கப்பட்டதாம்.பொன்மனையில் இருந்து  குமாரபுரம்,முட்டைக்காடு வழியாக 11கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''கல்குளம் பத்மநாபபுரம் கோயில்'':
மூலவர் நீலகண்டர்.அம்பாள் ஆனந்தவல்லி என்பதாம்.பன்னிரு சிவாலய ஓட்ட திருக்கோயில்களில் இங்கு மட்டும்தான் அம்பாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.சாஸ்தா,நடராஜர்,பூதத்தான்,மாடன் தம்புரான் சன்னதிகளும் உள்ளன.ஐந்துநிலை ராஜகோபுரம்  மிக அழகாம்.திருப்பன்னிப்பாகத்திலிருந்து 6
கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''மேலாங்கோடு கோயில்'':
 வேளிமலை அடிவாரத்தில் இக்கோயில் உள்ளது.மூலவர் காலகாலர் எனப்படுகிறார்.இங்கு வெடிவழிபாடு நேர்ச்சை உண்டு.அருகிலேயே அக்கா இசக்கி,தங்கை இசக்கி கோயில்கள் உள்ளன.நாகர்,பூதத்தான் சன்னதிகளும் உள்ளன.கல்குளத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருவிடைக்கோடு திருக்கோயில்'':
 வில்லுக்குறி என தற்போது இத்தலம் அழைக்கப்படுகிறது.மூலவர் சடையப்பர்.பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் இன்றும் ஈசனை அனுதினமும் வழிபடுகிறாராம்.நாகர்,சாஸ்தா சன்னதிகளும் அமைந்துள்ளன.மாசி கும்பாஷ்டமி,ஆயில்யம்,அமாவாசை,ஆனி துவாதசி வழிபாடு சிறப்பாம்.மஹாசிவராத்திரியில் 114 படி அரிசி சமைத்து 156கட்டி சாதமாக படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

''திருவிதாங்கோடு கோயில்'':
 மூலவர் நீலகண்டர் எனும் மகாதேவர்.ஈசான சிவன் என்றும் அழைக்கிறார்கள்.கஜசம்காரர்,புருஷாமிருகம் சிலை மிகவும் அழகு.சாஸ்தா,நாகர் சன்னதிகளும் உள்ளன.மஹாவிஷ்ணுவுக்கும் தனி ஆலயம் உள்ளது.திருவிடைக்கோடு திருத்தலத்திலிருந்து தக்கலை,கேரளபுரம் வழியாக தெற்கில் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருப்பன்றிக்கோடு கோயில்'':
 மூலவர் பக்தவச்சலர் எனும் மகாதேவர்.வள்ளி தெய்வானை முருகர்,சாஸ்தா,நாகர் ,நிர்மால்ய தேவர் சன்னதிகளும் உள்ளன.ஒருமுறை பூமியை மீட்க வேண்டி வராஹம் எனும் பன்றி வடிவம் எடுத்த திருமால்  பின்னர் இத்தலத்தில் ஈசனை வழிபட்டே தம் சுய உருவினை மீண்டும் அடைந்தார். அஷ்டமி வழிபாடு இங்கு சிறப்பு.மாசி மாத அஷ்டமியில் குன்னம்பாறை சாஸ்தா கோயிலில் இருந்து களப கும்பம் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிசேகம் செய்கிறார்கள்.இங்கு அம்பாள் சந்நதி உள்ளது.கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் தொடங்கி இங்கு பெருவிழா நடக்கிறது.கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியில் ஆறாட்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர்
விளை,பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரத்தில்  அமைந்துள்ளது.

''நட்டாலம் கோயில்'':
நட்டாலத்தில் மகாதேவர் கோயில் எனும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஒன்றும்,சங்கர நாராயணர் கோயில் ஒன்றுமாக இருக்கோயில்கள் உள்ளன.புருஷாமிருகத்துக்கும்,பீமனுக்கும் சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த தலம் இதுவாகும்.கருவறையில் லிங்கவடிவில் சங்கரநாராயணர் உள்ளார்.பங்குனியில் ஆறாட்டு விழா சிறப்பாம்.திருப்பன்றிக்கோடு திருத்தலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில்
அமைந்துள்ளது.
சிவராத்திரி நன்னாளில் விரதமிருந்து இரவு முழுவதும் கால்வலிக்க சிவாலயஓட்டம் ஓடி பன்னிரு சிவாலயங்களையும் வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் பதினாறுவகை நற்பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள்.
'நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே' என்பது திருமூலர் வாக்காகும்.அதற்கேற்ப சிவராத்திரி நன்னாளில் சிவாலய ஓட்டம் ஓடி சிவபெருமான் ஆலயங்களைத் தரிசித்து வாழ்வின் வாட்டம் போக்குவோம்.மஹாசிவராத்திரி நன்னாளில் சிவாலய ஓட்டம் பங்கேற்கும் அத்தனை சிவகோவிந்தன்மார்களின்,அடியார்களின் திருப்பாதத்தை என் இதயத்தில் தாங்குகிறேன்.அனைவருக்கும் ''மஹாசிவராத்திரி விரதம்'' சிறப்பாய்  பூர்த்தியடைய அம்மையப்பனை இறைஞ்சுவோம்.
''ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி''.."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது
நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான்
எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன்
மலரடிநிழலில்"

பழையமுதும்...மாவடுவும்

*பழையமுதும்...மாவடுவும்!!!*

ரங்கநாத பெருமான் பள்ளி 
கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் 
எல்லா நாளுமே திருநாள் தான். 

அதில் வித்தியாசமான, ஆனால் 
எல்லோரையும் நெகிழ வைக்கும் 
திருவிழா ஒன்று பங்குனி 
பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் 
நாள் நடைபெறுகிறது.

பழைய சோறும், மாவடுவும் என்று 
புகழப்படும் இந்த திருவிழாவில் 
கலந்து கொள்ள ரங்கநாத 
பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. 
அதன்பிறகு முகம் திருத்தும் 
தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது.

இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், 
மாவடுவும் அளிக்கப்படுகிறது. 
வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று 
நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், 
இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது.

ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் 
அன்றோ திருமால், அவன் ஒரு 
ஏழைப் பாட்டிக்காக அவளின்
பேரனின் வடிவம் தாங்கி வந்த
திருவிளையாடலைத்தான் பார்க்க
இருக்கிறோம்.

ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை 
அருகே உள்ள அழகான கிராமம். 
அந்த ஊரில் ரங்கநாதரையே 
சர்வகாலமும் நினைத்து வாழும்
ஒரு பாட்டி இருந்து வந்தாள்.
இளமையிலேயே கணவனை 
இழந்த அவளுக்கு இரண்டே 
உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத 
பெருமாள், மற்றொருவர் அவளின் 
பேரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான்.
மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் 
பேரன் ரங்கன் இழுத்துச் 
செல்லப்பட்டான். 

நேரமாகியும் திரும்பாத பேரனை 
எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். 
ரங்கநாத பெருமாளை தொழுது 
அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த 
ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை 
தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி 
சொன்னான். தன்னை எண்ணி 
இந்நேரம் பாட்டி அழுவாளோ 
என்று பதறி ரங்கநாதரிடம் 
முறையிட்டான். உடனே கிளம்பினான். பேரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா?

காவிரியின் வெள்ளம் கண்டு 
அழுது புலம்பிக் கொண்டிருந்த 
பாட்டியை ஆற்றுதல் படுத்த 
கிளம்பினார் பரந்தாமன். ஆம், 

பாட்டி அழுது கொண்டிருந்த 
ஜீயர்புரத்து காவிரி கரையருகே 
முகத்திருத்தம் செய்த முகத்தோடு 
குளித்து எழுந்த நிலையில் 
பாட்டியின் பேரன் ரங்கனாகவே 
வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பேரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள். பசித்திருந்த 
பேரனுக்கு பழைய சோறும் 
மாவடுவும் அளித்து சாப்பிட 
சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பேரன் ரங்கன் வந்துவிட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான்.
பாட்டியும் பேரனும் ரங்கநாத 
பெருமானின் அருளை எண்ணி 
தொழுதார்கள். 

அவரின் திருவுளம் எண்ணி 
அழுதார்கள். அன்று பக்தையை 
ஆறுதல் படுத்த வந்து பழைய 
சோறும், மாவடுவும் உண்ட 
ரங்கநாத பெருமாள் இன்றும் 
அதை நினைவூட்ட ஆண்டுதோறும் 
பிரம்மோற்ஸவ விழாவில் இதை 
நடத்தி வருகிறார். ஏழைக்கு
ஏழையான நம்பெருமாள் என்றுமே 
நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது .

Tuesday, March 5, 2024

வணிகர் என்றால் என்ன ???

*வணிகர்* என்றால் என்ன ???

1 சொந்தப் பணத்தில் தொழில் தொடங்குகிறார்.

2 வணிகத்தின் முழுப் பொறுப்பு .

3 ஒரு வணிகத்தை நிறுவ அல்லது நடத்த கடினமாக உழைக்கிறார்.

4 நஷ்டத்திற்கு எந்த அரசும் பொறுப்பல்ல.

5 ஆனால் வரி வடிவில் லாபத்தில் அரசுக்கு உரிமை உண்டு.

6 தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன் சொந்தப் பணத்தில் வைத்தியம் செய்கிறான்

7 அனைத்து பயணங்களையும் (குடும்பம் அல்லது வணிகம்) தனது சொந்த பணத்தில் செய்கிறார்.

8 குடும்ப உறுப்பினர்களின் கல்விச் செலவை அவர் தனது சொந்தப் பணத்தில் இருந்து கவனித்துக் கொள்கிறார்.

9 வணிகர் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை அல்லது ஓய்வு பெற்றவுடன் எவரும் அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெறுவதில்லை.

10 வணிகர்களுக்கு எந்தவொரு அகவிலைப்படியும் கிடைக்காது.

11  வணிகருக்கு விடுப்பு இல்லை, அவர் செல்ல வேண்டியிருந்தால், குடும்ப உறுப்பினரின் கூடுதல் கடமை.

12 மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு வணிகர், பொருட்களை விற்ற பிறகு, அரசாங்கத்திடம் இருந்து சம்பளமோ கமிஷனோ பெறாத பொதுமக்களிடமிருந்து வரி வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்தி விடுகின்றார்., அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தையும் செலுத்தி விடுகின்றார்.

13  சமுதாய நலன் கருதி நன்கொடை அளிப்பது, உணவு  வழங்குவது, சமூக-மத-அரசியல் பணிகளில் பங்களிப்பது போன்றவை.

14. வணிகர்களால் வேலைவாய்ப்பு உருவாகின்றது

15. வணிகர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கான செலவுகளையும் பல்வேறு சமயங்களில் ஏற்றுக் கொள்கின்றார்.

 இப்போது வணிகர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம்.  

Saturday, March 2, 2024

300 வருடங்களுக்குப் பிறகு; அபூர்வ மகா சிவராத்திரி

300 வருடங்களுக்குப் பிறகு; அபூர்வ மகா சிவராத்திரி; நினைத்தது நடக்க 6 எளிய வழிபாடுகள்!

2024 மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன.

விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன. மகா சிவராத்திரி அன்று ஈசனைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர், சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி வரவுள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெற உள்ளன. அப்போது சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், முற்றோதல்கள் போன்ற வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். கூடவே ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. இந்த மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும். மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வவளம் சேரும்.

சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் யோகம். இந்த யோக நாளில் ஈசனை வழிபட காரியத் தடைகள் அகன்று எண்ணியவை எளிதாக நிறைவேறும். சிவ யோகம் என்றால் தியானிக்கும் வேளை. இந்நாளில் செய்யப்படும் யோகா, தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம் ஆகியவைகளால் பன்மடங்கு பலன் கிடைக்கும். 2024 மகா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவ யோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது.

ஷிரவண நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது. இந்த நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமாக முடியும். இந்த மகா சிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட்டால் உங்கள் தொழில், வியாபாரம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் திருப்தியாக அமையும். மேலும் உங்கள் ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கி விடும்.

ஐந்து யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்யத் தவறாதீர்கள். சிவ யோக வேளையில் நீங்கள் செய்யும் வழிபாடு ஈசனின் பரிபூரண அருளை பெற்றுத் தரும். உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் வாரிசுகள் நலமோடு வாழ்வார்கள். சித்த யோகம் கூடி வருவதால் விநாயகப் பெருமானையும் இந்நாளில் வணங்கி வேண்டும். இதனால் தொடங்கப்படும் சுப காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். இந்த மகா சிவராத்திரி காலத்தில் நீங்கள் இருக்கும் விரதம் உங்களையும் உங்கள் சுற்றத்தையும் செல்வ வளமாக்கும்.

மகா சிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்கிறோம். இந்த நாளில் ஈசனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம், தீராத வியாதிகள், குறையாத கடன்கள், அனைத்தும் தீர்ந்து விடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

வீட்டில் மகா சிவராத்திரி எப்படி வழிபட வேண்டும்?

மகா சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் போன்றவற்றை செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசிக்க வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால வழிபாடுகளை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, வைக்க வேண்டும். மாலை நேர வழிபாட்டை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கத்தை வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து வழிபட வேண்டும்.

அன்று இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்ய முடியாவிட்டாலும், ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.

இது தவிர இந்த ஆண்டு விசேஷ ஐந்து யோகம் கூடும் நாள் என்பதால் முக்கியமாக இந்த 6 எளிய வழிபாட்டையும் செய்ய வேண்டும்.

(01) விநாயகருக்கு அருகம்புல் சாத்தி அவரை முதலில் வணங்கினால் சித்த யோகம் உங்களை சிறப்பாக்கும்.

(02) சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி இந்நாளில் வணங்க ஷிரவண நட்சத்திர வேளை உங்களுக்கு சுபயோகத்தைக் கொண்டு வரும்.

(03) சுக்கிர பிரதோஷம் மகா சிவராத்திரி நாளில் வருவதால் நந்தியெம்பெருமான் வழிபாடும் நலம் சேர்க்கும்.

(04) சர்வார்த்தி ஸித்தி யோக நாள் என்பதால் இந்நாளில் குலதெய்வ வழிபாடும் செய்து பித்ருக்களின் ஆசியால் வெற்றி பெறலாம்.

(05) மகா சிவராத்திரி நாளில் இடர் களையும் பதிகங்கள் பாடி ஈசனைத் தொழ வந்த தீ வினைகள் நீங்கும். வரவிருப்பவை நலமாக அமையும்.

(06) சர்வ யோகங்களையும் அருளும் இந்நாளில் 4 கால பூஜைகளையும் கண்டு தரிசித்தால் இக, பர இன்பங்கள் யாவும் சேரும்.

மேலும் மகா சிவராத்திரி அன்று அகோராஸ்திர பூஜை செய்தால் உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக சிறப்புடன் அமையும். சித்தர்களின் குரல். அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையில் 18 சித்தர்கள் வாழ்ந்து சிவனை பூஜித்த வேலோடுமலையில்  விசேஷமான மகா சிவராத்திரி 4 கால பூஜைகளை நடத்தவுள்ளது. தீராத கடன்களையும் நோய்களையும் தீர்த்து வைக்கும் இந்த விசேஷ வழிபாட்டில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...