Friday, March 3, 2023

உயிரோடு வருவதற்கு பிரபாகரன் என்ன கடவுளா? கோத்தபய ராஜபக்சே

 உயிரோடு வருவதற்கு பிரபாகரன் என்ன கடவுளா? 

கோத்தபய ராஜபக்சே கேள்வி!


"உயிரிழந்த  பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா" இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி உள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், "மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ம் ஆண்டே அத்தனையும் முடிந்து போய்விட்டது. முடிவுக்கும் வந்துவிட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதி போரில் உயிரிழந்துவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி பலர் சுயநல அரசியல் செய்ய முனைகின்றனர், இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது முட்டாள்தனமான செயல். உயிரிழந்த  வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா"என முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளது

 எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளது: சீனா குற்றச்சாட்டு!


அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக சீனா பதிலடி கொடுத்துள்ளது .

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், "கடந்த 2022-ஆம் ஜனவரி தொடங்கி இதுவரை சீன வான் எல்லையில் அமெரிக்கா 10 பலூன்களை பறக்கவிட்டுள்ளது. அந்த பலூன்களை நாம் பொறுப்புடன், தொழில்ரீதியாக அணுகியிருக்கிறோம்" என்றார்.

கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வடக்கு கரோலினாவில் சீன பலூன் ஒன்று பறந்தது. அந்த பலூன் 4 பேருந்துகள் அளவிற்கு பெரியதாக இருந்தது. அது சீனாவின் உளவு பலூன் என்று கூறி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனையடுத்,து சீன பயணத்தை வெளியுறவு செயலர் ஆந்தணி பிளின்கன் ரத்து செய்தார். ஆனால், அமெரிக்கா அதீதமாக எதிர்வினையாற்றுகிறது. அது வெறும் ஒரு தனியார் நிறுவனத்தின் வானிலை ஆய்வு பலூன் என்று சீனா தெரிவித்தது.

இதற்கிடையில், அமெரிக்கா 3 வெவ்வேறு மர்மப் பொருட்களை வடக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளது. அவை சீனாவுடையதா என்பதெல்லாம் அமெரிக்கா விவரிக்கவில்லை. இருப்பினும் சந்தேகத்துக்கு இடையே பறந்தததால் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. இந்நிலையில்தான் பலூன் விவகாரத்தில் அமெரிக்காவைவிட தாங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டதாக சீன தெரிவித்திருக்கிறது.

அண்மையில், அமெரிக்கா வீழ்த்திய மர்மப் பொருட்கள் கனடா நாட்டின் எல்லைக்கு மிக மிக அருகில் விழுந்ததால், அந்தப் பகுதிக்கு நேற்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-ஆக நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-ஆக நியமனம்


யூடியூப் தளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

யூடியூப் தளத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சூசன் வோஜ்சிகி அறிவித்தைத் தொடர்ந்து, நீல் மோகன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டதாரியான 49 வயதாகும் நீல் மோகன் கடந்த 2015ம் ஆண்டு முதல் யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக உள்ளார்.

நீல் மோகன் தனது பணியை அக்சென்ச்சரில் 1996ம் ஆண்டு தொடங்கினார். பின்னர் நெட்க்ராவிடி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த நிறுவனம் இணை விளம்பர நிறுவனமான டபிள்க்ளிக் -ஆல் வாங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு டபிள்க்ளிக் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீல் மோகன், அட்வோர்ல்ட், அட்சென்ஸ், டபுள்க்ளிக் உள்ளிட்ட கூகுளின் விளம்பர தயாரிப்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

நீல் மோகன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். அங்கு அவர் கார்ப்பரேட் யுத்திகளை வகுக்கும் மேலாளராக இருந்துள்ளார்.  அமெரிக்காவின் பர்சனல் ஸ்டைலிங்க் சேவை நிறுவனமான ஸ்டிட்ச் ஃபிக்ஸ், பயோடெக் நிறுவனமான 23அண்ட்மீ ஆகியவைகளின் நிர்வாக குழுவில் நீல் மோகன் இருந்துள்ளார். 

உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு

 

உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக 5.5 பில்லியன் டாலர்(45 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நேட்டோ(NATO) படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. கடந்த  பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய போர் ஓராண்டை எட்டியுள்ளது.இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன. மேலும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில் ஜப்பான் ஏற்கெனவே உக்ரைனுக்கு உதவி வரும் நிலையில், மேலும் 5.5 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி வழங்க முடிவு செய்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இதனை அறிவித்துள்ளார்.  அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், போரினால் வாழ்வாதாரங்கள் இழந்த மக்களுக்கு இன்னும் உதவ வேண்டிய அவசியம் உள்ளது. அங்கு அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும். அதனால் 5.5 பில்லியன் டாலர் கூடுதல் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி, நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும் உக்ரைன் போர் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் ஜி7 நாடுகளின் கூட்டம் காணொலி வழியாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 

வருகிற மே மாதம் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 நாட்டுத் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜப்பான் தலைமை தாங்கவுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவிக்கும் என்றும் சட்டத்தின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான, சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான உலகின் முயற்சிகளை ஜப்பான் வழிநடத்தும் என்றும் கூறினார். 

இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது: பில் கேட்ஸ் புகழாரம்

இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான பில்கேட்ஸ், நோட்ஸ் என்ற தனது வலைப்பதிவில் அவ்வப்போது தனது கருத்துகளையும் எண்ணங்களையும் பில் கேட்ஸ் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டிருப்பதாவது,  இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது மற்றும் உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும், நாடு பெரிய பிரச்சினைகளை ஒரே நேரத்தில் தீர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது புகழாராம் சூட்டியிருக்கிறார்.

மேலும், சரியான முன்முயற்சிகள் மற்றும் அதனை கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் மூலம் உலகம் பல பெரிய பிரச்னைகளில் ஒரே நேரத்தில் தீர்வுகண்டு முன்னேற முடியும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார். உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, பொதுவாக தனக்கு பல தரப்பிலிருந்தும் இந்த இரண்டு பதில்கள்தான் கிடைத்துக் கொண்டிருந்தன. அவை, "இரண்டு பிரச்னைகளை ஒரே நேரத்தில் தீர்க்க போதுமான நேரம் இல்லை அல்லது பணம் இல்லை என்பதுவே.

ஆனால் இந்தியா மேற்கண்ட பதில்களை தவறு என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. "இதற்கு, இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை விட சிறந்த ஆதாரம் எதுவும் இல்லை. இதன்படி, ஒட்டுமொத்தமாக இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது. இது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறப்போகிறது, அதாவது இங்குள்ள பெரும்பாலான பிரச்சனைகளை இந்தியா தீர்க்காமல் உங்களால் தீர்க்க முடியாது என்ற நிலை ஏற்படப்போகிறது. 

ஆனாலும், இந்தியா பெரிய சவால்களை சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. நாடு போலியோவை ஒழித்தது, எச்ஐவி பரவலைக் குறைத்தது, வறுமையைக் குறைத்தது, குழந்தை இறப்புகளைக் குறைத்தது, சுகாதாரம் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை அதிகரித்தது" என்று அவர் இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த வலைப்பதிவை பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பூகம்பத்தில் 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்

 




துருக்கியில் நில நடுக்கத்தால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது 

துருக்கியில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் நிகழ்ந்தது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில், துருக்கியில் மட்டும் பல்வேறு பகுதிகளில் ஒருலட்சத்து 60 ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. அவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்தனர். அவர்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் வீடுகளை இழந்துமுகாம்களில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம் தெரிவித்தது. அதற்கேற்ப பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. அதற்கான டெண்டர்கள், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியில் அதிபர் தேர்தல்நடைபெற உள்ளது. இதனால்ஓராண்டுக்குள் புதிதாக வீடுகளை கட்டி முடிக்க அதிபர் எர்டோகன் உறுதி அளித்துள்ளார். எனினும், வீடுகள் கட்டும்போது பூகம்பம் நிகழும் துருக்கியில் அதற்கேற்ப பாதுகாப்பான முறையில் வீடு கள் கட்டப்பட வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டர் நீக்கம்: ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு

 உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். 


ரஷ்யா - உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த வகையில் மொஸ்கலோவ்வும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் உக்ரைனுக்கு பயணம் செய்த சவுதி வெளியுறவுத் துறை ஃபர்கான் அல் சவுத் சுமார் 400 மில்லியன் டாலர் உக்ரைனுக்கு நிவாரண உதவியாக வழங்கினார். சவுதி - உக்ரைன் இடையேயான உறவில் இது மிக முக்கிய நகர்வு என்றும், உண்மையான உதவியை சவுதி செய்துள்ளது என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள்

 ஒருவேளை உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள்? என்ற நடைமுறை கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிப்பதில் இருந்து சிகிச்சை வரை... நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.


முதலில் பதற்றம், பயம் கொள்ளக்கூடாது. அதேவேளை கரோனா தொற்றின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் தாமதிக்காமல் கண்டறிய வேண்டும்.

தொற்றின் அறிகுறிகள்

1. காய்ச்சல்

2. இருமல்

3. மூக்கடைப்பு/ மூக்கு ஒழுகுதல்

4. நுகர்தல்/ சுவைத்தல் திறன் இழப்பு

5. வயிற்றுப்போக்கு

6. கண்கள் சிவந்து போதல்

7. மூச்சு விடுவதில் சிரமம்

8. மூச்சுத்திணறல்

9. அதீத உடல் சோர்வு

10. அன்றாட வேலைகளைச் செய்ய இயலாமை

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் தங்களின் குடும்பத்தாரிடம் இருந்தும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியே எங்கும் உலவக் கூடாது.

வீட்டுக்குள் ஒருவருக்குத் தொற்றுக்கான அறிகுறிகள் தொடங்கினாலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் . ஆறடி இடைவெளி விட்டு இருக்க வேண்டும். இது மற்றவருக்குத் தொற்று பரவாமல் தடுக்கும்.

இதற்கடுத்த வேலை, காலை வேளையில் அருகில் இருக்கும் அரசு சுகாதார நிலையங்களுக்குச் சென்று தொண்டை/மேல் நாசித் தடவல் பரிசோதனைக்கு சாம்பிள் கொடுக்க வேண்டும்.

பரிசோதனைக்குக் கொடுத்துவிட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை 500 மில்லிகிராம், ஆறு மணிநேரத்துக்கு ஒரு முறை போடலாம்.

அடுத்த நாள் பரிசோதனை ரிசல்ட் `நெகட்டிவ்' என்று வந்தால் அறிகுறிகள் முற்றிலுமாகக் குணமாகும் வரை தனிமையில் இருந்து வெளியே வரக் கூடாது. 'பாசிட்டிவ்' என்று ரிசல்ட் வந்தால் அரசு சுகாதாரத் துறையில் இருந்து தங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

தங்களுக்கு 45 வயதுக்குட்பட்டு இருந்தால் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய் போன்ற இணை நோய்கள் இல்லாமல் இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி, தனியாக கழிப்பறையுடன்கூடிய அறை இருப்பின் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள்.

தங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் வளர்கின்றனவா, தேய்கின்றவனா என்பதைக் கண்காணித்து வர வேண்டும். அலட்சியம் ஆகாது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது உங்கள் கையில் இருக்க வேண்டியது, `ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்' எனும் கருவி.

இதை கை விரல்களில் மாட்டிவிட்டால் உடலில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுகளைக் காட்டும். இதில் ஆக்சிஜன் அளவு 94%க்கு மேல் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

கூடவே தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் ஆறு நிமிடங்கள் தொடர்ந்து மிதமான வேகத்தில் (6 minute walking test) நடந்து விட்டு உடனே ஆக்சிஜன் அளவுகளைப் பார்க்க வேண்டும்.

நடப்பதற்கு முன்பு பார்த்த அளவைவிட 5% அளவு குறைந்திருந்தால் உடனே சுதாரிக்க வேண்டும். நுரையீரலில் கோவிட் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இவ்வாறு எந்தப் பிரச்னையும் இன்றி முதல் வாரம் கழிந்தால், மொத்தம் 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருந்துவிட்டு பிறகு சகஜ நிலைக்குத் திரும்பலாம். அதுவே ஆக்சிஜன் அளவுகள் 94%க்கு கீழ் குறைந்தாலோ, கூடவே மூச்சுத்திணறல், இடைவிடாத இருமல், மூச்சு விடுவதில் சிரமம், அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றினாலோ தங்களது சாதாரண கோவிட் நோய் மிதமான கோவிட் நோய் நிலைக்குச் சென்றிருப்பதை அறிய முடியும்.

தற்போது தொற்று அறிகுறிகள் ஆரம்பித்த ஆறாவது நாள் மருத்துவர் பரிந்துரையில் நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேன் எடுத்துப்பார்க்கலாம்.

அப்போது நுரையீரலில் கோவிட் நிமோனியாவின் தாக்கம் எத்தனை அளவில் உள்ளது என்பதை அறியலாம். அதைப் பொறுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆவது குறித்து மருத்துவர் அறிவுரை வழங்குவார். மருத்துவமனையில் நமக்கான படுக்கை கிடைக்கும் வரை வீட்டில் ப்ரோனிங் எனும் 'குப்புறப்படுத்தல்' நிலையை கடைப்பிடித்து வந்தால், நம்மால் நுரையீரலின் ஆக்சிஜன் அளவுகளை சிறப்பாகப் பராமரிக்க முடியும்.

வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகப் படுத்து இருப்பதால் நுரையீரலுக்கு பளு குறைந்து குறைவான வேலை செய்து நிறைவாக ஆக்சிஜனை அளிக்கும். மருத்துவர் இது கூடவே தேவைப்பட்டால் கோவிட் சார்ந்த உள்காயங்கள் உண்டாகியிருக்கின்றனவா என்பதை INFLAMMATORY MARKERS பரிசோதனையின் மூலம் கண்டறிவார். அதில் உள்காயங்கள் மற்றும் ரத்த உறைதல் தன்மை அதிகமாவது தெரிந்தால் அதற்குரிய ரத்த உறைதல் தடுப்பு மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை குன்றச் செய்யும் ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்படும்.

ஆக்சிஜன் அளவுகள் குறைவது தொடர்ந்தால் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்படும்.

கூடவே ரெம்டெசிவிர் எனும் வைரஸ் கொல்லி மருந்தும் ரத்த நாளம் வழி ஏற்றப்படும். மிக அதிகமான பாதிப்பை தரும் சைட்டோகைன் பிரளயம் ஏற்பட்டால் உடனே டொகிலிசுமாப் எனும் மருந்து ஏற்றப்பட்டு உயிர் காக்கப்படுகின்றது.

குழந்தை பருவத்தினரைப் பொறுத்தவரை தொண்டை வலி, இருமல், மூக்கடைப்பு/மூக்கு ஒழுகுதல் என்று சாதாரண கரோனா வெளிப்படும். சாதாரண கரோனாவில் குழந்தைகள் வேகமாக மூச்சுவிட மாட்டார்கள். சாதாரணமாக மூச்சு விடுவார்கள்.

அதுவே மிதமான கரோனா தொற்றில் 2 மாதத்துக்கு குறைவான குழந்தை எனில் நிமிடத்துக்கு 60 தடவைக்கு மேல், 2-12 மாதக் குழந்தைகள் நிமிடத்துக்கு 50 முறைக்கு மேல், 1 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் நிமிடத்துக்கு 40 தடவைக்கு மேல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நிமிடத்துக்கு 30 முறைக்கு மேல் மூச்சு விடுவார்கள்.

இந்த அறிகுறியை குழந்தைகளின் பெற்றோர்கள் கண்காணித்து உடனே குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்குக் கொடுத்து விட வேண்டும். இந்த நிலையில் ஆக்சிஜன் அளவுகளை பரிசோதனை செய்து வர வேண்டும்.

90% க்கு கீழ் குறைந்தாலோ மூச்சு விடும்போது அதிக சிரமத்துக்கு உள்ளானாலோ, அதிக தூக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டாலோ உடனே மருத்துவனையில் அட்மிட் செய்து சிகிச்சை வழங்கிட வேண்டும்.

இந்த நிலையைக் கண்காணிக்காமல் விட்டால் குழந்தைகளுக்கு தீவிர கரோனா நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொற்றுக்குள்ளாகும் ஒவ்வொரு 100 பேரிலும் 80% வீடுகளிலேயே தனிமைப்படுத்தத் தகுதியுள்ள சாதாரண தொற்றுக்கு உள்ளாகுபவர்களே ஆவர்.

இவர்களுக்கு நோய்த்தொற்று அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. மீதம் உள்ள 20 பேரில் 17 பேருக்கு மிதமான கரோனா தொற்று ஏற்படும். இவர்களுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்படலாம். 3 நபர்களுக்கு மட்டுமே தீவிர கரோனா ஏற்பட்டு செயற்கை சுவாச சிகிச்சை வரை செல்லும் வாய்ப்பு உண்டாகின்றது. எனவே, அச்சப்படாமல் எச்சரிக்கையுடன் அறிகுறிகளையும் ஆக்சிஜன் அளவுகளையும் கவனித்து வந்து சரியான நேரத்தில் முறையான சிகிச்சைகளை எடுத்தால் கரோனாவை நிச்சயம் வெல்ல முடியும்.

இதுவரை நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள்!!

 உடல்நல பிரச்சனைகளுக்காக நாம் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுவருவோம் ஆனால் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பலவும் எதுக்கு என்று நமக்கு தெரியாது அல்லது தவறாக புரிந்துவைத்து இருப்போம் அப்படி நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்


1) நரம்புஊசி

உடல்நல குறைவால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டால் நமது கையில் ஒரு ஊசியை போடுவார்கள் நம்மில் பலரும் அதை நரம்பு ஊசி என்று சொல்லுவது வழக்கும் உண்மையில் நமது உடலில் இருக்கும் எந்த நரம்பில் ஊசி போடப்படுவது கிடையாது மாறாக கையில் இருக்கும் ரத்த குழாயில் தான் ஊசி போடப்படும்.

2) குளுக்கோஸ்

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் பெரும்பாலும் எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள் என்று கூறுவார்கள் உண்மையில் நமக்கு செலுத்தப்படுவது குளுக்கோஸ் இல்லை மாறாக நமக்கு ஏற்றப்படுவது தூய்மையான 1லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் சோடியம் குளோரைடு (வீட்டில் பயன்படுத்தும் உப்பு) சேர்த்து சுத்தப்படுத்தி அதை தான் நமக்கு செலுத்துவார்கள்

3) மயக்கமருந்து

மருத்துவமனையில் நடக்கும் அணைத்து ஆபரேஷனும் மயக்க மருந்து செலுத்தப்பட்டு நடப்பது இல்லை மாறாக இடுப்புக்கு மேல் பகுதியில் நடக்கும் பெரிய அளவிலான ஆபரேஷனுக்கு மட்டுமே மயக்க மருந்து செலுத்தப்படும் மற்ற ஆபரேஷனுக்கு உடலை மரத்து போக செய்யும் மருந்து மட்டுமே கொடுக்கப்படும் இப்படி நடக்கும் ஆபரேஷனில் நோயாளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்

4) கண்தானம்

நம்மில் பலரும் கண் தானம் செய்ய எழுதி கொடுத்து இருப்போம் ஆனால் நமக்கு இருக்கும் சந்தேகம் கண்ணை முழுவதும் எடுத்து அடுத்தவருக்கு வைப்பார்கள் என்பதுதான் ஆனால் உண்மையில் அப்படி இல்லை கண்ணின் மேல்பகுதியில் இருக்கும் கார்னியா என்ற ஒரு பகுதியை மட்டுமே எடுத்து அடுத்தவர்களுக்கு வைப்பார்கள்

5) நாக்கைநீட்டு

வயிறுவலி என்று சென்றால் கூட நாக்கை நீட்டு என்று மருத்துவர் சொல்வார் அனால் நாக்கு எதுக்கு என்று தெரியாது உண்மையில் அவர் நாக்கை நீட்ட சொல்வது உள்நாக்கின் நிறத்தை பார்க்கவே நாக்கின் நிறத்தை வைத்து உடலின் எந்த பகுதியில் என்ன நோய் உண்டாகி இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம் அதற்காகத்தான் மருத்துவர் எந்த நோய் என்று சொன்னாலும் நாக்கை நீட்ட சொல்லி சொல்கிறார்.

பல் சொத்தைக்கான காரணங்களும் இயற்கை முறையில் தீர்வும்!!

 பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.


சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும். சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

வேப்பிலை சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல் சொத்தைக்கான காரணம் :

1.இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான மூலகாரணம். 

2.சாக்லேட் ,இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றைச் சாப்பிடும் பொழுது இதன் துகள்கள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.

3.வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும். இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும்.   இதன் அடுத்தகட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும்.

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா? அதன்பின்னால் உள்ள விளக்கம் இதோ... 

உடம்பு சரி இல்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின்வரும் சிலவும் அதற்கு முக்கிய காரணம். அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம்.

சிவப்பு நிற நாக்கு 

உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

மஞ்சள் நிற நாக்கு 

நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.

பிங்க் நிற நாக்கு 

உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.

இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு

இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது.

வெள்ளை நிற நாக்கு 

ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.

காபி நிறமுள்ள நாக்கு 

நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

சிமெண்ட நிறமுள்ள நாக்கு

உங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதை குறிக்கிறது.

நீலம் நிறமுள்ள நாக்கு  

நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

சிறிய சிறிய குமிழ்கள் உள்ள நாக்கு நீர்ழிவு பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம்

உடலுக்கு குளிர்ச்சி, ஜில்ஜில் தக்காளி ஜூஸ் ரெடி.

 


உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


தேவையான பொருட்கள் :

நன்கு பழுத்த தக்காளி  - 3
தண்ணீர்  - 1 டம்ளர்
தேன் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு -  1 தேக்கரண்டி
புதினா - 4-5 இலை
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டி - 5

செய்முறை: 

* தக்காளியைக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

* இத்துடன் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கி புதினா தூவி,ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.

* ஜில்ஜில் தக்காளி ஜூஸ் ரெடி.

மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்!!

 


பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு.எனவே அடிக்கடி பீட்ரூட் ஜூசை பருகுவது ஞாபக மறதியை போக்கும். கல்லீரல்: உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல் ஆகும்.


தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட் ஜூசை அருந்துபவர்களுக்கு கல்லீரல் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் தடுக்கப்படும். பீட்ரூட்டின் மேல் காம்பைக் கொஞ்சமாக வெட்டி, நன்றாக கழுவி தோலை நறுக்காமல் சமைக்க வேண்டும். பெரிய துண்டுகளாக போட்டால் சத்து வீணாகாது. ஆவியில் வேக வைப்பதும் சிறந்தது. இதைப் பச்சையாகவோ, வேக வைத்தோ பயன்படுத்தும் போது வினிகர் அல்லது எலுமிச்சை ஜுஸ் தடவினால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

பீட்ரூட்டில் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன.

பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் விசேஷம். இலைகளை பொடியாக நறுக்க வேண்டாம். அதிலிருக்கும் விட்டமின் சி அழிந்துவிடும். வேகும் போது மூடி போட்டு வேகவிட வேண்டாம். ஏனெனில், இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஆவியாக வெளியேற வேண்டும். அப்போது இலைகளிலுள்ள அதிகமான சுண்ணாம்புச் சத்தை உடல் கிரகிப்பதைத் தடுக்க முடியும்.

நாள் முழுவதும் ஆக்சிஜன் கொடுக்கும் காய்-கனிகள்!.

 


கரோனா காலக்கட்டத்தில், நம்மை பாதுகாத்து கொள்ள வைட்டமின் C நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், அது மிகவும் நல்லதாம்.


ஏனெனில், இந்த வைட்டமின் C நிறை உணவுகள், உடலில் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரித்து. இது தொற்று பரவுவதை தடுக்க உதவுகிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில், வைட்டமின் C1 உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிக வைட்டமின் சி இருப்பதாகக் கூறப்படுகிறது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும். இது தவிர, வளர்சிதை மாற்றம், எலும்பு உருவாக்கம், இனப்பெருக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு

ஒரு 100 கிராம் கொண்ட ஆரஞ்சு பழத்தில் 53.2 மி.கிராம் வைட்டமின் சி இருக்கிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நமது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நமது உயிரணுவைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

குடைமிளகாய்

குடைமிளகாய் சிட்ரிக் பழங்களுடன் ஒப்பிடும்போது வைட்டமின் சி சமமான அளவைக் கொண்டுள்ளது. குடைமிளகாயில் உள்ள தாது மற்றும் வைட்டமின்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். நோயெதிர்ப்பு மண்டலத்தை அடிக்கடி பலவீனப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் இது உதவும்.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி கிடைக்கிறது .மேலும் இது சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது .. இது நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடவும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். உடலின் உயிரணுக்களை சேதப்படுத்தும் மற்றும் நாள்பட்ட நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற இது உதவுகின்றன.

தேன் & துளசியின் மருத்துவ பலன்கள் :

 


மூளை சோர்வு, மூளை பலம்: 


10 துளசி இலையை எடுத்து ஒரு குவளை நீரில் போட்டு காய்ச்சி ஏலக்காய் 2, தேன் 2 டீஸ்பூன், சிறிது பசும்பால் கலந்து பருகினால் களைப்படைந்த மூளை சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும். சிறிது துளசி இலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை குடித்தால் மூளை பலம் பெரும்.

புகைப்பிடிப்பதால் வரும் கேட்டிற்கு: 

துளசி இலை தூதுவளை கண்டங்கத்திரி இம்மூன்று இலைகளையும் ஒவ்வொரு கைப்பிடியளவு எடுத்து லேசாக எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு மிளகு திப்பிலி மூன்றிலும் பத்து கிராம் எடுத்து இடித்து கலந்து காய்ச்ச வேண்டும். அக்குடிநீர் கால் லிட்டராக வற்றியதும் வடித்து சிறிது தேன் கலந்து வைத்து கொண்டு காலை மாலை 18நாள் சாப்பிட குணமாகும்.

நெஞ்சுவலி குணமாக: 

அரைக்கைப்பிடியளவு துளசி இலையுடன் அரை கைப்பிடியளவு கற்கண்டை பொடித்து போட்டு 2ஸ்பூன் தேன்விட்டு அடுப்பில் வைத்து அதனுடன் 400மில்லி தண்ணீர் விட்டு 200மில்லியாக வற்ற வடிகட்டி வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம் 2 வேளை பருகிவர நெஞ்சுவலி குணமாகும்.

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு

 

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறு மருத்துவக் குறிப்புகள்

தலைவலி


ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டைக் கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டைக் கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்புச் சக்கையை எடுத்து எரித்துச் சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

நெஞ்சுச் சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவச் சளி குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தித் தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

தேமல்

வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரத் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக்கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கித் துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராகச் செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டைச் சுட்டு அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

ஆரஞ்சுத் தோலை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்துக் குளித்து வர சரும நோய் குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைச்சாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

 


கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

சித்த மருத்துவத்தில் படுக்கைக்கும் நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைப் பாயில் படுக்கும்போதும் நமக்கு ஒருவித நன்மை கிடைக்கும். படுத்து ஓய்வு எடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே கயிற்றுக்கட்டில். தென்னை நார், பனை நாரால் திரிக்கப்பட்ட கயிற்றால் இது பின்னப்படுவதால், இதில் படுத்தால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். உடற்சூடு தணியும்.

சித்த மருத்துவ வகைப்பாட்டின்படி 4,448 நோய்கள் உள்ளன. அதில் 4,000 நோய்கள், பித்தம் அதாவது உடற்சூட்டால் உண்டாவது மூலநோய் முதல் சர்க்கரைநோய் வரை முதன்மைக் காரணமாக பித்தம்தான் இருக்கிறது. முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் நார்களால், மரத்தால் ஆன நாற்காலிகள்தான் பயன்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமே உடலில் சூடு தங்கிவிடக் கூடாது என்பதுதான். ஏனென்றால் உடலை, எப்போதும் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியக்களால் நமக்கு நன்மை கிடைக்கும்.

இலவம் பஞ்சைத் தவிர மற்ற வகைப் பஞ்சு மெத்தைகளில் படுப்பது நல்லதல்ல. இப்போது கிடைக்கும் ஸ்பிரிங் மெத்தைகளில் படுத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்படும். கயிற்றுக் கட்டிலில் படுத்தால், அது நம் உடலுக்குத் தகுந்தவாறு வளைந்து கொடுக்கும். ஆனால் ஸ்பிரிங் மெத்தைகளில், அதற்கு ஏற்றவாறு நாம் உடலை வளைந்து கொடுக்க வேண்டும். தண்டுவடப் பிரச்னைகள், சூடு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாவதற்கு மெத்தைகள்தாம் முக்கியக் காரணம்"

உலர் திராட்சை சாப்பிடுவது பல நன்மைகளை தரும்.

 



உலர் திராட்சை சாப்பிடுவது பல நன்மைகளை தரும். அந்தவகையில் தினமும் இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்ன என்பதை பார்ப்போம்.

உலர் திராட்சையை கண்களில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். மேலும் ப்ரீ-ராடிக்கல்களால் கண்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இது மட்டுமின்றி, மாகுலர் தசை சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றைத் தடுக்கும். அதற்கு இரவில் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

உலர் திராட்சை சோடியத்தை உறிஞ்சி, உடலில் உள்ள அதிகளவு சோடியத்தைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு வழிகளின் மூலம், உலர் திராட்சை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இது தவிர, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம், உடலில் உள்ள அழுக்கு மற்றும் கழிவுப் பொருட்களை எளிதில் அகற்றி, நச்சுக்களை நீக்க உதவுகிறது.

உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எலும்புகளை வலிமையாக்குகிறது.

உலர் திராட்சையை இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் பசியைத் தடுக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

உலர் திராட்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இதன் காரணமாக இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்றும் இதய நோய், கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோய்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: தமிழக அரசு ஒப்புதல்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்  மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் மஞ்சள்நீா் கால்வாயில் ரூ.40 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாநகராட்சிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, திருச்சியில் மாரிஸ் திரையரங்கம் அருகே ரயில்வே பாலம், திருப்பூா் மாநகராட்சியில் சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம், தந்தை பெரியாா் நகரில் உயா்நிலைப் பாலம், ஈஸ்வரன் கோயில் பகுதியில் பாலம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, கும்பகோணம், கரூா், காஞ்சிபுரம் மாநகராட்சிகளிலும், ராமேசுவரம் நகராட்சியிலும் உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் ரூ.162.90 கோடி மதிப்பில் செயல்படுத்த நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.159.90 கோடி நிதியானது உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான நிதியில் இருந்தும், ரூ.3 கோடியானது நகா்ப்புற உள்ளாட்சி பங்கில் இருந்தும் செலவிடப்படும்.

2 மாநகராட்சிகள், 8 நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள்: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 24 புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதற்காக ரூ.302.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சில இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

திருப்பூா், ஓசூா் ஆகிய மாநகராட்சிகள், கூடலூா், அரியலூா், வடலூா், வேதாரண்யம், மேலூா், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட நிா்வாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும், ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூா், மேட்டூா், சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...