Showing posts with label காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும்.-ஆமாம் பாரசீகத்தில். Show all posts
Showing posts with label காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும்.-ஆமாம் பாரசீகத்தில். Show all posts

Friday, November 24, 2023

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும்.-ஆமாம் பாரசீகத்தில்

 குமர குருபரர்

தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் என்னும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயர் சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. கவலையடைந்த பெற்றோர் குழந்தை முருகன் கொடுத்த வரம். அவனால் குழந்தைக்கு பேசும் ஆற்றலை அந்த முருகன்தான் தர முடியும் என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்று விரதம் இருந்தார்கள். முருகனை வழிபட்டு ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர் குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லக் கூடாது என்று முடிவோடு இருந்தார்கள். 45 வது நாள் மாலையில் கோவிலுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது குமரகுருபரன் வாய் திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் குமரகுருபரன் கடும் மழை பொழிவது போல முருகனைப் பற்றி கவிதை மழை பொழிந்தான். குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். குமரகுருபரன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக பாடியிருந்தார் குருபரர். திருச்செந்தூரில் அவர் இருந்த போது தன் குருவைக் கண்டவுடன் தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். சில வருடங்களுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.
குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே தன் குருவைக் காணும் நோக்கத்தில் கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி பெற்றோர் ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்று மீனாட்சி அன்னையை சிறு குழந்தையாக பாவித்து அவளது அழகு அருள் ஆற்றல் திருவிளையாடல்கள் அனைத்தையும் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலாக பாடினார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி மன்னா என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார். புலவர்கள் எல்லாம் கூடியிருக்க மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் திருவாரூர் நான்மணி மாலை என்னும் நூலை இயற்றினார்.
குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். தருமபுரத்தில் பாரம்பரிய திருக்கயிலாய பரம்பரையான தருமபுர ஆதீன சைவ மடம் இருந்தது. அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர் குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாராலும் விளக்க முடியாத இந்த பாடலுக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டதும் வாயடைத்து நின்றார் குமரகுருபரர். தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதை மாசிலாமணிதேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரின் எதிர் காலத்தை உணர்ந்த அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரை சீடராக இருக்க ஒப்புக் கொண்டு குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.
குமரகுருபரர் தனது குருவின் ஆணைப்படி காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தர வேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார். முதியவரே நீர் என்ன சொல்கின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கின்றீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.
மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரை கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார். அவர் நரைத்த தலைமுடியும் தலைப்பாகையும் வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும் இறையை உணர்ந்த உறுதியான முகமும் போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின. அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபையில் இருந்தவர்கள் பலர் கலைந்து ஓடினார்கள். பலர் தனது ஆசனத்தில் இருந்து காலைத் தூக்கிக் கொண்டார்கள். நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது என்று கத்தினான். நேற்று நீர் எமக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம் என்றார். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உனது ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்றார்.
சிங்கம் ஒன்று பாய்ந்து நவாபுக்கு அருகே சென்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண் சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றி வந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. குமரகுருபரர் இங்கே வா என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்து விட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னயே நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்து கொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே என்றார். ஆமாம் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொது என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் நவாப் பணிவாகப் பேசினான். மேலும் காசியில் மடத்தை நிறுவினார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார். குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள்இறைவனடி சேர்ந்தார்.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது. கயிலாசபுரத்தில் இவர் பிறந்த வீட்டுப் பகுதி மடமாக 31-8-1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார். பாரதிதாசன் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் குமரகுருபரரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் குமரகுருபரரைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்கள் நூல்கள் தோன்றியது பற்றிய கதைகளை மு. அருணாசலம் கையெழுத்து நிலையில் குறிப்புகளாக வைத்திருந்தார். இவரது நூல்கள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...