வெண்டைக்கா எனக்கு பிடித்த காய் கிடையாது. ஆனால் சமைக்க பிடிக்கும். சிவப்பு வெண்டைக்காய் அபூர்வமா எப்பவாவது கிடைக்கும். இப்போல்லாம் இல்லவே இல்லை.
எங்க தோட்டத்துல வெண்டை ஆளுயரத்திற்கு வளரும். திருச்சில வாய்க்கால் ஓரமா விவசாய நிலத்துல இருந்த வீடு அல்லவா? உய்யக் கொண்டான் வாய்க்கா நீர் காலங்காலமா ஓடி செழித்த பூமி. என் கை வண்ணம் வேற. கேட்கவா வேண்டும்? வெண்டை, கத்தரி, பாம்பு புடலை, சீன் அவரை, வெள்ளரி, அவரைக்கா, வாழை, என்று என்னை ஒரு ராணி போல உணர வைத்த மண் அது!
கஸ்தூரி வெண்டை சற்றே பூசினாப்ல ஒரு அழகா இருக்கு பாருங்க. நிஜத்துல இவங்கள பாக்கணும் ஆசை.
யானை தந்தம் வெண்டை ஒரு அடிக்கும் மேலே வளைந்து தந்தம் போல இருக்குமாம். நான் பார்த்தது இல்லை. பார்ப்பேனா தெரியலை.
ஆண்டவன் படைப்புல எத்தனை வடிவம், வண்ணம், ருசி பாருங்களேன். ஆச்சர்யமாக இருக்குல்ல? எல்லாமே வெண்டைக்காய் தான். ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது சிறப்பு!