டோக்கியோ ஒலிம்பிக் : சாம்பியன் Island கேம்ஸ் - யூசர்களை கவர்ந்திழுக்கும் கூகுள் டூடுல்!
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் இன்று மாலை தொடங்குகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் சுமார் 18 போட்டிகளில் 127 பேர் பங்கேற்கின்றனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான ஒலிம்பிக் போட்டி, ஆரவாரம், கலை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பிரம்மாண்டமாக இருக்கும்.
ஆனால், கொரோனா காரணமாக இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் வழக்கமான ஆரவாரங்கள் இருக்காது. தொடக்க நிகழ்ச்சிகளில் இடம்பெறும் ஜப்பானிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. தொடக்க நிகழ்வில் அந்த கலைநிகழ்வுகள் ஒளிபரப்பு மட்டுமே செய்யப்பட உள்ளன.
ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை. மிக முக்கிய மற்றும் நாட்டின் உயர்ந்த பதவிகளில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் மன்னர் நருஹிட்டோ போட்டியை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி 2020 -ன் தொடக்க நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் அனிமேஷன் டூடுல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது. சாம்பியன் ஐலேண்ட் கேம்ஸ் (Champion Island Games) என்ற அந்த அனிமேஷன் டூடுலை கிளிக் செய்து யூசர்கள் கேம்களை விளையாடலாம்.
லக்கி, நிஞ்சா கேட் என இருக்கும் யூசர்கள் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை என நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணி சார்பில் விளையாடலாம். இந்த அனிமேஷன் கேமில் டேபிள் டென்னிஸ், ஸ்கேட்போர்டிங், வில்வித்தை, ரக்பி, நீச்சல், மார்த்தான், மேலே ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சாம்பியன் ஐலேண்ட் கேம்ஸை டோக்கியோவில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்று வடிவமைத்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அனிமேஷன் கேம்ஸை உருவாக்கிய நிறுவனம், ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகள் குறித்து ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளது.
அதில் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து அந்த கதாப்பாத்திரங்களுக்கான கேம்ஸை வடிவமைத்தோம் என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், இது உலகளவில் இருக்கும் வீடியோ கேம் பிரியர்கள் மற்றும் கூகுள் யூசர்களை கவர்ந்திழுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. விளையாட்டை முழுமையாக மக்கள் ரசித்து விளையாடுவார்கள், வெற்றி பெற்றவர்களுக்கு மலர் தூவல், பதக்க மரியாதை ஆகியவை இருக்கும் என்பதால், ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்றால் என்ன சந்தோஷம் கிடைக்குமோ! அதனை மக்கள் உணர்வார்கள் எனவும் சாம்பியன் ஐலேண்ட் கேம்ஸை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளது.