Thursday, March 30, 2023

இராமேஸ்வரம் கோவிலில் சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்

*இராமேஸ்வரம் கோவிலில் சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்:*

ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி

பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.

இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.

இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும். மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.

இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர்,ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம்பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

காலில்சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.

அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார்.

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவரகசியமாகும்.

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவரகள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம்.,உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து பயன்பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடபட்டுள்ளது.

கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால்

வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார். வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது.

தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது. பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு திருமால் “இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார். இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார். “உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது” எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஈசன் அருள்புரிந்து சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள். சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு. எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி ‘வெள்ளீசுவரர்’ என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம். அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு. அதையட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் ‘பார்கவேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் “மீண்டும் தவம் செய்வாய். காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்” என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார்.

சுக்கிரமுனிவர் தாம் தவம் செய்த வெள்ளீஸ்வரராகிய லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை செய்து வந்தார். மாங்காட்டின் நடுவே பிலத்தில் கன்னிப்பெண் கடுந்தவம் செய்வதை அறிந்து, அவள் இறைவியே என்பதை உணர்ந்து அம்மையின் அருகில் சென்று வணங்கினார். இறைவன் தனக்கு காட்சி கொடுத்த வரலாற்றையும் தன்பெயர் தாங்கி வீற்றிருப்பதையும் சிவனின் கருணைப் பொழிவையும் எடுத்துரைத்து, வெள்ளீஸ்வரரை சென்று தரிசனம் செய்து பின்னர் இறைவன் கட்டளைப்படி காஞ்சி மாநகர் சென்று திருமணம் செய்து கொண்டாள். வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம்மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

Wednesday, March 22, 2023

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!

எடப்பாடி அல்ல;
இடையர்பாடி 

மதுரை அல்ல;
மருதத்துறை.

மானாமதுரை அல்ல;
வானவன் மருதத்துறை

காளையார் கோவில் அல்ல;
கானப்பேரெயில்

சிவகங்கை அல்ல;
செவ்வேங்கை

திருவாரூர் அல்ல;
ஆரூர்

பொள்ளாச்சி அல்ல;
பொழில் ஆட்சி

சிதம்பரம் அல்ல;
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்

கான்சாபுரம் அல்ல;
கான்சாகிபு புரம்
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)

வத்ராயிருப்பு அல்ல;
வற்றாத ஆறு இருப்பு.

தனுஸ்கோடி அல்ல;
வில்முனை

இராமேஸ்வரம் அல்ல;
சேதுக்கரை

இராமநாதபுரம் அல்ல;
முகவை

காஞ்சிபுரம் அல்ல;
கஞ்சிவரம்

செங்கல்பட்டு அல்ல;
செங்கழுநீர்பட்டு

சேர்மாதேவி அல்ல;
சேரன்மகாதேவி

விருத்தாசலம் அல்ல;
முதுகுன்றம்

வேளாங்கண்ணி அல்ல;
வேலற்கன்னி

சைதாப்பேட்டை அல்ல;
சையது பேட்டை

தேனாம்பேட்டை அல்ல;
தெய்வநாயகம் பேட்டை

கொசப்பேட்டை அல்ல;
குயவர்பேட்டை

குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.

புரசைவாக்கம் அல்ல;
புரசைப்பாக்கம்

பெரம்பூர் அல்ல;
பிரம்பூர்

சேத்துப்பட்டு அல்ல;
சேற்றுப்பேடு

அரும்பாக்கம் அல்ல;
அருகன்பாக்கம்

சிந்தாதரிப்பேட்டை அல்ல;
சின்னத்தறிப்பேட்டை

உடுமலைபேட்டை அல்ல;
ஊடுமலைப்பேட்டை

பல்லாவரம் அல்ல;
பல்லவபுரம்

தாராசுரம் அல்ல;
ராராசுரம்

ஈரோடு அல்ல;
ஈரோடை

ஒகனேக்கல் அல்ல;
புகைக்கல்

தர்மபுரி அல்ல;
தகடூர்

பழனி அல்ல;
பொதினி

கும்பகோணம் அல்ல;
குடந்தை

தரங்கம்பாடி அல்ல;
அலைகள்பாடி

காவிரிபூம்பட்டினம் அல்ல;
காவிரிபுகும்பட்டினம்

பூம்புகார் அல்ல;
புகும்புகார்

ஸ்ரீரங்கம் அல்ல;
அரங்கம்

திருவையாறு அல்ல;
ஐயாறு

சீர்காழி அல்ல;
சீகாழி

வேதாரண்யம் அல்ல;
திருமறைக்காடு

கல்பாக்கம் அல்ல;
கயல்பாக்கம்

சேலம் அல்ல;
சேரளம்

திருத்தணி அல்ல;
திருத்தணிகை

திருவண்ணாமலை அல்ல;
அண்ணாந்துமலை.

Sunday, March 5, 2023

இந்தாங்க முதல் மாத சம்பளம்

"இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 30 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!" இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் . அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்...? மனம் துணுக்குற்றாள் அம்மா . "என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!" "அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தானே வாங்கி தந்தாரு..! "அப்பாவோட வருமானம் அவ்வளவுதான்டா இருந்துச்சு..! " அதெல்லாம் இல்ல.. போன் வாங்கி தந்தா பிள்ளை படிப்பு கெட்டுடுமோன்னு நினைச்சிருப்பார்..!" "அது சரிதானே.. நீயும் மூன்றாவது செமஸ்டர் மார்க் குறைவாகத்தானே எடுத்தே..! " மார்க் குறைவாக எடுத்தால் பொறுமையா சொல்லலாம் இல்ல..? எதுக்கு போனை பிடுங்கி உன் கையிலே கொடுத்து, "பத்திரமா வச்சிரு.. அவன் காலேஜ் முடிச்ச அப்புறம் கொடுத்தா போதும்.. என்று சொன்னாராம்..?" "அப்பவாச்சும் நீ படிப்பில கவனம் செலுத்துவாய் என்றுதானேடா.. மகனே..! " நான் தான் இனிமே ஒழுங்கா படிக்கிறேன் என்று சொன்னேன்ல.. அப்புறம் எதுக்கு காலேஜ் வந்து என் கிளாஸ் டீச்சர் கிட்ட விசாரிச்சாரு.. எனக்கு எவ்வளவு கேவலமா இருந்துச்சு தெரியுமா..?" " எப்பவும் நான் உன்னை கவனிச்சுக்கிட்டே இருக்கேன் என்ற பயத்தை உனக்கு ஏற்படுத்துவதற்காகத் தான் அப்பப்போ காலேஜ் வந்து போறேன்னு அவரே சொல்லி இருக்காரு..!" " அதெல்லாம் கூட பரவாயில்லம்மா.. மூணாவது செமஸ்டெர்ல பெயிலா கூட ஆகல.. பர்சன்டேஜ் குறைஞ்சிடுச்சுன்னு நீ, தங்கச்சி, உன் அண்ணன் பசங்க எல்லாரும் வீட்ல இருக்கும்போதே சேர்ல உட்கார்ந்து இருந்த என்னை இழுத்துப் போட்டு நங்குன்னு மிதிச்சாரு.. எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்..? அன்னைக்கு எடுத்தேன் சபதம்..இவர் முன்னாலே ஒரு கவுரவமான மனுசனா வாழ்ந்து காட்டணும்னு. காலேஜ்ல நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் பண்ணிய இரண்டு பேரில் நானும் ஒருத்தன். இப்பொழுது வேலைக்குச் சேர்ந்து இது முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு வந்துட்டேன்.. இந்த பணத்தை கொண்டு போய் அவர்கிட்ட காட்டி இனிமேலாவது யாரையும் ஏளனமாக நினைக்காதீங்க.. என்று சொல்லு..போ..!" "ஏம்பா..இப்போ நீ பேசும்போது இடையில் ஏதோ சொன்னியே சபதம் எடுத்தேன் என்று.. அந்த வைராக்கியத்தை உனக்குள்ள ஏற்படுத்தணும்னு தான்டா அவர் தன்னுடைய பாசத்தை எல்லாம் மறைத்து கண்டிப்பாக நடந்து கொண்டார்..! அம்மாக்கள் கூட பிள்ளைகள் நம்மை நாளைக்குக் காப்பாத்தணும் என்ற எதிர்பார்ப்போடு தான்டா இருப்பாங்க.. அப்பாக்கள் அப்படி இல்லையடா..மகனே.." நம்மை விட நம்ம பிள்ளை நல்லா இருந்தா போதும்னு" தான் நினைப்பாங்க..! அம்மா உன் உடம்பை தான் வளர்ப்பா.. அப்பா தான் உன் வாழ்க்கையைப் பற்றி நினைப்பார்..!" " நீ சரியான ஜால்ரா.. எப்ப பாரு அவருக்கு சப்போரட்டாத்தான் வருவ..!" " இந்த வார்த்தையை ஒரு 15 வருடம் கழித்து சொல்கிறாயா என்று பார்ப்போம்..!" " ஏன்.. சொல்வேனே..! உன் வீட்டுக்காரரை நீதான் மெச்சுக்கணும்..!" "உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா அப்போ நீயும் சில பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பே..!பிள்ளைகள் குறித்தான அப்பாக்களின் எண்ணங்கள் உனக்கு புரிந்து போயிருக்கும்..!" அப்போது அப்பா வீட்டிற்குள் நுழைகிறார். " பாரு அப்பாவே வந்துட்டாரு .. அந்தப் பணத்தை அவர்கிட்ட நீயே கொடு என்ன சொல்கிறார் என்று பாரு..!" "என்ன சொல்லப் போறாரு.. "மாசாமாசம் இதே மாதிரி நிறைய சம்பாதிச்சு பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்கணும்னு.." கட்டளை போடப் போறாரு ..! அப்பாஅருகில் வந்து இருந்தார்..! " அப்பா..! " "இவனா அழைக்கிறான் என்னைய..?" அதிசயமாக ஏறிட்டுப் பார்த்தார் மகனை. அவர் கண்களில் சிறு மின்னல் கீற்று.. முகத்தில் சில வினாடி பிரகாசம்..! "இந்தாங்க முதல் மாத சம்பளம்..!" "எவ்வளவு..?" "முப்பதாயிரம்.. ட்ரெய்னிங் பீரியட் இரண்டு வருஷம் முடிஞ்சா லட்சத்துக்கு மேலே வரும்..!" "நல்லது.. அதை நீயே வச்சுக்கோ ..!" "ஏன் அப்படி சொல்றீங்க..?" " ஆமா தம்பி.. நான் கூட சின்னச் சின்ன அனாவசிய செலவு செய்வேன்.. நீ ரொம்ப சிக்கனமாக இருக்கிறத கவனிச்சிருக்கேன்..! அப்பா உங்களுக்கு எந்த சொத்தம் சேர்த்து வைக்கல.. படிக்க வச்சிட்டேன்.. அதுதான் நான் உனக்கு தர சொத்து. உன் பணத்தை நீயே வச்சுக்கிட்டு நீ என்னென்ன ஆசைப்பட்டாயோ அதற்கு செலவு பண்ணிக்கோ.. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கஞ்சி ஊத்துவேன்.. அதுக்கப்புறம் நீ அவங்களை பொறுப்பா பாத்துக்கப்பா..!" " நான் பார்த்துப்பேன்பா.. நீங்க கண்கலங்காதிங்கப்பா..!" " நான் அதற்கு கண் கலங்கவில்லை.. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் நீ என்னை "அப்பா" ன்னு கூப்பிட்டுப் பேசினல்ல..!" மகன் கண்கள் கலங்க அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான்..! "அப்பா.. இத்தனை நாளா உங்களை தப்பாப் புரிஞ்சிட்டேம்பா..! மகன் பற்றி இருந்த அப்பாவின் கைகளில் வயோதிகத்தின் சிறு நடுக்கம்.. மகனின் கைகளிலோ குற்றம் இழைத்தப் பெரு நடுக்கம் ...! அப்பாவின் விழிகளில் கசிந்த கண்ணீர் ஆனந்தக் கரையாடிக்கொண்டிருந்தது... மகனின் கண்களில் வழிந்த கண்ணீர் குற்ற உணர்வைக் கரைத்தோடிக் கொண்டிருந்தது...! ட்விட்டரில் பல பகுதிகளாக வந்ததை ஒருங்கிணைத்து தமிழில் நான் இதனை டைப் செய்வதற்குள் அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.. கண்ணீர் உருளுவதை கட்டுப்படுத்த இயலாது இதனை ஒரு வழியாக முடித்து விட்டேன். தமிழில் இவ்வளவு பெரிய பதிவைச் செய்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று. ஒவ்வொரு முறையும் ஏகப்பட்ட தவறுகள்.. அழித்து அழித்து டைப் செய்வதற்குள் போதும் என்று ஆகிவிட்டது..! சம்பாதித்து முடித்த அப்பாக்களும் வேலையிலிருந்து ஓய்வு பெறப் போகும் அப்பாக்களும் இதனைக் கண்ணீரோடு (என்னைப்போலவே) படிப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா...

ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா... எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான்.. சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான். பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான். அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான். அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார். அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவன் தானே வேண்டும், நான் தருகிறேன் என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பி வைத்தார். சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான். அந்த உறையை பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார். முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள். அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான். இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள். மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார். தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான் இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார். மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்... அன்பே கடவுள்....அன்பே சிவம் படித்ததில் பிடித்தது...

குல தெய்வத்திற்கு விளக்கேற்றும் முறை

⛩️⛩️⛩️குல தெய்வத்திற்கு விளக்கேற்றும் முறை⛩️⛩️⛩️⛩️ நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள். அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோமா? இந்து ஆலயங்களில் தலவிருட்சம் வைத்து பேணும் மரபு உண்டு. அந்த வகையில்… திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச்செங்குன்னூர், திருவனந்தபுரம்…. முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக உள்ளது. இலுப்பை மரம் கொத்து கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்நிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப் பெற்ற விதையினையும் கொண்டது. இதன் சாறு பால் தன்மை கொண்டது. இந்த மரம் இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பை எண்ணை எனப்படுகிறது. இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது. இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள். இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரியிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரியிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும். எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து வழிபடாமல் இருந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல. ஆயிரம் பசுநெய் விளக்குகளை ஏற்றி வைப்பதன் பலன் ஒரு இலுப்பெண்ணை விளக்கு ஏற்றி வைப்பதற்கு சமம். குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால், அஷ்டலட்சுமிகளும் அள்ளித் தருவார்கள்....... நற்பவி

களக்காடு

ஷடாரண்ய கோவில்கள் ஷடாரண்ய தலங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் ஓடும் பாலாற்றின் வடபுறம் மற்றும் தென்புறக் கரைகளிலேயே அமைந்துள்ளன. வளம் மிகு வாழ்வு தரும் ஷடாரண்ய கோவில்கள் ‘சிவம்’ என்றால் மங்கலம் என்ற பொருள் உண்டு. அத்தகைய சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் மங்கலங்கள் உண்டாகும். சிவபெருமானுக்கு உரிய விழாக்களில் முக்கியமானது, சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து ஆலயங்களுக்குச் சென்று சிவனை வழிபடுவது தனிச் சிறப்பு தரும். அந்த வகையில் சிவராத்திரி அன்று வழிபடக் கூடிய ஆலயங்களில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. இந்த ஷடாரண்ய ஷேத்திரங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் ஓடும் பாலாற்றின் வடபுறம் மற்றும் தென்புறக் கரைகளிலேயே அமைந்துள்ளன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள… களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில் களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்றும் வழங்கப் பெற்றது. இராவணன் சீதையை கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். ராஜ கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது - 156 அடி உயரம். மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும் இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன. திருப்பெருந்துறையில் உள்ளது போலவே, 32 கொடுங்கைகள் உள்ளன. இத்தலத்திற்கு சோராரணியமென்றும், புன்னைவனமென்றும் பெயர்களுண்டு. கோயிலின் முன் வாயிலில் இக்கோயில் திருப்பணி செய்த வீரமார்த்தாண்டவர்மனும், சுந்தரரும், சேரமானும் இருபுறமும் உள்ளனர். மார்ச் மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களிலும், செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களிலும் சூரியனின் கதிர்கள் சுவாமி மீது படும் அற்புதக் காட்சி கண்டு மகிழத்தக்கது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு. திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். இங்கு தங்கும் விடுதிகளும் உள்ளன.

இலை விபூதியின் மகிமை

இலை விபூதியின் மகிமை "அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம் விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே" பொருள் "தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்." ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய 'சுப்ரமண்ய புஜங்கம்' 25

சிவன் கோவிலுக்கு இப்படி சென்றவர்கள் வாழ்க்கையில் தோற்றதாக

சிவன் கோவிலுக்கு இப்படி சென்றவர்கள் வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரமே கிடையாது. சிவன் கோவிலுக்கு சென்றால் ஒரு முறை இதை செய்து பாருங்கள்.** சிவன் கோவில் என்று மட்டுமல்ல எந்த கோவிலுக்கு நாம் சென்று வந்தாலும் நமக்குள் ஒரு பவர் வரத்தான் செய்யும். அந்த நேர்மறை ஆற்றல் நம்முடைய வாழ்க்கையில் சில திருப்புமுனைகளை உண்டு பண்ணும். இருப்பினும் சிவன் கோவிலுக்கு செல்வதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன, சிவன் கோவிலுக்கு செல்லும் போது நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய சின்ன சின்ன ஆன்மீக ரீதியான குறிப்புகளைத்தான் இந்த பதிவை மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒருமுறை இப்படியும் சிவன் கோவிலுக்கு சென்று வந்து தான் பாருங்களேன். வாழ்வில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். வீட்டிலிருந்து சிவன் கோவிலுக்கு கிளம்பும்போது நெற்றியில் விபூதி இட்டுக் கொள்ளுங்கள். மனதிற்குள் ஓம் சிவ சிவ, ஓம் ஓம் நமசிவாய, சிவாய நம, ஓம் இப்படி ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே செல்ல வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரித்து சென்றாலும் சரிதான். சிவன் கோவிலுக்குள் நுழைந்த உடனே நந்தி தேவரிடம் ஒரு அனுமதியை வாங்கிக் கொண்டு, சிவனை தரிசனம் செய்ய செல்லுங்கள். சிவனை தரிசனம் செய்ய செல்லும்போது குறைந்தபட்சம் கையில் இரண்டு வில்வ இலைகளையாவது எடுத்துச் செல்ல வேண்டும். ॐॐॐॐॐॐॐॐॐॐ உங்களால் எப்போதெல்லாம் வில்வ இலையால் மாலை கட்டி சிவபெருமானுக்கு போட முடியுமோ போடலாம். அந்த வில்வ மாலையின் நுனியில் ஒரு மஞ்சள் துணியில் 21 மிளகு அல்லது 11 மிளகு 51 மிளகு என்று எத்தனை மிளகுகள் வைக்க முடியுமோ வைத்து முடிச்சு போட்டு சிவபெருமானுக்கு மாலையை சாத்தி விடுங்கள். சிறிது நேரம் அந்த மாலை சிவன் கழுத்தில் இருக்கட்டும். நீங்கள் மூலவரை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தை வலம் வர வேண்டும். பிரகாரத்தை சுற்றி இருக்கும் மற்ற தெய்வங்களிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும். இறுதியாக சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அரை மணி நேரம் கண்களை மூடி அமர்ந்து தியான நிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிவனுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பாடல்களை மனதிற்குள்ளே அல்லது வாய் விட்டோ பாடி தரிசனத்தை நிறைவு செய்யுங்கள். அதன் பின்பு கோவில் குருக்களிடம் சொல்லி நீங்கள் மாலை போட்டீர்கள் அல்லவா, அதில் மிளகு கட்டி வைத்தீர்கள் அல்லவா அதை திரும்பவும் பெற்றுக் கொள்ளுங்கள். மாலை சிவன் கழுத்தில் இருக்கட்டும். அந்த மிளகை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து தினமும் ஒரு மிளகு என்ற வீதம் நன்றாக மென்று சாப்பிட்டால் உடலில் இருக்கும் பிணிகள் தீரும். உடம்பை பிடித்த எதிர்மறை ஆற்றல் விலகி உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ இவ்வளவுதாங்க முடிந்தவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். கோவிலுக்கு சென்றால் மனதை ஒருநிலைப் படுத்தி இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அங்கு சென்று தெரிந்தவர்களிடம் கதை பேசிக் கொண்டுஇருக்கக் கூடாது. அதனால் நமக்கு நிச்சயமாக எந்த பலனும் கிடைக்காது. உங்களுக்கு வேண்டிய வேண்டுதலை நீங்கள் இறைவனிடம் சொன்னாலும் சரி சொல்லவில்லை என்றாலும் சரி இறைவனின் நாமத்தை உச்சரிக்கும் போது உங்களுக்கு வேண்டிய வரங்களை அவனே கொடுத்து விடுவான். இந்த அவசர உலகத்தில் கோவிலுக்கு செல்லக்கூடிய நேரம் என்பது மிக மிக குறைவான நேரமாக உள்ளது. அந்த நேரத்தை யாவது சரியாக பயன்படுத்திக் கொள்ள மேல் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

காசிக் கிணறு.அவிநாசி லிங்கம்

🌹 அவிநாசி லிங்கம் ""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?' '- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ""நண்பரே! காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, "வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், "காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி. ஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, ""போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார். இருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்போது அந்தப் புண்ணிய நதி, தன் அலைக்கரங்களால் பதஞ்ஜலியின் தண்டத்தை சுமந்து வந்து அவரிடமே சேர்ப்பித்தது. இதைப் பார்த்த பதஞ்ஜலியின் நண்பர், வியப்பால் கை குவித்தார். காசிக் கிணற்றில் உள்ள தண்ணீர், கங்கை நீர்தான் என்ற பேருண்மையை உணர்ந்தார். அவர் மனதும் கங்கா பிரவாஹம் ஆகி, அவருடைய கண்களிலும் ஆனந்த கங்கை பொங்கியது. இப்படிப்பட்ட புண்ணியக் கிணறு இருக்கும் ஆலயம் அவிநாசியில் உள்ளது. அவிநாசியில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அற்புதங்களைப் பட்டியலிட்டு மாளாது. கேரள நாட்டு அந்தணன் ஒருவன், பாவங்களால் பேய் வடிவம் பெற்றான். இங்கே வந்து வணங்கியதும் தேவ வடிவம் பெற்று சிவலோகம் சேர்ந்தான். குருநாத பண்டாரம் என்பவர், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபடுவார். அரசாங்க அதிகாரிகள், பண்டாரத்தின் மகிமை தெரியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்தனர். பிற்பாடு அங்குள்ள பெரிய மீன் ஒன்று அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பித்தது. கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்டு கொண்டிருந்தபோது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்தான். அப்போது அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசினார். மந்திரக் கட்டு நீங்கி, தேர் நகர்ந்தது. இது கண்டு மகிழ்ந்த சோளியாண்டான், "வருடா வருடம் தேர் திருவிழாவன்று வள்ளல் தம்பிரானுக்குத்தான் முதல் மரியாதை. தம்பிரானின் காலத்துக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு அந்த மரியாதை வழங்கப்படும்'' என்று அறிவித்தான். இன்றும் தம்பிரானின் வாரிசுகள், தேர்த் திருவிழாவன்று முதல் மரியாதை பெறுகின்றார்கள். இப்படித் தோண்டத், தோண்ட அற்புதச் சம்பவங்களாகவே அள்ளித் தரும் அவிநாசியில், சைவ சமயக் குரவர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அருஞ்செயல், என்றென்றும் சைவ மக்களால் வியந்து கூறப்படும் விஷயமாகும்... ஒரு சந்தர்ப்பத்தில் சோழநாட்டுத் தலங்களை தரிசித்துவிட்டு திருப்புக்கொளியூருக்கு (அவிநாசி) வந்தார் சுந்தரர். ஆலயத்தில் உள்ள அவிநாசி அண்ணலைக் காண்கின்ற ஆவலோடு அடியார்கள் புடை சூழ கோயிலை நோக்கி விரைந்தார்.. அப்போது ஒரே வீதியில் இருந்த எதிரெதிர் வீடுகளில் ஒன்றில் மேள சப்தமும், மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது. ""என்ன இது...?'' என்று உள்ளூர் மக்களிடம் விசாரித்தார் சுந்தரர். அவர்கள், ""ஐயனே! அழுகை ஒலி கேட்கின்ற வீட்டுத் தலைவரின் பெயர் கங்காதரர். அவருக்கு அவிநாசிலிங்கம் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நாலு வயதாகும்போது, இதோ மங்கள மேளம் கேட்கிறதே, இந்த வீட்டிலிருக்கும் தனது நண்பனோடு பக்கத்திலுள்ள தாமரைக் குளத்துக்குப் போனான். அங்கேதான் அந்தப் பரிதாபகரமான சம்பவம் நடந்துவிட்டது. இரண்டு சிறுவர்களும் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கங்காதரரின் பிள்ளை அவிநாசிலிங்கத்தை முதலை ஒன்று இழுத்து விழுங்கிவிட்டது. அதைப் பார்த்த அவனுடைய நண்பன், அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான். இந்தச் சோகம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முதலையிடமிருந்து தப்பிய பாலகனுக்கு இன்று பூணூல் அணிவிக்கும் விழா நடத்துகிறார்கள். "தங்கள் வீட்டுப் பிள்ளையும் உயிரோடிருந்தால் அவனுக்கும் உபநயனம் நடத்தியிருப்போமே?' என்று கங்காதரரின் குடும்பத்தார் சிலர் அழுது கொண்டிருக்கிறார்கள்'' என்றனர். சுந்தரர் வந்திருக்கும் செய்தி கங்காதரரின் காதுகளிலும் விழுந்தது. அவர் உடனே தன் மனைவியை அழைத்துக் கொண்டு பரபரவென்று வீதிக்கு ஓடி வந்தார். சுந்தரரின் பாதங்களில் விழுந்து பணிந்தார். முக மலர்ச்சியோடு கை குவித்தார். சுந்தரருக்கோ வியப்பு... ""இன்ப மகனை இழந்த அந்தப் பெற்றோர் நீங்கள்தானா?'' என்றார். உடனே கங்காதரரும், அவருடைய மனைவியும், ""ஆமாம் ஐயனே! ஆனால் நடந்தது நடந்துவிட்டது. அதையே நினைத்து வருந்தி என்ன பயன்? உங்கள் அருமை, பெருமைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களை நேரில், அதுவும் நாங்கள் வாழ்கின்ற அக்ரஹாரத்திலேயே தரிசிப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. மகன் போனால் என்ன? மகான் நீங்கள் இருக்கிறீர்களே?'' என்று அன்பு பொங்கக் கூறினார்கள். இயல்பிலேயே இளகிய மனம் படைத்த சுந்தரர், அவர்களுடைய அன்பை நினைத்து அகம் குழைந்தார். ""உங்கள் பிள்ளை அவிநாசி லிங்கம் என்னுடன் வராமல் இந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் அவிநாசி லிங்கத்தை தரிசிக்க மாட்டேன். வாருங்கள்! உங்கள் அன்பு மகன் இறந்த குளத்தைக் காட்டுங்கள்'' என்று ஆணையிட்டார். சுந்தரமூர்த்தியின் வேகத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அவரை தாமரைக் குளக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போனதும் தனது கைகளில் வெண்கலத் தாளத்தை (ஜால்ரா) எடுத்தார் சுந்தரர். ""எற்றான் மறக்கேன்'' என்று ஆரம்பித்து உள்ளங்களை உருக்கும் தேவாரப் பதிகம் ஒன்றை பாடத் தொடங்கினார். ""புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே'' என்று இறைவனை நோக்கி உணர்ச்சி பொங்கக் கேட்டார். அப்போது தாமரைக் குளத்திலே திடீரென்று நீர் பெருகியது. அதன் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு ஒரு பெரிய முதலை கரையை நோக்கிப் பாய்ந்தது. கரையருகே வந்ததும் தனது அகன்ற வாயை மேலும் அகற்றித் திறந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த முதலை உண்ட பாலகன், ஏழு வயது நிரம்பிய இளஞ் சிறுவனாய் முதலையின் வாயிலிருந்து வெளிப்பட்டான். கரையில் நின்றிருந்தவர்களைப் பார்த்து ஒரு கணம் மருண்டான்; பிறகு மலர்ந்தான். ஓடோடி வந்து, ""அப்பா! அம்மா! அப்பா! அம்மா!'' என்று அரற்றியபடி தன் பெற்றோர்களைக் கட்டித் தழுவி கண்ணீர் பெருக்கினான். கங்காதரரும், அவருடைய துணைவியாரும் கதறித் தீர்த்தார்கள். ""கண்ணே அவிநாசி! இதோ இங்கு நிற்கிறாரே இந்த அருளாளர்! இவர்தானடா உனக்கும், எங்களுக்கும் பிரத்யட்ச அம்மையப்பர். அவர் காலைக் கட்டிக் கொள்ளு'' என்று உணர்ச்சி ததும்ப, தட்டுத் தடுமாறிச் சொன்னார்கள். அவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவன், ஆனந்தம் பொங்க சுந்தரரின் திருவடிகளைத் தொழுதான். ""எங்கள் குலக் கொழுந்தை மீட்டுத் தந்த குல தெய்வமே!'' என்று கூவியபடி கங்காதர அய்யரும் , அவரது மனைவியும் சுந்தரரின் பாதங்களில் வேரற்ற மரம்போல விழுந்தார்கள். ஊர், இந்த அற்புதத்தைப் பார்த்து வாயடைத்து நிற்கவில்லை; மாறாக வாயார, ""சுந்தரர் வாழ்க! ஆரூரான் வாழ்க! தம்பிரான் தோழர் வாழ்க! எங்கள் தலைவர் வாழ்க!'' என்று கர்ஜித்தது. சுந்தர மூர்த்தி நாயனார், அவர்களின் வாழ்த்தொலியை புன்முறுவலோடு ஏற்றபடி அவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவனை அணைத்துக் கொண்டார். அடியார் கூட்டம் பின் தொடர அவிநாசி அப்பரின் ஆலயத்துக்குள் நுழைந்தார். பதிகங்கள் பாடினார். இறைவனுக்கு நன்றி சொன்னார். பிறகு மறுபடியும் அக்ரஹாரத்துக்கு வந்தார். எதிர் வீட்டில் கொட்டிக் கொண்டிருந்த மேளக்காரரை அழைத்து கங்காதர வீட்டிலும் மங்கள வாத்தியம் முழங்க வைத்தார். சிறுவன் அவிநாசிக்கு அவரது கண் முன்னாலேயே பூணூல் கல்யாணம் நடந்தது. ""திருவாரூரில் பிறக்க முக்தி. அருணாசலத்தை நினைக்க முக்தி. சிதம்பரத்தைத் தரிசிக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. ஆனால் அப்பன் அவிநாசியைப் பற்றி வாயாரப் பேசினாலே முக்தி'' என்பார்கள் பெரியோர்கள். இதைப் படித்த நாம் அனைவரும் இனி அதைத்தானே செய்யப் போகிறோம்...! சென்னை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோயமுத்தூருக்கு முன்னதாக உள்ளது அவிநாசி!

சித்தர் வாக்கு.....சிற்றின்பம் ...பேரின்பம்...!!

சித்தர் வாக்கு..... இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!! படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம். படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம். படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம். படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம். என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம். இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம். நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம். நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம். அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம். அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம். செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம். செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம். செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம். செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம். புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம். அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம். இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம். வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம். நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம். நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம். உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம். உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம். இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம். துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம். எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம். எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம். பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம். மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம். பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம். பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம். சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம். எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம். பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம். தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம். அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம். அளவற்றது, முடிவிலாதது பேரின்பம். அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம். அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம். அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம். அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம். பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம். பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம். முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம். முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம். இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம். கருணையுடையது, தர்மமானது பேரின்பம். உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம். உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம். புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம். புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம். மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம். மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம். மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம். மரணத்தையும் வெல்வது பேரின்பம். மனமாய் இருந்தால் சிற்றின்பம். மனதைக் கடந்தால் பேரின்பம். வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம். எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம். பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம். மொத்தமாய் கண்டால் பேரின்பம். அகங்காரம் கொண்டால் சிற்றின்பம். அகங்காரம் துறந்தால் பேரின்பம். தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம். அன்பில் தன்னை இழப்பது பேரின்பம். ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம். ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம். துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம். துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம். ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம். இறைவனால் தரப்படுவது பேரின்பம். உலகைப் பற்றினால் சிற்றின்பம். இறைவனைப் பற்றினால் பேரின்பம். பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம். தன் நலம் கொள்ளாதது பேரின்பம். இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம். இன்பமான இன்பமே பேரின்பம். அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம். ஞானம் விரும்புவது பேரின்பம். பெற்று மகிழ்வது சிற்றின்பம். கொடுத்து மகிழ்வது பேரின்பம். சக்தியை இழப்பது சிற்றின்பம். சக்தியாய் மாறுவது பேரின்பம். பற்றுக் கொள்வது சிற்றின்பம். பற்றற்று இருப்பது பேரின்பம். மாறுவது, தாவுவது சிற்றின்பம். மாறாதது நிலைத்தது பேரின்பம். நிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்

Friday, March 3, 2023

உயிரோடு வருவதற்கு பிரபாகரன் என்ன கடவுளா? கோத்தபய ராஜபக்சே

 உயிரோடு வருவதற்கு பிரபாகரன் என்ன கடவுளா? 

கோத்தபய ராஜபக்சே கேள்வி!


"உயிரிழந்த  பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா" இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி உள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், "மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ம் ஆண்டே அத்தனையும் முடிந்து போய்விட்டது. முடிவுக்கும் வந்துவிட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதி போரில் உயிரிழந்துவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி பலர் சுயநல அரசியல் செய்ய முனைகின்றனர், இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது முட்டாள்தனமான செயல். உயிரிழந்த  வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா"என முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளது

 எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளது: சீனா குற்றச்சாட்டு!


அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக சீனா பதிலடி கொடுத்துள்ளது .

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், "கடந்த 2022-ஆம் ஜனவரி தொடங்கி இதுவரை சீன வான் எல்லையில் அமெரிக்கா 10 பலூன்களை பறக்கவிட்டுள்ளது. அந்த பலூன்களை நாம் பொறுப்புடன், தொழில்ரீதியாக அணுகியிருக்கிறோம்" என்றார்.

கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வடக்கு கரோலினாவில் சீன பலூன் ஒன்று பறந்தது. அந்த பலூன் 4 பேருந்துகள் அளவிற்கு பெரியதாக இருந்தது. அது சீனாவின் உளவு பலூன் என்று கூறி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனையடுத்,து சீன பயணத்தை வெளியுறவு செயலர் ஆந்தணி பிளின்கன் ரத்து செய்தார். ஆனால், அமெரிக்கா அதீதமாக எதிர்வினையாற்றுகிறது. அது வெறும் ஒரு தனியார் நிறுவனத்தின் வானிலை ஆய்வு பலூன் என்று சீனா தெரிவித்தது.

இதற்கிடையில், அமெரிக்கா 3 வெவ்வேறு மர்மப் பொருட்களை வடக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளது. அவை சீனாவுடையதா என்பதெல்லாம் அமெரிக்கா விவரிக்கவில்லை. இருப்பினும் சந்தேகத்துக்கு இடையே பறந்தததால் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. இந்நிலையில்தான் பலூன் விவகாரத்தில் அமெரிக்காவைவிட தாங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டதாக சீன தெரிவித்திருக்கிறது.

அண்மையில், அமெரிக்கா வீழ்த்திய மர்மப் பொருட்கள் கனடா நாட்டின் எல்லைக்கு மிக மிக அருகில் விழுந்ததால், அந்தப் பகுதிக்கு நேற்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-ஆக நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-ஆக நியமனம்


யூடியூப் தளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

யூடியூப் தளத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சூசன் வோஜ்சிகி அறிவித்தைத் தொடர்ந்து, நீல் மோகன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டதாரியான 49 வயதாகும் நீல் மோகன் கடந்த 2015ம் ஆண்டு முதல் யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக உள்ளார்.

நீல் மோகன் தனது பணியை அக்சென்ச்சரில் 1996ம் ஆண்டு தொடங்கினார். பின்னர் நெட்க்ராவிடி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த நிறுவனம் இணை விளம்பர நிறுவனமான டபிள்க்ளிக் -ஆல் வாங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு டபிள்க்ளிக் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீல் மோகன், அட்வோர்ல்ட், அட்சென்ஸ், டபுள்க்ளிக் உள்ளிட்ட கூகுளின் விளம்பர தயாரிப்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

நீல் மோகன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். அங்கு அவர் கார்ப்பரேட் யுத்திகளை வகுக்கும் மேலாளராக இருந்துள்ளார்.  அமெரிக்காவின் பர்சனல் ஸ்டைலிங்க் சேவை நிறுவனமான ஸ்டிட்ச் ஃபிக்ஸ், பயோடெக் நிறுவனமான 23அண்ட்மீ ஆகியவைகளின் நிர்வாக குழுவில் நீல் மோகன் இருந்துள்ளார். 

உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு

 

உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக 5.5 பில்லியன் டாலர்(45 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நேட்டோ(NATO) படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. கடந்த  பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய போர் ஓராண்டை எட்டியுள்ளது.இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன. மேலும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில் ஜப்பான் ஏற்கெனவே உக்ரைனுக்கு உதவி வரும் நிலையில், மேலும் 5.5 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி வழங்க முடிவு செய்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இதனை அறிவித்துள்ளார்.  அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், போரினால் வாழ்வாதாரங்கள் இழந்த மக்களுக்கு இன்னும் உதவ வேண்டிய அவசியம் உள்ளது. அங்கு அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும். அதனால் 5.5 பில்லியன் டாலர் கூடுதல் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி, நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும் உக்ரைன் போர் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் ஜி7 நாடுகளின் கூட்டம் காணொலி வழியாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 

வருகிற மே மாதம் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 நாட்டுத் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜப்பான் தலைமை தாங்கவுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவிக்கும் என்றும் சட்டத்தின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான, சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான உலகின் முயற்சிகளை ஜப்பான் வழிநடத்தும் என்றும் கூறினார். 

இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது: பில் கேட்ஸ் புகழாரம்

இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான பில்கேட்ஸ், நோட்ஸ் என்ற தனது வலைப்பதிவில் அவ்வப்போது தனது கருத்துகளையும் எண்ணங்களையும் பில் கேட்ஸ் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டிருப்பதாவது,  இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது மற்றும் உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும், நாடு பெரிய பிரச்சினைகளை ஒரே நேரத்தில் தீர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது புகழாராம் சூட்டியிருக்கிறார்.

மேலும், சரியான முன்முயற்சிகள் மற்றும் அதனை கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் மூலம் உலகம் பல பெரிய பிரச்னைகளில் ஒரே நேரத்தில் தீர்வுகண்டு முன்னேற முடியும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார். உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, பொதுவாக தனக்கு பல தரப்பிலிருந்தும் இந்த இரண்டு பதில்கள்தான் கிடைத்துக் கொண்டிருந்தன. அவை, "இரண்டு பிரச்னைகளை ஒரே நேரத்தில் தீர்க்க போதுமான நேரம் இல்லை அல்லது பணம் இல்லை என்பதுவே.

ஆனால் இந்தியா மேற்கண்ட பதில்களை தவறு என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. "இதற்கு, இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை விட சிறந்த ஆதாரம் எதுவும் இல்லை. இதன்படி, ஒட்டுமொத்தமாக இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது. இது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறப்போகிறது, அதாவது இங்குள்ள பெரும்பாலான பிரச்சனைகளை இந்தியா தீர்க்காமல் உங்களால் தீர்க்க முடியாது என்ற நிலை ஏற்படப்போகிறது. 

ஆனாலும், இந்தியா பெரிய சவால்களை சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. நாடு போலியோவை ஒழித்தது, எச்ஐவி பரவலைக் குறைத்தது, வறுமையைக் குறைத்தது, குழந்தை இறப்புகளைக் குறைத்தது, சுகாதாரம் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை அதிகரித்தது" என்று அவர் இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த வலைப்பதிவை பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பூகம்பத்தில் 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்

 




துருக்கியில் நில நடுக்கத்தால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது 

துருக்கியில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் நிகழ்ந்தது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில், துருக்கியில் மட்டும் பல்வேறு பகுதிகளில் ஒருலட்சத்து 60 ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. அவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்தனர். அவர்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் வீடுகளை இழந்துமுகாம்களில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம் தெரிவித்தது. அதற்கேற்ப பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. அதற்கான டெண்டர்கள், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியில் அதிபர் தேர்தல்நடைபெற உள்ளது. இதனால்ஓராண்டுக்குள் புதிதாக வீடுகளை கட்டி முடிக்க அதிபர் எர்டோகன் உறுதி அளித்துள்ளார். எனினும், வீடுகள் கட்டும்போது பூகம்பம் நிகழும் துருக்கியில் அதற்கேற்ப பாதுகாப்பான முறையில் வீடு கள் கட்டப்பட வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டர் நீக்கம்: ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு

 உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். 


ரஷ்யா - உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த வகையில் மொஸ்கலோவ்வும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் உக்ரைனுக்கு பயணம் செய்த சவுதி வெளியுறவுத் துறை ஃபர்கான் அல் சவுத் சுமார் 400 மில்லியன் டாலர் உக்ரைனுக்கு நிவாரண உதவியாக வழங்கினார். சவுதி - உக்ரைன் இடையேயான உறவில் இது மிக முக்கிய நகர்வு என்றும், உண்மையான உதவியை சவுதி செய்துள்ளது என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள்

 ஒருவேளை உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள்? என்ற நடைமுறை கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிப்பதில் இருந்து சிகிச்சை வரை... நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.


முதலில் பதற்றம், பயம் கொள்ளக்கூடாது. அதேவேளை கரோனா தொற்றின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் தாமதிக்காமல் கண்டறிய வேண்டும்.

தொற்றின் அறிகுறிகள்

1. காய்ச்சல்

2. இருமல்

3. மூக்கடைப்பு/ மூக்கு ஒழுகுதல்

4. நுகர்தல்/ சுவைத்தல் திறன் இழப்பு

5. வயிற்றுப்போக்கு

6. கண்கள் சிவந்து போதல்

7. மூச்சு விடுவதில் சிரமம்

8. மூச்சுத்திணறல்

9. அதீத உடல் சோர்வு

10. அன்றாட வேலைகளைச் செய்ய இயலாமை

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் தங்களின் குடும்பத்தாரிடம் இருந்தும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியே எங்கும் உலவக் கூடாது.

வீட்டுக்குள் ஒருவருக்குத் தொற்றுக்கான அறிகுறிகள் தொடங்கினாலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் . ஆறடி இடைவெளி விட்டு இருக்க வேண்டும். இது மற்றவருக்குத் தொற்று பரவாமல் தடுக்கும்.

இதற்கடுத்த வேலை, காலை வேளையில் அருகில் இருக்கும் அரசு சுகாதார நிலையங்களுக்குச் சென்று தொண்டை/மேல் நாசித் தடவல் பரிசோதனைக்கு சாம்பிள் கொடுக்க வேண்டும்.

பரிசோதனைக்குக் கொடுத்துவிட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை 500 மில்லிகிராம், ஆறு மணிநேரத்துக்கு ஒரு முறை போடலாம்.

அடுத்த நாள் பரிசோதனை ரிசல்ட் `நெகட்டிவ்' என்று வந்தால் அறிகுறிகள் முற்றிலுமாகக் குணமாகும் வரை தனிமையில் இருந்து வெளியே வரக் கூடாது. 'பாசிட்டிவ்' என்று ரிசல்ட் வந்தால் அரசு சுகாதாரத் துறையில் இருந்து தங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

தங்களுக்கு 45 வயதுக்குட்பட்டு இருந்தால் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய் போன்ற இணை நோய்கள் இல்லாமல் இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி, தனியாக கழிப்பறையுடன்கூடிய அறை இருப்பின் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள்.

தங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் வளர்கின்றனவா, தேய்கின்றவனா என்பதைக் கண்காணித்து வர வேண்டும். அலட்சியம் ஆகாது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது உங்கள் கையில் இருக்க வேண்டியது, `ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்' எனும் கருவி.

இதை கை விரல்களில் மாட்டிவிட்டால் உடலில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுகளைக் காட்டும். இதில் ஆக்சிஜன் அளவு 94%க்கு மேல் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

கூடவே தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் ஆறு நிமிடங்கள் தொடர்ந்து மிதமான வேகத்தில் (6 minute walking test) நடந்து விட்டு உடனே ஆக்சிஜன் அளவுகளைப் பார்க்க வேண்டும்.

நடப்பதற்கு முன்பு பார்த்த அளவைவிட 5% அளவு குறைந்திருந்தால் உடனே சுதாரிக்க வேண்டும். நுரையீரலில் கோவிட் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இவ்வாறு எந்தப் பிரச்னையும் இன்றி முதல் வாரம் கழிந்தால், மொத்தம் 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருந்துவிட்டு பிறகு சகஜ நிலைக்குத் திரும்பலாம். அதுவே ஆக்சிஜன் அளவுகள் 94%க்கு கீழ் குறைந்தாலோ, கூடவே மூச்சுத்திணறல், இடைவிடாத இருமல், மூச்சு விடுவதில் சிரமம், அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றினாலோ தங்களது சாதாரண கோவிட் நோய் மிதமான கோவிட் நோய் நிலைக்குச் சென்றிருப்பதை அறிய முடியும்.

தற்போது தொற்று அறிகுறிகள் ஆரம்பித்த ஆறாவது நாள் மருத்துவர் பரிந்துரையில் நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேன் எடுத்துப்பார்க்கலாம்.

அப்போது நுரையீரலில் கோவிட் நிமோனியாவின் தாக்கம் எத்தனை அளவில் உள்ளது என்பதை அறியலாம். அதைப் பொறுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆவது குறித்து மருத்துவர் அறிவுரை வழங்குவார். மருத்துவமனையில் நமக்கான படுக்கை கிடைக்கும் வரை வீட்டில் ப்ரோனிங் எனும் 'குப்புறப்படுத்தல்' நிலையை கடைப்பிடித்து வந்தால், நம்மால் நுரையீரலின் ஆக்சிஜன் அளவுகளை சிறப்பாகப் பராமரிக்க முடியும்.

வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகப் படுத்து இருப்பதால் நுரையீரலுக்கு பளு குறைந்து குறைவான வேலை செய்து நிறைவாக ஆக்சிஜனை அளிக்கும். மருத்துவர் இது கூடவே தேவைப்பட்டால் கோவிட் சார்ந்த உள்காயங்கள் உண்டாகியிருக்கின்றனவா என்பதை INFLAMMATORY MARKERS பரிசோதனையின் மூலம் கண்டறிவார். அதில் உள்காயங்கள் மற்றும் ரத்த உறைதல் தன்மை அதிகமாவது தெரிந்தால் அதற்குரிய ரத்த உறைதல் தடுப்பு மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை குன்றச் செய்யும் ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்படும்.

ஆக்சிஜன் அளவுகள் குறைவது தொடர்ந்தால் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்படும்.

கூடவே ரெம்டெசிவிர் எனும் வைரஸ் கொல்லி மருந்தும் ரத்த நாளம் வழி ஏற்றப்படும். மிக அதிகமான பாதிப்பை தரும் சைட்டோகைன் பிரளயம் ஏற்பட்டால் உடனே டொகிலிசுமாப் எனும் மருந்து ஏற்றப்பட்டு உயிர் காக்கப்படுகின்றது.

குழந்தை பருவத்தினரைப் பொறுத்தவரை தொண்டை வலி, இருமல், மூக்கடைப்பு/மூக்கு ஒழுகுதல் என்று சாதாரண கரோனா வெளிப்படும். சாதாரண கரோனாவில் குழந்தைகள் வேகமாக மூச்சுவிட மாட்டார்கள். சாதாரணமாக மூச்சு விடுவார்கள்.

அதுவே மிதமான கரோனா தொற்றில் 2 மாதத்துக்கு குறைவான குழந்தை எனில் நிமிடத்துக்கு 60 தடவைக்கு மேல், 2-12 மாதக் குழந்தைகள் நிமிடத்துக்கு 50 முறைக்கு மேல், 1 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் நிமிடத்துக்கு 40 தடவைக்கு மேல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நிமிடத்துக்கு 30 முறைக்கு மேல் மூச்சு விடுவார்கள்.

இந்த அறிகுறியை குழந்தைகளின் பெற்றோர்கள் கண்காணித்து உடனே குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்குக் கொடுத்து விட வேண்டும். இந்த நிலையில் ஆக்சிஜன் அளவுகளை பரிசோதனை செய்து வர வேண்டும்.

90% க்கு கீழ் குறைந்தாலோ மூச்சு விடும்போது அதிக சிரமத்துக்கு உள்ளானாலோ, அதிக தூக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டாலோ உடனே மருத்துவனையில் அட்மிட் செய்து சிகிச்சை வழங்கிட வேண்டும்.

இந்த நிலையைக் கண்காணிக்காமல் விட்டால் குழந்தைகளுக்கு தீவிர கரோனா நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொற்றுக்குள்ளாகும் ஒவ்வொரு 100 பேரிலும் 80% வீடுகளிலேயே தனிமைப்படுத்தத் தகுதியுள்ள சாதாரண தொற்றுக்கு உள்ளாகுபவர்களே ஆவர்.

இவர்களுக்கு நோய்த்தொற்று அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. மீதம் உள்ள 20 பேரில் 17 பேருக்கு மிதமான கரோனா தொற்று ஏற்படும். இவர்களுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்படலாம். 3 நபர்களுக்கு மட்டுமே தீவிர கரோனா ஏற்பட்டு செயற்கை சுவாச சிகிச்சை வரை செல்லும் வாய்ப்பு உண்டாகின்றது. எனவே, அச்சப்படாமல் எச்சரிக்கையுடன் அறிகுறிகளையும் ஆக்சிஜன் அளவுகளையும் கவனித்து வந்து சரியான நேரத்தில் முறையான சிகிச்சைகளை எடுத்தால் கரோனாவை நிச்சயம் வெல்ல முடியும்.

இதுவரை நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள்!!

 உடல்நல பிரச்சனைகளுக்காக நாம் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுவருவோம் ஆனால் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பலவும் எதுக்கு என்று நமக்கு தெரியாது அல்லது தவறாக புரிந்துவைத்து இருப்போம் அப்படி நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்


1) நரம்புஊசி

உடல்நல குறைவால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டால் நமது கையில் ஒரு ஊசியை போடுவார்கள் நம்மில் பலரும் அதை நரம்பு ஊசி என்று சொல்லுவது வழக்கும் உண்மையில் நமது உடலில் இருக்கும் எந்த நரம்பில் ஊசி போடப்படுவது கிடையாது மாறாக கையில் இருக்கும் ரத்த குழாயில் தான் ஊசி போடப்படும்.

2) குளுக்கோஸ்

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் பெரும்பாலும் எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள் என்று கூறுவார்கள் உண்மையில் நமக்கு செலுத்தப்படுவது குளுக்கோஸ் இல்லை மாறாக நமக்கு ஏற்றப்படுவது தூய்மையான 1லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் சோடியம் குளோரைடு (வீட்டில் பயன்படுத்தும் உப்பு) சேர்த்து சுத்தப்படுத்தி அதை தான் நமக்கு செலுத்துவார்கள்

3) மயக்கமருந்து

மருத்துவமனையில் நடக்கும் அணைத்து ஆபரேஷனும் மயக்க மருந்து செலுத்தப்பட்டு நடப்பது இல்லை மாறாக இடுப்புக்கு மேல் பகுதியில் நடக்கும் பெரிய அளவிலான ஆபரேஷனுக்கு மட்டுமே மயக்க மருந்து செலுத்தப்படும் மற்ற ஆபரேஷனுக்கு உடலை மரத்து போக செய்யும் மருந்து மட்டுமே கொடுக்கப்படும் இப்படி நடக்கும் ஆபரேஷனில் நோயாளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்

4) கண்தானம்

நம்மில் பலரும் கண் தானம் செய்ய எழுதி கொடுத்து இருப்போம் ஆனால் நமக்கு இருக்கும் சந்தேகம் கண்ணை முழுவதும் எடுத்து அடுத்தவருக்கு வைப்பார்கள் என்பதுதான் ஆனால் உண்மையில் அப்படி இல்லை கண்ணின் மேல்பகுதியில் இருக்கும் கார்னியா என்ற ஒரு பகுதியை மட்டுமே எடுத்து அடுத்தவர்களுக்கு வைப்பார்கள்

5) நாக்கைநீட்டு

வயிறுவலி என்று சென்றால் கூட நாக்கை நீட்டு என்று மருத்துவர் சொல்வார் அனால் நாக்கு எதுக்கு என்று தெரியாது உண்மையில் அவர் நாக்கை நீட்ட சொல்வது உள்நாக்கின் நிறத்தை பார்க்கவே நாக்கின் நிறத்தை வைத்து உடலின் எந்த பகுதியில் என்ன நோய் உண்டாகி இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம் அதற்காகத்தான் மருத்துவர் எந்த நோய் என்று சொன்னாலும் நாக்கை நீட்ட சொல்லி சொல்கிறார்.

பல் சொத்தைக்கான காரணங்களும் இயற்கை முறையில் தீர்வும்!!

 பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.


சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும். சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

வேப்பிலை சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல் சொத்தைக்கான காரணம் :

1.இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான மூலகாரணம். 

2.சாக்லேட் ,இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றைச் சாப்பிடும் பொழுது இதன் துகள்கள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.

3.வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும். இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும்.   இதன் அடுத்தகட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும்.

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா? அதன்பின்னால் உள்ள விளக்கம் இதோ... 

உடம்பு சரி இல்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின்வரும் சிலவும் அதற்கு முக்கிய காரணம். அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம்.

சிவப்பு நிற நாக்கு 

உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

மஞ்சள் நிற நாக்கு 

நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.

பிங்க் நிற நாக்கு 

உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.

இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு

இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது.

வெள்ளை நிற நாக்கு 

ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.

காபி நிறமுள்ள நாக்கு 

நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

சிமெண்ட நிறமுள்ள நாக்கு

உங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதை குறிக்கிறது.

நீலம் நிறமுள்ள நாக்கு  

நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

சிறிய சிறிய குமிழ்கள் உள்ள நாக்கு நீர்ழிவு பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம்

உடலுக்கு குளிர்ச்சி, ஜில்ஜில் தக்காளி ஜூஸ் ரெடி.

 


உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


தேவையான பொருட்கள் :

நன்கு பழுத்த தக்காளி  - 3
தண்ணீர்  - 1 டம்ளர்
தேன் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு -  1 தேக்கரண்டி
புதினா - 4-5 இலை
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டி - 5

செய்முறை: 

* தக்காளியைக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

* இத்துடன் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கி புதினா தூவி,ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.

* ஜில்ஜில் தக்காளி ஜூஸ் ரெடி.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...