Showing posts with label பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும். Show all posts
Showing posts with label பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும். Show all posts

Saturday, March 19, 2022

பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும்

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும், இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கும் வந்து வழிபடவேண்டிய தலம்.

மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். 

உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள்.

தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் தழுவலை ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் ‘தழுவக் குழைந்த பிரான்’ என்றும் பெயர்.

சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி.

      தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.
      ஏகம்+ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்.

இம்மாவடியின் கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன் ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. 

மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக்கொள்ளும் நிலையை இன்றும் காணலாம். 

வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு 
மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர். 

தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார்.

காஞ்சிபுர மண்டலம் முழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல) சந்நிதி கிடையாது. 

எனினும் ஒவ்வொரு கோயிலிலும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும்.   

கோயிலுக்கு முன்புள்ளது ‘திருக்கச்சி மயானம்’ கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன.

கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலம்.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். 

ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். 

சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் திருக்கோயில் வந்தார் சுந்தரர்.

அங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். 

சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து "நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். 

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். 

சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. 

மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம் (திருவூறல்) ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, 

"கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' 

என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். 

குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து சுந்தரர் அருளிச்செய்தது.

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்.
(இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு)

1. ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

2. உற்றவர்க்கு உதவும் பெருமானை 
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனைப் 
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப் 
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை 
அற்றம்இல் புகழாள், உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

3. திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் 
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக் 
கரியின் ஈர்உரி போர்த்து உகந்தானைக் 
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

4. குண்டலம் திகழ் காது உடையானைக் 
கூற்று உதைத்த கொடுந் தொழிலானை
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை 
வாள்அரா மதிசேர் சடையானைக் 
கெண்டை அம் தடங்கண் உமை நங்கை 
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

5. வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை 
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை 
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, 
அருமறை அவை அங்கம் வல்லானை, 
எல்லை இல் புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
நல்ல கம்பனை எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழிபடப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

6. திங்கள் தங்கிய சடை உடையானைத், 
தேவ தேவனைச், செழுங்கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானைச் 
சாம வேதம் பெரிது உகப்பானை, 
மங்கை நங்கை மலைமகள் கண்டு 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

7. விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, 
வேதம்தான் விரித்து ஓத வல்லானை, 
நண்ணினார்க்கும் என்றும் நல்லவன் தன்னை, 
நாளும் நாம் உகக்கின்ற பிரானை, 
எண்இல் தொல் புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

8. சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் 
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப், 
பந்தித்த வினைப் பற்று அறுப்பானைப், 
பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, 
அந்தம் இல் புகழாள் உமைநங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

9. வரங்கள் பெற்று உழல், வாள் அரக்கர் தம் 
வாலிய புரம் மூன்று எரித்தானை, 
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி 
நிரந்தரம் செய்த நிட்கண்டகனைப், 
பரந்த தொல் புகழாள் உமை நங்கை 
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

10. எள்கல் இன்றி இமையவர் கோனை, 
ஈசனை வழிபாடு செய்வாள் போல் 
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை 
வழிபடச் சென்று நின்றவா கண்டு, 
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி 
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட 
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை பயனின்மை யறிக. இத் திருப்பதிகத்துள், "நல்ல கம்பன்", "கள்ளக் கம்பன்" என வந்தவையும், அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின், அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை, திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக.

11. பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானைப் 
‘பெரிய எம்பெருமான்” என்று எப்போதும் 
கற்றவர் பரவப் படுவானைக், 
“காணக் கண் அடியேன் பெற்றது” என்று 
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானைக் 
குளிர் பொழில், திரு நாவல் ஆரூரன் 
நற்றமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார், 
நன்நெறி உலகு எய்துவர் தாமே.

குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள், 'இவன் எம் பெரிய பெருமான்' என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...