பாலக்காடு 6 ~ Nelliyampathy hills view point
பல மலைகள் குட்டி குட்டி நீர் ஓடைகள்
"பாலக்காட்டின் ராணி" என்று அழைக்கப்படும் நெல்லியம்பதியின் மலை உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறோம் , வளைவான மலைப்பாதை...
பப்பாளியை உப்பு நீரில் ஊற வைத்திருப்பதையோ கட்டஞ்சாயா கிடைக்கும் கடையென்றாலோ
ரவி எல்லாரையும் விழித்தெழ வைத்திடுவான், நல்லவேளை பொத்துண்டி அணைக்கட்டிற்குப் பிறகு எங்கும் கடைகள் இல்லை..
நகரத்தின் கூச்சலையும் , புறச்சூழலில் ஏற்படுகின்ற மனஅழுத்தத்தையும் மறந்து, மலைக்குப் பயணம் செல்வது ஒரு தெய்வீக உண்ர்வுதான்,
காரில் பயணிக்கும்போது சட்டென்று கண்ணாடியை இறக்கும்போது காதுகளுக்குள் நுழையும் குளிராய் , இதயத்தை சில்லிட வைக்கும் மெல்லிய பனியோடுடனான காற்றின் வாசனையில், மலையில் மிதப்பதாய் உணரவைத்தது...
வழியில் எங்களை அழைத்துச் செல்லும் ITL டிராவலின் ரெஸ்ட்ராரெண்டில் ஒரு தேநீர் அருந்திவிட்டு மலை மேலேறிச் சென்றோம்,
வீவ் பாயிண்ட் செல்ல சிறிய நடக்க வேண்டும், முதியவர்கள் தவிர்த்துக் கொள்ளுதல் நலம்..
மேலே செல்லச் செல்ல எல்லாம் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறது , செல்போன் சிக்னல் உட்பட எல்லாமும் துண்டிக்கப்பட்டு விட்டது , கீழிருந்து சுமந்து வந்த பாரங்கள் கூட,
மரங்கள் சிலிர்த்து எங்கள் முடி கலைத்து வரவேற்றது.. நடந்தே மலை உச்சியில் உள்ள view point க்கு சென்றோம்.
அங்கிருந்து கீழே பார்த்தவுடன் கொல்லங்கோடு முழுவதும் எங்கள் கண்களுக்கு தெரியத் தொடங்கியது, ஒவ்வொரு வீடும், பசுமை நிலங்கள், தூரத்தில் தண்ணீர் விழாத அருவி, எல்லாம் ஒரு பெரிய ஓவியத்தைப் போல்!
மலையில் கொஞ்சம் உலவிவிட்டதால் மனசு இலகுவாயிற்று, அமைதியான ஒரு அனுபவம்.
மலை இறங்கி வந்து அங்குள்ள கடையில் ஜிஞ்சர் க்ரஷ் ஒன்று குடித்தோம் , அங்குள்ள கிராமங்களிலேயே தயாரிப்பார்கள் போல் நல்ல சுவை. ஒருவேளை மலை,பசுமை, காற்று, நிலம்—இவை கலந்தால் இப்படித்தான் சுவையாக இருக்குமோ?
மொபைல் தொடர்புக்கு அப்பால் சென்றாலே இயற்கை நம்மோடு இணைய ஆரம்பிக்கிறது
ஜுன் ஜூலையில் இந்த நெல்லியம்பதி மலைப்பாதையில் வந்து பாருங்கள், வாழ்க்கையின் அழகை முழுமையாய் உணரலாம்!