பாம்பாட்டி சித்தர்.. ஆச்சர்ய சித்தர்
பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச் செல்ல முடியாது. பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.
இரவு நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டு காட்டினுள் நடந்து கொண்டிருந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது.
அதன் அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார். தேடிப்போன புதையலைக் கண்ணெதிரே கண்டுங்கூடக் கைப்பற்ற
முடியாதவராகி ஏதோ சிந்தைனையில் அப்படியே ஆடாமல்அசையாமல் நின்றார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக வடிவமெடுத்து நின்றது.
அவர்தான்" சட்டைமுனி சித்தர். "
இந்த சட்டைமுனி சித்தர் அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக நிலையாமையைக் கூறினார். பின்னர் அவருக்குத் தீட்சையளித்து மறைந்தார்
தாயுமானவரின் சித்தர் கனம் பகுதியைப் போலவே பாம்பாட்டி சித்தரும் ‘சித்தர் வல்லபங்கூறல்’ பகுதியைப் பாடியுள்ளார்.
.
நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம்.
எங்களுக்கு அபூர்வ சக்திகள் பல உண்டு.
இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இறைவன் மேல் பற்றும் ஏனைய பொருள்களின் மேல் பற்று இல்லாதவர்களாயிருப்பதே என்று சித்தர்களின் வல்லபத்தைக் கூருகிறார் பாம்பாட்டிச் சித்தர்.
"சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும்
சேர்ந்திடுதுர்நாற்றமுடைக்குடமது
உடைந்தால்
நாயும் நரியும் பேயும் கடுகும்
நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே"
எவ்வளவு சீரும் சிறப்புமாய் வளர்த்த இந்த உடலானது உலகில்
பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும்,
சீழும் குருதியும் மலமும் சேர்ந்த இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால் நாயும், நரியும், பேயும், கழுகும் என்னுடையது இந்த உடல் என்று பங்கு போட்டுச் சாப்பிட ஆரம்பித்து விடும்.
இப்பொழுது சொல்லுங்கள், இந்த உடல் நம்முடையதா? அல்லது நாய் நரிகளுக்குச் சொந்தமானதா? என்று
கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டிசித்தர்.
மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார்.
“நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்கிறார்.
என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும்.
"சொல்லும் புளியம்பழத்தி னோடு போலீவ”
எத்தனை சொந்தங்கள் நமக்குத் துணை நின்றாலும் அவையெல்லாம் உண்மையான சொந்தங்கள் அல்ல என்றும் "இறைவன்" ஒருவனே நம்முடைய உண்மையான சொந்தம் என்றும் உணர்ந்து "மேல் ஓட்டினுள் ஒட்டாத புளியம் பழம் "போல வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பாம்பாட்டிச் சித்தர் அறிவுரை கூறுகின்றார்.
சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயணசாமி கோவில் பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி மிக அருகில் உள்ளது.