'ராக்கி', 'ரேம்போ' போன்ற கதாபாத்திரங்களில் நடித்து பல கோடி மக்களின் மனதைக் கொள்ளை அடித்தவர் திரைப்பட நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன்.
அவர் பிறக்கும் போது மருத்துவரின் தவற்றால் பக்கவாதம் தாக்கி உடலில் ஒரு பக்கம் செயலற்றுப் போய் விட்டது. ஏழை என்பதாலும், பக்கவாதத்தால் பாதி முகம் பாதிக்கப்பட்டிருந்ததாலும் பள்ளியில் சக மாணவர்களின் கேலிப் பொருளானார்.
1974 வாக்கில் அவருக்கு இருந்ததெல்லாம் கர்ப்பமுற்ற மனைவியும், அவருக்குப் பிரியமான ஒரு நாயும், பணம் கட்ட வேண்டிய ஏகப்பட்ட பில்களும், நடிப்புலகில் வெற்றி இல்லாத நிலையும் தான்.
ஆனால் அவருக்குள் ஒரு அணையா நெருப்பாக இருந்தது -"நான் உயர்ந்த நிலைக்கு வருவேன் என்ற கனவும் அதுகுறித்த நம்பிக்கையும் மட்டும் தான்."
விரைவில் அவர் கடன் சுமையால் முழுவதுமாக நொறுங்கிப்போன நிலைக்குள்ளானார்.
நிலைமை மோசமாகி மனைவியின் நகைகளை விற்றதோடு, வீடற்றவராகவும் ஆகிப்போனார். இரவு நேரத்தை நியூயார்க் நகர பஸ் ஸ்டாண்டில் தூங்கிக் கழிக்க வேண்டியதாயிற்று.
கடுமையான குளிரில் தன்னுடைய நாயும் சிரமப்பட வேண்டாம் என்று ஒரு மதுக்கடை வாசலில் நின்று, அங்கு வந்த ஒருவரிடம் தனது அன்புக்குரிய நாயை 25 டாலருக்கு விற்று விட்டார்.
இரண்டு வாரத்திற்குப் பின் அவர் உலகப் புகழ் பெற்ற முகம்மது அலி, சக் வெப்நர் இடையில் நடைபெற்ற குத்துச்சண்டையை டிவி-யில் பார்த்தார். அந்த குத்துச்சண்டைப் போட்டி அவருக்கு ஒரு தெய்வீக தூண்டுதல் போல் அமைந்தது.
அடுத்த 20 மணி நேரத்தில், இன்றும் வெறித் தனமாக ரசிக்கப் படுகின்ற 'ராக்கி' என்ற படத்தின் கதை வசனத்தைச் சிந்தித்துத் திட்டமிட்டு எழுதினார்.
அந்த கதையைக் கிட்டத்தட்ட 1,500 தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்று அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிய பிறகு ஒரு தயாரிப்பு நிறுவனம் 1,25,000 டாலருக்கு வாங்க முன் வந்தது.
ஆனால் ஸ்டாலோன் தான்தான் அந்த கதையில் ஹீரோவாக நடிப்பேன் என்று சொன்னதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
ஹீரோக்கள் மிக அழகான தோற்றத்தை உடையவர்களாகவும் சரளமாக வசனம் பேசக் கூடியவர்களாகவும் இருந்த அந்த காலகட்டத்தில், கொன்னல் வாயுடையவராக குழறிப் பேசுகிற ஸ்டாலோன் அந்த பாத்திரத்துக்கு தகுதியானவர் இல்லை என்று சொன்னார்கள். ஸ்டாலோன் அதை ஏற்க மறுத்து விட்டார்.
ஒரு மாதம் கழித்து மீண்டும் அவர்கள் ஸ்டாலோனிடம் 3,50,000 டாலர் தருகிறோம் என்றார்கள். ஆனால் அவரே நடிப்பதற்கு அவர்கள் இப்பொழுதும் ஒத்துக் கொள்ளவில்லை.
வாய்ப்பை ஏற்றுக்கொள், கதையை மட்டும் விற்றுவிடு என்று எல்லாரும் சொன்னார்கள். அப்படிச் செய்யாமலிருப்பது 'பைத்தியக்காரத்தனம்' தான்... அது மிகப் பெரிய தொகை.
ஆனால் ஸ்டாலோன் இப்போதும் அதை ஏற்க மறுத்து விட்டார்.
அந்த ஸ்டூடியோவில் யாரோ ஒருவருக்கு ஸ்டாலோனின் கதை மிகவும் பிடித்திருந்தது. அதிர்ஷ்ட தேவதை துணிச்சல் உடையவர்களைத்தான் திரும்பிப் பார்க்கிறாள்... கடைசியாக அவர்கள் அந்த கதைக்கு 35,000 டாலர் கொடுப்பதுடன் ஹீரோ பாத்திரத்தில் ஸ்டாலோன் நடிக்கவும் ஒப்புக் கொண்டனர்!
பின்னர் நடந்ததெல்லாம் உலகமறிந்த வரலாறு.
அந்த படம் ஒரு மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு, 200 மில்லியன் டாலரை சம்பாதித்துக் கொடுத்தது!
அது சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுடன், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகியவற்றுக்கான ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றது.
அடுத்த 20 வருடங்களுக்கு, 1990-களின் கடைசி வரையில், ஸ்டாலோன் தயாரிப்பாளர்களின் காமதேனுவாகவே விளங்கினார்... அவருடைய படங்கள் பில்லியன் கணக்கில் டாலர்களை குவித்தன.
அது இருக்கட்டும். அந்த முதல் 35,000 டாலரை வைத்து அவர் என்ன செய்தார் தெரியுமா?
பல வருடங்களுக்கு முன்பு தனது நாயை விற்ற அதே மதுக்கடையின் வாசலில் 3 நாள் காத்து நின்று, தன் நாயை வாங்கியவரைக் கண்டு பிடித்து, 15,000 டாலர் கொடுத்து தனக்குப் பிரியமான அந்த நாயை மீண்டும் வாங்கினார்.
சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஒரு சகாப்தம்