Showing posts with label திருப்பதியில் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்கள். Show all posts
Showing posts with label திருப்பதியில் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்கள். Show all posts

Sunday, May 22, 2022

திருப்பதியில் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்கள்

திருப்பதியில் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்கள்
 திருப்பதியில் அவசியம் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்களும் உண்டு.

அவை #என்னென்ன_தெரிந்துகொள்வோமா?

#பாதாள_மண்டபம்:
இது மலை அடிவாரத்தில் உள்ளது. ஸ்ரீ நிவாஸனின் விஸாலமான இரண்டு பாதங்கள் சிற்பத்துடன் பெரியதாகக் காணப்படுகின்றன. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் இங்கு அர்ச்சனை ஆரத்தி செய்வதற்கு வசதியாக தேவஸ்தான அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தை அலிபிரி என்று அடிபுளி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள புளிய மரத்தின் கீழேதான், உடையவர் ராமானுஜருக்கு, திருமலை நம்பிகள் ஸ்ரீ மத் ராமாயண ரகசியங்களை உபதேசித்தார் என்றும், அப்போது அவர் ஸேவிக்க வசதியாக திருமலை ஸ்ரீ நிவாஸனின் பாதங்கள் தோன்றிய தாகவும் வேங்கடாசல இதிஹாஸ மாலா என்ற நூல் கூறுகிறது.

#தலயேரு_குண்டு:
பாதாள மண்டபம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் தலயேரு குண்டு என்கிற பெரியபாறையைக் காணலாம். இந்தப் பாறையின் மீது பக்த ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட் டுள்ளது. மலை ஏறுவோரும் இறங்குபவர்களும் தலைவலி அல்லது கால்வலி வராமல் இருக்க, தங்களின் தலையை இப்பாறையின் மீது தேய்ப்பார்கள். அந்த அடையாளம் சிலையில் தென்படுகிறது.

#கும்மர_மண்டபம்: 
தலயேரு குண்டு தாண்டியதும் காணப்படும் மிகவும் சிதிலமான மண்டபம் கும்மர மண்டபமாகும். கும்மர மண்டபம் என்றால், குயவன் மண்டபம் என்று பொருள். தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்க ளைத் தயார் செய்து அனுப்புவான். அவன் அனுதினமும் தான் இருக்கும் இடத்திலேயே ஸ்ரீ நிவாஸனின் மண் விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்து, மண் புஷ்பங்களை பக்தியுடன் சமர்ப்பித்து வந்தான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் பெருமாள் சந்நிதியில் தென்பட்டதாம்! அவன் வசித்த இந்த இடம் அவன் பெயராலேயே அழைக்கப் படுகிறது.

#முக்கு_பாவி: 
திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் கோயிலுக்கு முன்பாக முக்கு பாவி என்கிற ஆழமான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் கரையில் பக்த ஆஞ்சநேய ஸ்வாமி மண்டபம் உள்ளது. மஹந்து மடத்தைச் சேர்ந்த ஸாதுக்கள் பூஜை செய்கின்றனர். ‘முக்கு’ என்றால் கோலம் போடுதல் என்று பொருள். கோலம் போடும் கற்கள் அதிகமாக இங்கு தென்படுவதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஸ்வேத சக்ரவர்த்தி என்கிற அரசனின் குமாரர் ஸம்பு என்பவர் இங்கு தவமியற்றினாராம். ஸ்ரீ நிவாஸன் நேரில் தோன்றி அவரை அனுக்கிரஹித்தாராம்.

#த்ரோவ்வ_நரஸிம்முடு: 

திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஒன்பதாவது மைலில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் ஒன்றுள்ளது. திருமலைக்கு நடந்து வந்த மார்க்கண்டேய மஹரிஷி வேண்டிக் கொண்டதன் பேரில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் இங்கு அவருக்கு தரிசனம் அளித்தாராம். சாலுவ நரஸிம்மராயுலு என்கிற அரசன் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறான்.

#கண்டா_மண்டபம்: 

திருமலையில் அவ்வசரிகோண என்கிற இடத் துக்கு அருகில் பெரிய மலையின் மீது இதை நிர்மாணித்துள்ளனர். மலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் ஆகும் நேரம், திருமலைக் கோயிலில் இரண்டு மணிகளை அடிப்பார்கள். திருமலை பூராவும் எதிரொலிக்கும் அந்த நாதத்தைக் கேட்டு கண்டாமண்டபத்திலுள்ள மணியை அடிப்பார்கள். அந்த கண்டாநாதம் கீழ்த் திருப்பதி சந்த்ரகிரி போன்ற இடங்களிலும் கேட்குமாம். விஜயநகர ராஜாக்கள் சந்த்ரகிரியில் முகாமிடும் நேரத்தில் #இந்தகண்டாநாதத்தை (மணியொலியை)க் கேட்ட பிறகே #சாப்பிடுவார்களாம்.

#மோகாள்ள_முடுபு: 
திருமலைக்கு நடந்து வரும் பக்தர்கள், தங்களின் முழங்காலைப் பிடித்துக் கொள் கிற மாதிரியான வலியை உண்டாக்கும் இடம் இது. அந்த நாளில் பக்தர்கள் இந்த இடம் வரும்போது, முழங்காலில் கையை வைத்தபடி மலை ஏறுவார்களாம். எம்பெருமானாருக்கும் வியாஸராயருக்கும் திருமலை பூராவும் சாளக்கிராமமாக ஸ்வாமி தென்பட்டதால், இருவரும் முழங்காலால் மலை ஏறினார்களாம். ஸங்கீத மூர்த்தி அந்நமாசார்யருக்கு இந்த இடத்தில் தாயார் (அலமேலுமங்கை தாயார்) பிரசாதம் கொடுத்து வழி காட்டியதாகக் கூறுவர்.

#அவ்வசரிகோண:  

மோகாள்ள முடுபு என்கிற இடத்துக்கு அருகில் உள்ள பள்ளமான இடம் இது. ‘அந்தப் பக்கத்தில் உள்ள பள்ளம்’ என்று பொருள்.

#த்ரோவ்வ_பாஷ்யகாருலு: 
திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது. ‘த்ரோவ்வ’ என்றால் நடந்து போகும் வழி எனப் பொருள். நடந்து போகும் வழியில் உள்ள பாஷ்யகாரர் ஸந்நிதி இது. உடையவர் திருமலைக்கு வந்தபோது இங்கு சிறிது நேரம் இளைப்பாறினார் என்றும், திருமலை நம்பி அவருக்கு ஸ்வாகதம் (நல்வரவு) கூறி வரவேற்றதாகவும் ஐதீகம்.

#ஸார்ல_பெட்டெலு: 
மோகாள்ள மலை தாண்டியவுடன் பெட்டி பெட்டியாக சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காவல் காப்பது போல் அனுமன் சிலை ஒரு பெட்டியில் உள்ளது. ஸ்ரீ நிவாஸ கல்யாணம் ஆனவுடன் சீர் வரிசைகளுடன் வந்த பத்மாவதித் தாயாரைப் பார்த்து ஸ்ரீ நிவாஸன் இந்தப் பெட்டிகளில் கறிவேப்பிலை இருக்கிறதா எனக் கேட்டதாகவும், கோபம் அடைந்த தாயார் திருச்சானூர் சென்றுவிட்டதாகவும் செவிவழிக் கதை ஒன்றுண்டு!

இனி, திருமலையை அடைந்ததும் அங்கே தரிசிக்க வேண்டிய சில இடங்களைப் பார்ப்போம்.

#ஹைஜ_ஸிலா #தோரணம்:

திருமலையில் பெருமாள் சந்நிதிக்கு வடக்கில் சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இது உள்ளது. இதற்கு முன்பு இந்த ஸிலா தோரணம் ஸ்படிக சிலையாக இருந்ததாம். கடல் பொங்கி அலைகளால் தள்ளப்பட்ட சிலைகள் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அபூர்வமான ஸிலா தோரணம் இது.
#நாராயணகிரி_பாதாலு: 
பெருமாள் சந்நிதிக்குச் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாராயணகிரி சிகரத்தின் மேல் பெருமாள் பாதங்கள் உள்ள சிலை ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நேராக பூலோகத்தில் கீழே இறங்கிய பகவான் இங்கு பாதத்தை வைத்து இறங்கினாராம். வருடம்தோறும் ஆடி மாதம் சுக்ல துவாதசி அன்று இங்குள்ள மண்டபத்தில் உள்ள தூண்களுக்கு 2 குடைகளைக் கட்டிப் பெருமாள் பாதங்களுக்குப் பூஜை நடக்கிறது.

இந்த இடங்கள் மட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபமும் கொலு மண்டபமும், திருமலை நம்பி ஸந்நிதியும், அநந்தாழ்வான் தோட்ட மும், வஸந்த மண்டபமும் திருமலையில் உள்ளன. மேலும் ஸ்ரீ மத் அழகியசிங்கர் நிர்மாணித்துள்ள ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம், பரகால மடம், பெரிய ஜீயர் மடம், சின்ன ஜீயர் மடம் ஆகியனவும் திருமலையில் அழகுற மிளிர்கின்றன.
திருமலை தீர்த்தங்கள்!
ஸ்ரீநிவாஸா... கோவிந்தா...
திருவேங்கடத்து எழில்கொள் சோதியாய் விளங்கும் சர்வேஸ்வரன் உறையும் திருமலையில் புண்ணியத்தை நல்கும் விதத்தில் ஆகாஸ கங்கை, பாபநாஸம் முதலான புண்ணிய தீர்த்தங்கள் பல உள்ளன. ஸ்வாமி தேஸிகனும் 'தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு’ என 'அதிகார ஸங்க்ரஹம்’ என்கிற தமது ப்ரபந்தத்தில் குறிப்பிடுகிறார். 
மகிமைமிகு அந்தத் திருமலையில் உள்ள தீர்த்தங்கள்:
ஆகாஸ கங்கை: திருமலையில் கோயிலுக்கு வடக்கே 2 மைல் தூரத்தில் இது உள்ளது. இதில் நீராடினால் மோட்சம் உண்டு என்கிறது வராஹ புராணம். அனுமனின் தாய் அஞ்சனை தவமியற்றிய இடம் இது. எனவே, அஞ்சனாத்ரி என்று இதை அழைப்பர். ராமாநுஜர் என்ற அந்தணர் ஒருவர் தவம் செய்து ஸ்ரீ நிவாஸனை நேரில் தரிசித்த இடம் இது. முன்பொருமுறை அந்தணர் ஒருவர், கழுதை முகம் நீங்கி மனித முகம் பெறுவதற்காக, தினமும் இங்கு வந்து நீராடி னார் என்கின்றன புராணங்கள். பெருமாளுக்கு இரண்டு குடங் களில் தீர்த்தம் இங்கிருந்து தினந்தோறும் எடுக்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் முக்தி கிட்டும் என்கின்றன புராணங்கள்.
பாபவிநாஸநம்: 
திருமலைக் கோயிலுக்கு வடக்கே 3 மைல் தூரத்தில் இந்தப் புண்ணிய தீர்த்தம் உள்ளது. கடுமையான பாவம் செய்திருந்தாலும் இங்கு நீராடினால் பாவம் தொலையும். ஓர் அந்தணன் பிரம்ம ராட்சஸனிடம் இருந்து விடுபட, இங்கு நீராடி வழிபட்டு பலன் பெற்றானாம். பலவிதமான பாவங்களைச் செய்த த்ருடமதி கழுகாகப் பிறந்து, இந்தத் தீர்த்தத்தில் நீராடி முக்தி அடைந்ததாகவும், பத்ரமதி என்பவன் இதில் நீராடி, பணம் பொருள் பெற்றதாகவும் புராணத் தகவல் உண்டு. ஐப்பசி சுக்லபட்சம் சப்தமி அன்று அஸ்த நட்சத்திரத் தன்று (ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்தால் இன்னும் விசேஷம்)நீராடுபவன் கோடி ஜன்மங்களில் ஸம்பாதித்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.
கோகர்ப்பம் அல்லது பாண்டவ தீர்த்தம்: 
திருமலை ஆலயத்துக்கு வட கிழக்கில் ஒரு மைல் தூரத்தில் இது உள்ளது. பாண்டவர்கள் ஆரண்ய வாசம் செய்தபோது இங்கு சிறிது காலம் இருந்தார்களாம். இங்குள்ள குகை யில் பாண்டவ சிற்பங்கள் உள்ளன. இந்தக் குகை கோயில் பசுவின் கர்ப்பம் போல உள்ளதால் கோகர்ப்பம் என அழைக்கப்படு கிறது. இதில் எவன் நீராடுகிறானோ அவன் துக்கங்களை அடைய மாட்டான். மேலுலகிலும் சுகம் பெறுகிறான் என வராஹ புராணம் விவரிக்கிறது.
ஜாபாலி தீர்த்தம்: 
ஸ்வாமி புஷ்கரிணிக்கு 2 மைல் தூரத்தில் வடக்கில் இது உள்ளது. ஜாபாலி என்கிற மஹரிஷி தவம் செய்த இடம் இது. துராசாரன் என்கிற அந்தணன் இங்கு நீராடி பிரம்ம ராக்ஷஸனிடமிருந்து விடுபட்டு முக்தி அடைந்தான். அகத்தியர் இங்கு தினந்தோறும் நீராடித் தவமிருந்து ஸ்ரீ நிவாஸனை நேரில் தரிசிக்கும் பேறு பெற்றார். இங்கு அனுமனுக்கு பழைமையான ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மஹந்து மடத்தாரின் நிர்வாகத்தில் உள்ளது.
வைகுண்ட தீர்த்தம்:.
 ஸ்வாமி புஷ்கரிணிக்கு வடகிழக்கில் இரண்டு மைல் தூரத்தில் ஒரு குகை உள்ளது. இதற்கு வைகுண்ட குகை என்று பெயர். இதை வைகுண்ட தீர்த்தம் என்றும் அழைப்பர். சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீ ராமன் வானரங்களுடன் திருமலைக்கு வந்தபோது, வானரங்களுக்கு இந்த குகையில் ஸ்ரீ மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத் தாராம். இந்த குகையில் வானரங்கள் தங்கியிருந்தபோது ஆயுதபாணி களான வீரர்கள் வானரங்களைத் துரத்தினார்களாம். இதனால் வெளியே ஓடிவந்த வானரர்களிடம் சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீ ராமன் ’இது பூலோக வைகுண்டம்' என்றாராம். இவை புராணம் கூறும் தகவல். இங்கு செல்வதற்குச் சரியான வழி இல்லை.
சக்ர தீர்த்தம்: 
திருமலைக் கோயிலுக்கு தென்மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இந்தத் தீர்த்தம் உள்ளது. 250 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 'ஸிலா தோரணம்' என்ற இடத்துக்குப் பக்கத்தில் 100 அடி தூரத்தில் சக்ர தீர்த்தம் உள்ளது.
பத்மநாபன் என்ற விஷ்ணு பக்தன் இடையூறின்றித் தவம் இயற்றும் வகையில், அவருக்கு பாதுகாப்பாக சக்கரத்தாழ்வானை பகவான் நியமித்தார். அதனால் இந்தத் தீர்த்தத்துக்குச் சக்ர தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ ரங்கத்திலிருந்து வந்த சுந்தரம் என்கிற அந்தணர் தமக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையை இங்கு நீராடிப் போக்கிக் கொண்டாராம். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ணபட்ச துவாதசியன்று இங்கு முக்கோடி என்கிற விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் இங்குள்ள நரசிம்மருக்கும் சக்ரத்தாழ்வாருக்கும் ஆராதனை, நைவேத்தியம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்தம்: திருமலைக் கோயிலுக்கு வடக்கே 6 மைல் தூரத்தில் இது உள்ளது. கிருஷ்ணன் என்கிற மஹரிஷியும் ராம கிருஷ்ணன் என்கிற மஹரிஷியும் இங்கு நீராடித் தவமிருந்து பெருமாளை தரிசித்ததால் ராமகிருஷ்ண தீர்த்தம் என்று வழங்கப் படுகிறது. தை மாதம் புஷ்ய நட்சத்திரம் பௌர்ணமி அன்று இங்குள்ள ராமகிருஷ்ண விக்கிரகங்களுக்குத் திருமஞ்சனம், அர்ச்சனை, நைவேத்தியம் நடைபெறுகிறது. பாபவிநாஸ தீர்த்தம் வரை பேருந்தில் வந்து அங்கிருந்து இந்த தீர்த்தம் இருக்கும் இடத் துக்கு நடந்துவர வேண்டும்.
குமாரதாரா தீர்த்தம்:
 திருமலை ஆலயத்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் இது உள்ளது. பாபவிநாஸ தீர்த்தத்திலிருந்து நடந்து வர வேண்டும். வியாதியால் பீடிக்கப்பட்ட முதியவர் ஒருவர் இங்கு நீராடி இளைஞனாக (குமரானாக) மாறினாராம். ஆகையால், இது குமாரதாரா தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மற்றுமொரு தகவலும் உண்டு. சுப்ரமணியர், தாரகாசுர வதம் செய்த பிறகு பிரம்மஹத்தி பாவம் போக இங்கு தவம் இயற்றி நீராடி, அந்தப் பாவத்தைப் போக்கிக்கொண்டாராம். தை மாதம் பௌர்ணமி அன்று பிற்பகலில் இங்கு நீராடுவது நல்லது. இங்கு நீராடி தட்சணையுடன் கூடிய அன்னதானம் செய்வதால், பெரும் புண்ணியம் கைகூடும்.
தும்புரு தீர்த்தம்: 
திருமலைக் கோயிலுக்குப் பத்து மைல் தூரத்தில் வடக்கில் இது உள்ளது. இதை கோண தீர்த்தம் என்றும் சொல்கிறார்கள். தும்புரு தவமியற்றிய இடம் இது. ஸர்வபத்ரன் என்கிற நாத்திகன் இங்கு நீராடி மோட்சம் அடைந்தான். இந்தத் தீர்த்தக் கரையில் தரிகொண்ட வெங்கமாம்பா என்கிற பக்தை 300 ஆண்டுகளுக்கு முன்பு தவம் செய்தாள். இங்கு நீராடுபவர்களுக்கு மறு பிறப்பு இல்லை என வராஹ புராணம் கூறுகிறது. பாபவிநாஸ தீர்த்தம் வரை பேருந்தில் வந்து, அங்கிருந்து ஏழு மைல் தூரம் நடந்து வர வேண்டும்.
ஸ்வாமி புஷ்கரிணி:
 திருமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் வடக்கே இந்த திருக்குளம் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு ஒரு குளம் போல் தோற்றமளித்தாலும் இரண்டு குளங்கள் இங்கு அமைந்துள்ளன. வராஹப் பெருமாளுக்கு ஒன்று, ஸ்ரீ நிவாஸனுக்கு ஒன்று என இரண்டு திருக்குளங்கள்.
'திராவிட தேசத்தில் தேவர்களால் சேவிக்கப் பெறும் வேங்கடம் என்னும் புண்ணியம் தரும் மலை உள்ளது. அதன் சிகரத்தில் மிகவும் பெரியதும், புண்ணியம் நிறைந்ததும், சகல பாவங்களையும் போக்குவதுமான ஸ்வாமி புஷ்கரிணி என்ற திருக் குளம் அமைந்திருக்கிறது’ என்று மார்க்கண்டேய மஹரிஷியிடம் பிரம்ம தேவர் கூறியதாகப் புராணம் கூறுகின்றது. மார்கழி மாதம், சுக்லபட்ச துவாதசி அதாவது வைகுண்ட ஏகாதசி திருநாளுக்கு மறுநாள் அருணோதய காலத்தில் பாரதத்திலுள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் மகிமை மிகுந்த இந்த ஸ்வாமி புஷ்கரிணியில் சங்கமிக் கின்றனவாம். அந்தத் திருநாளில் அருணோதய காலத்தில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி னால், நமது பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. ஸ்வாமி புஷ்கரிணியில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக ப்ரஹ்ம புராணம் கூறுகிறது.
தநத தீர்த்தம்: 
இது ஸ்வாமி புஷ்கரிணியின் வடபாகத்தில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், கடன்கள் தீர்ந்து அளவற்ற செல்வம் பெறலாம்.
காலவ தீர்த்தம்:
 இது ஸ்வாமி புஷ்கரிணியின் வடகிழக்கு மூலையில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும், இந்தத் தீர்த்தத்தைப் பருகினாலும் இம்மையில் போகத்தையும், மறுமையில் முக்தியையும் அடையலாம்.
மார்க்கண்டேய தீர்த்தம்:
 இது ஸ்வாமி புஷ்கரிணியின் கிழக்கே உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் ஆயுள் விருத்தி அடையுமாம்.
அக்னி தீர்த்தம்:
 இது ஸ்வாமி புஷ்கரிணியின் வடகிழக்கே உள்ளது. இங்கு நீராடினால் பாபம் தொலையுமாம்.
யமதீர்த்தம்: 
இது ஸ்வாமி புஷ்கரிணியின் தெற்கே அமைந்துள்ளது. இங்கு நீராடினால் நரகத் துன்பத்தில் இருந்து விடுபட முடியுமாம்.
பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் திருமலையில் 68 கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக (887வது திருநாமத்தில்) கூறப்படுகிறது. திருமலையில் எண்ணற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதால் திருமலைக்கு புஷ்கராத்ரி என்றும் ஒரு பெயருண்டு. ஆகவே, திருப்பதிக்குச் செல்லும் அன்பர்கள் இந்த தீர்த்தங்கள் எல்லாவற்றிலும் நீராட முடியாவிட்டாலும், ஸ்வாமி புஷ்கரிணியிலாவது நீராடி, அந்த மலையப்பனை வழிபட்டு மகிமைகள் பெறலாம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...