இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், சரியான முன்முயற்சிகள் மற்றும் அதனை கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் மூலம் உலகம் பல பெரிய பிரச்னைகளில் ஒரே நேரத்தில் தீர்வுகண்டு முன்னேற முடியும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார். உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, பொதுவாக தனக்கு பல தரப்பிலிருந்தும் இந்த இரண்டு பதில்கள்தான் கிடைத்துக் கொண்டிருந்தன. அவை, "இரண்டு பிரச்னைகளை ஒரே நேரத்தில் தீர்க்க போதுமான நேரம் இல்லை அல்லது பணம் இல்லை என்பதுவே.
ஆனால் இந்தியா மேற்கண்ட பதில்களை தவறு என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. "இதற்கு, இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை விட சிறந்த ஆதாரம் எதுவும் இல்லை. இதன்படி, ஒட்டுமொத்தமாக இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது. இது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறப்போகிறது, அதாவது இங்குள்ள பெரும்பாலான பிரச்சனைகளை இந்தியா தீர்க்காமல் உங்களால் தீர்க்க முடியாது என்ற நிலை ஏற்படப்போகிறது.
ஆனாலும், இந்தியா பெரிய சவால்களை சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. நாடு போலியோவை ஒழித்தது, எச்ஐவி பரவலைக் குறைத்தது, வறுமையைக் குறைத்தது, குழந்தை இறப்புகளைக் குறைத்தது, சுகாதாரம் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை அதிகரித்தது" என்று அவர் இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த வலைப்பதிவை பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.