தண்டம்
முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். தண்டம் என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து T அல்லது Y வடிவத்தில் இருக்கும். அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்தால் சுவாசம் திசை மாறும். வலது நாசி சுவாசத்தை நிறுத்த வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள். சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வேண்டும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?
மூச்சுக்காற்று நாசியின் வலது புறம் ஓடுவது சூரிய கலை என்றும் இடது புறம் ஓடுவது சந்திரகலை என்றும் பெயர். சூரியகலையில் மூச்சுக்காற்று ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்றும் சந்திரகலையில் ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்த யோகியர்கள் முனிவர்கள் தங்களது சாதகங்கள் அல்லது யோக முறைகளை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் தண்டத்தை உபயோகித்து மூச்சுக்காற்றை மாற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்வார்கள்.
சாதகங்கள் அல்லது யோக காரியங்களை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். உடனே தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில் மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும். துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. இதனை செய்ய சூரியகலை சந்திரகலைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
All reactions