சென்னையில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாக போயிருந்தேன்.
இட்லி கேட்டேன்.
‘காம்போ ஏதும் சாப்பிடுறீங்களா?’ என்று கேட்டார் சர்வர் .
‘அப்படின்னா சார்?’ என அப்பாவியாக கேட்டேன்.
‘இட்லி, வடை, கொஞ்சம் பொங்கல் இருக்கும்’ என்றார்.
புதுசாக இருக்கே என வாங்கி சாப்பிட்டேன்.
இன்று சரவணவபவனில் மட்டுமல்ல... காம்போ இல்லாத கடைகளே இல்லை.
இப்போ இது எதுக்கு?
சொல்றேன்...
எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி.
சென்னையில் தி.நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பரிசோதனைகள் முடிந்ததும், மருத்துவமனை தரப்பில் இருந்து பேசினார்கள்.
‘உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ செய்யணும். காம்போ- வாக எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்டார்கள்.
எனக்கு சட்டென்று சரவணபவன் நினைவுக்கு வந்து போனது.
ஒருவேளை சாப்பாடும் சேர்த்து போடுவாங்களோ என யோசித்தபடி அவர்களிடம் தொடர்ந்து பேசினேன்.
‘இந்த காம்போவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், ஐசியு, சிசியு, டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் வரும்! இதுவே நீங்க தனித்தனியா எடுத்துகிட்டா அதிகம் ஆகும்!’ என்று சொன்னார்கள்.
எனக்கு மிரட்சியாக இருந்தது.
அந்த மருத்துமனையில், ஹார்ட்க்கு, டெலிவரிக்கு, கிட்னிக்கு என தனித்தனி காம்போ இருக்கிறது.
அந்த மருத்துமனையில் மட்டுமல்ல... சென்னையில் பல மருத்துவமனைகளில் இந்த காம்போ சிஸ்டம் இருக்கிறதாம்!
மனிதனின் உயிருக்கு அவ்வளவுதான் மரியாதை.
காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும்.
வாழ்க்கையும் காம்போவிலேயே முடிந்துவிடும்.
இதுதான் வாழ்க்கை.
இவ்வளவு தான் வாழ்க்கை.
அதற்குள் தான் எவ்வளவு போட்டிகளும் பொறாமைகளும்!