#நம்மோடு_நாம்...
ஒரு நாளில் நம்மைப் பற்றி நாம் சிந்திக்கும் நேரம் எவ்வளவு என்று சிந்தித்துப் பாருங்கள்.
கால ஓட்டத்தின் வேகத்தில் நம்மைப் பற்றி நாம் சிந்திப்பதே மறந்து போய்விட்டது என்கிற உண்மை அப்போது புரியும்.
அதுவும் தொடுபேசியின் வளர்ச்சிக்குப் பிறகு பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை மட்டுமே அதிகமாக பார்த்தும், கேட்டும், சிந்தித்தும் வருகிறோம்.
நம்மைப் பற்றி நாம் சிந்திக்க நேரமே இல்லை என்கிற மனநிலை பெரும்பாலான மக்களிடத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது.
ஒரு கட்டத்தில் நம்மைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சிலருக்குத் தோன்றுகிறது ஆனால், அதையும் தொடுபேசியில் தான் தேடுகிறோம் நமக்குள் நாம் தேடுவது இல்லை.
அப்படி இல்லையென்றால் வெளியே தேடிச் செல்கிறோம். யாராவது நமக்கு கற்றுத் தருவார்களா என்று தேடுகிறோம்.
ஆனால், என்ன நடந்தாலும் நமக்குள் நாம் தேடலாம் என்பதைப் பற்றி சிந்தித்துக் கூட பார்ப்பதே இல்லை.
நம்மை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனில் அது நமக்குள் தான் நிகழும்.
நம்மோடு தினமும் நாம் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம்?
உதாரணமாக, நாம் என்ன செய்கின்றோம்? நாம் பிறரிடம் எப்படி நடந்துகொள்கிறோம்? நம் எண்ணங்கள் நமக்குள் எப்படி உள்ளது? போன்றவை.
நமக்காக நாம் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம்?
உதாரணமாக, புத்தகங்கள் படிப்பது, அமைதியாக அமர்ந்திருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவை.
தினமும் ஒரு மணி நேரமாவது நம்மோடு, நமக்காக நாம் நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கையை மேம்படுத்த மிகவும் உறுதுணையாக இருக்கும்.