தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு
திண்டுக்கல், திருச்சி, சேலம் , மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.
இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி
இதன் ஒரு பகுதியாக மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு 1ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது . அதனடிப்படையில் கார், வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 இல் இருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 220 ரூபாயிலிருந்து 240 ஆகவும் மாதாந்திர கட்டணம் 4385 ரூபாயிலிருந்து 4,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூபாய் 290 லிருந்து 320 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 440 லிருந்து 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூபாய் 8770 லிருந்து 9595 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூபாய் 470 லிருந்து 515 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இருமுறை சென்று வர கட்டணம் 705 ரூபாயிலிருந்து 770 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மாதாந்திர கட்டணமாக 14095 ரூபாயிலிருந்து 15420 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment