Friday, November 24, 2023

தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார்

 சிவ வடிவங்கள் 64 - 33. யோக தட்சிணாமூர்த்தி

பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை உணர்ந்து கொள்ள தானே யோக நிலையில் இருந்து காட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்
சிந்து சமவெளியில் நடத்தப்பட்ட ஆழ்வாராய்சியின் போது சுண்ணாம்பு கல்லால் ஆன யோகியின் சிலை கிடைத்துள்ளது. அத்துடன் அங்கு மரத்தாலும் களிமண்ணாலும் செதுக்கப்பட்ட முத்திரைகள் ஏராளமாக கிடைத்துள்ளன. இவை பல்வேறு வகையில் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தியின் உருவம் மூன்று வகையாக காணப்பட்டது. இதில் யோக தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அவரது பாதம் இரண்டும் சுவஸ்திகாசன அமைப்பில் இருக்கிறது. முன் இடக்கையை மடி மீது யோக அமைப்பில் வைத்திருக்கிறார். பின் இடக்கையை மார்புக்கருகில் யோகா முத்திரையுடன் வைத்திருக்கிறார். பின் வலக்கையில் ருத்ராட்ச மாலையும் முன் இடக்கையில் தாமரையும் வைத்திருக்கிறார். அவரது பார்வை மூக்கின் நுனியை பார்த்துக் கொண்டிருக்கும். அவரைச் சுற்றி முனிவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
All reactions:

கேசி என்பவர் ஒரு அரக்கனாவார்

 கேசிவதம்

கேசி என்பவர் ஒரு அரக்கனாவார். பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்ற கேசி கம்சனின் தூண்டுதலின் பேரில் கண்ணனைக் கொல்வதற்கு கோகுலத்திற்கு குதிரை வடிவத்தில் சென்றார். இவர் அரக்கன் என்பதை அறிந்த கண்ணன் குதிரையில் வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான். இது கேசிவதம் ஆகும். கேசியை வதம் செய்த இடம் தற்போது கேசிகாட் என்று அழைக்கப்படுகிறது. கேசியை வென்றதினால் கண்ணன் கேசவன் என்று பெயர் பெற்றார். இந்த சிதிலமடைந்த சிற்பம் தற்போது இருக்கும் இடம்: மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகம் நியூயார்க் நகரம்.

இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.

 விஷ்ணு துர்க்கை

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று.
இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.

சங்ககால ஏடுகளில் விஷ்ணு பகவானின் பிறந்த நாளும் வாமணன்

 வாமனன்

சங்ககால ஏடுகளில் விஷ்ணு பகவானின் பிறந்த நாளும் வாமணன் அவதரித்த நாளும் ஒன்றுதான் என குறிப்புகள் கூறுகின்றன. மகாபலி என்ற அசுர குலத்தில் தோன்றிய மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமனனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் அமைந்துள்ள இடம் பாதாமி குடைவரை கோவில் கர்நாடக மாநிலம்

கணபதியின் மடியில் கிருஷ்ணன்

 கணபதியின் மடியில் கிருஷ்ணன்

மூலவர் வினாயகர். மூலஸ்தானத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருக்கிறார். இக்கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. விநாயகரின் சதுர்த்தியும் கிருஷ்ணரின் கோகுலாஷ்டமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கோயில் சுற்றுப் பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்திமகா காவலன் யக்ஷி நாகர் சன்னதிகள் உள்ளன.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர் இக்கோவில் இருக்கும் இடத்தில் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில் அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட அவர்களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும் அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில் அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர் அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். பின்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் முக்குற்றி புஷ்பாஞ்சலி எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து பின்னர் அதனை எடுத்து விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை நடத்தப்படுகிறது.
கிருஷ்ணரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ண மயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம் அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.

அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம். வேலப்பூர் மஹாராஷ்டிர மாநிலம்.

 சிவபார்வதி

அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம். வேலப்பூர் மஹாராஷ்டிர மாநிலம். இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் யாதவ் ஆட்சியாளர் ராமச்சந்திரதேவ் ஆட்சியின் போது பிரம்மதேவ்ரெய்னா மற்றும் பைதேவ்ரெய்னா என்ற இரண்டு சகோதரர்கள் ஹேமதபந்தி பாணியில் கட்டப்பட்டது. கிருஷ்ண தேவராயரால் 13ஆம் நூற்றாண்டில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

கையில் ஒரு தண்டம்

 தண்டம்

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். தண்டம் என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து T அல்லது Y வடிவத்தில் இருக்கும். அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்தால் சுவாசம் திசை மாறும். வலது நாசி சுவாசத்தை நிறுத்த வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள். சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வேண்டும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?
மூச்சுக்காற்று நாசியின் வலது புறம் ஓடுவது சூரிய கலை என்றும் இடது புறம் ஓடுவது சந்திரகலை என்றும் பெயர். சூரியகலையில் மூச்சுக்காற்று ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்றும் சந்திரகலையில் ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்த யோகியர்கள் முனிவர்கள் தங்களது சாதகங்கள் அல்லது யோக முறைகளை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் தண்டத்தை உபயோகித்து மூச்சுக்காற்றை மாற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்வார்கள்.
சாதகங்கள் அல்லது யோக காரியங்களை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். உடனே தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில் மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும். துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. இதனை செய்ய சூரியகலை சந்திரகலைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
No photo description available.
All reactions

உணவில் உள்ள 5 வகை தோஷங்கள்

 உணவில் உள்ள 5 வகை தோஷங்கள்

வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யாரல் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது பிராணனைத் தாங்குவது. அதை யார் சமைக்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பது முக்கியம். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
1. அர்த்த தோஷம்
2. நிமித்த தோஷம்
3. ஸ்தான தோஷம்
4. ஜாதி தோஷம் (இது மனித ஜாதியை குறிப்பது அல்ல. சாத்வீக உணவை குறிக்கும்)
5. சம்ஸ்கார தோஷம்
1. அர்த்த தோஷம்
அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.
பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். தவறு செய்து விட்டோமே இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். பணத்தாசை பிடித்து தவறு செய்யும் ஒருவரிடம் உணவு அருந்தினால் வருவது அர்த்த தோஷம் ஆகும்.
2. நிமித்த தோஷம்
உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதோடு நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் திரௌபதி நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் அம்பின் வழியாக வெளியேறும் போது நான் பரிசுத்தவனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது என்று கூறினார். தீய எண்ணத்தோடு இருப்பவன் அளிக்கும் உணவு சாப்பிட்டால் தீமையான எண்ணங்களையே உருவாக்கும் இது நிமித்த தோஷம் ஆகும்.
3. ஸ்தான தோஷம்
உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும் இது ஸ்தான தோஷம் ஆகும்.
4. ஜாதி தோஷம்
மனிதனுக்கு சாத்வீக குணம் ரஜோ குணம் தாமச குணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. சாத்வீக உணவாக உட்கொள்ள வேண்டும். சாத்வீக உணவு இல்லை என்றால் அது ஜாதி தோஷம் ஆகும்.
சாத்வீக குணம் - உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால் நெய் அரிசி மாவு பருப்பு போன்றவை சாத்வீகமானவை. இதனை சாப்பிட்டால் இறைஉணர்வு. மனஅடக்கம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு அச்சப்படுதல், தானம், பணிவு, எளிமை ஆகியவை கிடைக்கும். சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.
ரஜோ குணம் - புளிப்பு உரைப்பு உப்பு உள்ளவை ராஜோ குணங்கள் கொண்ட உணவாகும். இந்த உணவை சாப்பிட்டால் ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய ரஜோ குணங்கள் வரும். ராஜோ உணவு உலகப்பற்று உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.
தாமச குணம் - பூண்டு வெங்காயம் மாமிசம் முட்டை போன்றவை தாமச உணவாகும். இதனை சாப்பிட்டால் சோம்பலும் ராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தாமச உணவு தீய குணத்தை வளர்க்கிறது.
5. சம்ஸ்கார தோஷம்
தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.
இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். அப்போது தான் மனம் அன்புடனும் தெளிந்த நல்அறிவுடனும் சலனமில்லாமலும் இறை சிந்தனையுடனும் இருக்கும். தானே சமைத்த உணவு தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
No photo description available.
All reactions:

ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

 ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

சுந்தரர் வெள்ளை யானை மீதேரியும் அவர் தோழராரன சேரமான் பெருமாள்நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் தானும் கைலாயம் செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய ஆரம்பித்தார். ஔவையாருக்கு விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும் கயிலைக்கு தான் அழைத்து செல்வதாகவும் அருளினார். ஔவையார் பொறுமையாக தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஔவையாரை கணபதி தனது துதிக்கையால் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கையிலை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது.

ஒரு மண்டலம் 48 நாள்

 ஒரு மண்டலம் 48 நாள்

சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவது போல் நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன. மற்ற கோள்கள் அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும் அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும் 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர். ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசிக்கூட்டங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்கள் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்.
கிரகங்கள் 9 ராசி கூட்டங்கள் 12 நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டினால் 9+12+27=48 இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை. இதன் காரணமாகவே தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிட்டால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும் என்பார்கள். மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அவர்களின் சிரத்தைக்கு ஏற்ப நிச்சயம் கைகூடும்.
No photo description available.
All reactions:

திரு முருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

 திரு முருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர். காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால்
நான் என்னுடைய பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டிவிடுங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.
அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான் 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்த சிறுவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான், 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.
No photo description available.
All reactions:


சேனைகளின் தலைவன் முருகன்

 சேனைகளின் தலைவன் முருகன்

தற்போது இருக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதிகள் அக்காலத்தில் காந்தாரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கோலத்தில் உள்ள முருகனின் சிலை. காலம் 2 ஆம் நூற்றாண்டு. தற்போது கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய 16 கால் மண்டபத்தில்

 வினாயகரின் அவதார சிற்பம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய 16 கால் மண்டபத்தில் வினாயகரின் அவதார சிற்பம் சுதை சிற்பமாக உள்ளது.

7 ஆம் நூற்றாண்டு விநாயகரின் எழில்மிகு சிற்பம்

 வினாயகர்

7 ஆம் நூற்றாண்டு விநாயகரின் எழில்மிகு சிற்பம். இடம் வியட்நாமில் உள்ள டானாங் ஊரில் என்ற அருங்காட்சியகத்தில் உள்ளது.

நந்தியும் அனுமனும்

 நந்தியும் அனுமனும்

சைவத்தில் போற்றப்படும் நந்தி பகவானும் வைணவத்தில் போற்றப்படும் அனுமனும் ஆரத்தழுவி கொள்ளும் சுதை சிற்பம். இடம் நவ திருப்பதிகளுள் ஒன்றான திருவரகுணமங்கை கோயில்.

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...