Friday, November 24, 2023

ஞானப் பறவைகள்

 ஞானப் பறவைகள்

மகாபாரதக் கதை முழுவதையும் வியாச பகவானிடம் கேட்டறிந்தார் வியாசரின் சீடர் ஜைமினி முனிவர். அவருக்குச் சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று மகரிஷியே எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜைமினி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நியாயமானவையே உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க கால அவகாசம் இல்லை. நீங்கள் விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன், சுபத்திரன், சுமுகன் என்ற நான்கு ஞான பட்சிகளைக் கேட்டால் அவை உங்கள் ஐயங்களைத் தீர்க்கும் என்றார். வியப்படைந்த ஜைமினி முனிவரே பக்ஷிகள் பேசுமா? அவை மகா பண்டிதர்களைப் போல் தர்ம சந்தேகங்களைத் தீர்க்குமா? என வினவினார். அந்த நான்கு பட்சிகளின் கதையை வியாசர் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு முறை தேவேந்திரன் அப்சர ஸ்தீரிகளுடன் நந்த வனத்தில் உலாவிக் கொண்டிருக்கையில் அங்கு நாரத மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தேவேந்திரன் அவரிடம் முனிவரே இந்த அப்சர பெண்களில் சிறந்த ஒருத்தியை தேர்ந்தேடுத்து அவளை நாட்டியம் ஆடும்படி ஆணையிடுங்கள் என்றான். நாரதர் அப்சரப் பெண்களே உங்களில் யார் ரூப லாவண்யங்களில் உயர்ந்தவர் என்று எண்ணுகிறீரோ அவர் ஆடலாம் என்றார். அவர்களில் ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று வாதிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். தேவேந்திரன் அவர்களுள் சிறந்தவளை நாரதரே தீர்மானிக்க வேண்டும் என்றான். நாரதர் அதற்கு ஒரு வழி கூறினார். இமாலயத்தில் துர்வாச முனிவர் கடுந்தவம் செய்து வருகிறார். உங்களில் யார் நடனமாடி அவர் தவத்தைக் கலைக்கின்றீர்களோ அவர்களே சிறந்தவர் என்று தீர்மானிப்பேன் என்றார் நாரதர். துர்வாசரின் பெயரைக் கேட்டதும் அப்பெண்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது. வபு என்ற பெண் நான் துர்வாசர் இருக்கும் இடத்திற்குச் சென்று அவரின் தவத்தை கலைக்கிறேன் என்று சொல்லிப் புறப்பட்டாள். வபு தன் ஆடலாலும் பாடலாலும் துர்வாசரின் தவத்தைக் கலைக்க முற்பட்டாள். அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் அப்சரப் பெண்ணே நீ கழுகாகப் பிறப்பாய் என்று சபித்தார். அவள் துர்வாசரைப் பணிந்து தன் தவறை மன்னித்து சாப விமோச்சனம் அளிக்கும்படி வேண்டினாள். கருணை கொண்ட முனிவர் உனக்கு நான்கு குஞ்சுகள் பிறக்கும். நீ அர்ஜுனனின் அம்பு பாய்ந்து மரணமுற்று நிஜ ரூபத்தை அடைந்து இந்திரலோகம் செல்வாய் என்று ஆசீர்வதித்தார். வபு கழுகாகப் பிறந்து கர்பமுற்றாள். அப்போது மகாபாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்க்கச் சென்ற த்ராக்ஷி மேலே பறந்தபடியே யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் விடுத்த ஓர் அம்பு அவள் மேல் பாய்ந்தது. உடனே த்ராக்ஷியின் கர்பத்திலிருந்த நான்கு முட்டைகளும் பூமியில் விழுந்தன. என் குழந்தைகளை தெய்வம் தான் காக்க வேண்டும் என்று பிரார்த்தித்து உயிர் துறந்தாள்.
யுத்த பூமியில் பகதத்தன் என்ற வீரனின் வாகனமான சுப்ரதீபம் என்ற யானையின் கழுத்தில் தொங்கிய மணி அம்பு பட்டு அறுந்து சரியாக அந்த முட்டைகளின் மேல் கவிழ்ந்து விழுந்து அந்த மணியின் கீழ் முட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன. பாரத யுத்தம் முடிந்து குருக்ஷேத்திர பூமியில் அமைதி ஏற்பட்ட பின் ஒரு நாள் காலை சமீகர் என்ற மகா முனிவர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார். மணியின் அடியிலிருந்து பறவைக் குஞ்சுகளின் கீச் கீச் எனும் ஒலியைக் கேட்டார். அதை கேட்டு ஆச்சர்யமாய்ந்த முனிவர் மணியைத் தூக்கிப் பார்த்து அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள் இருக்கக் கண்டார். கருணையோடு அவற்றைத் தம் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார். அப்போது அக்குஞ்சுகள் அவரிடம் மகானுபாவரே எங்களை கோரமான மரணத்திலிருந்து காத்தருளினீர்கள். எங்களுக்கு நீங்களே தாய் தந்தை குரு ஆவீர்கள். தங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். உங்களுக்கு நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டுமோ கூறியருளுங்கள் என்றன. வியப்புற்ற சமீகர் பறவைக் குஞ்சுகளே நீங்கள் யார் எதனால் இந்த பட்சி ஜென்மத்தை அடைந்தீர்கள் என்று கேட்டார்.
முனிவரே நாங்கள் நால்வரும் சுக்ருதி எனும் மகா முனிவரின் புதல்வர்களாகப் பிறந்திருந்தோம். சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்தோம். பெற்றோரைப் பூஜித்து வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் தந்தையின் சத்திய நெறியைச் சோதித்தறிய விரும்பிய தேவேந்திரன் கழுகு உருவில் வந்து தனக்கு நர மாமிசம் வேண்டுமென்று கேட்டார். எங்கள் தந்தை எங்களிடம் யாராவது ஒருவர் இந்திரனுக்கு ஆகாரமாகுங்கள் என்று கட்டளை இட்டார். நாங்கள் பயந்து அதனை ஏற்கவில்லை. கோபமடைந்த எங்கள் தந்தை, துஷ்ட புத்திரர்களா நான் இந்த பட்சிக்கு ராஜனுக்கு வாக்களித்து விட்டேன். நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் பறவைகளாகப் பிறக்கக் கடவீர். என்று சபித்து விட்டார். பிறகு அவர் தன் உடலையே இந்திரனுக்கு உணவாகச் சமர்ப்பித்தார். இந்திரன் எங்கள் தந்தையின் தியாகத்தை மெச்சி மகிழ்ந்து எங்களிடம் நீங்கள் விந்திய மலையில் சென்று வசியுங்கள். வியாசரின் சீடரான ஜைமினி உங்களிடம் வந்து சில தர்ம சந்தேகங்களைக் கேட்பார். அவற்றைத் தீர்த்தவுடன் உங்கள் சாபம் விலகும். நீங்கள் பட்சிகளாக இருந்தாலும் சகல வேத தர்ம சாத்திரங்களையும் அறிந்த ஞான பக்ஷிகள் தர்ம பக்ஷிகள் என்று போற்றப் படுவீர்கள் என்று அருளினார். பறவைகள் இவ்விதம் தம் பூர்வ ஜென்மக் கதையைக் கூறக் கேட்ட சமீகர் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய சேவை எதுவும் இல்லை. நீங்கள் இனி விந்திய பர்வதத்திற்குச் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார். இப்போது அந்த பறவைகள் அங்கி இருக்கின்றன. அங்கு சென்று உனது சந்தேகங்களை தீர்த்துக்கொள் என்று அனுப்பி வைத்தார் வியாசர்.
ஜைமினி முனிவர் விந்திய பர்வதத்தில் ஞானப் பறவைகளைத் தேடிச் சென்றார். அப்போது அவைகள் இனிமையாக வேத அத்யயனம் செய்து கொண்டிருந்தன. அவற்றை அணுகி ஞானப் பறவைகளே நான் வியாசரின் சீடன். என்னை ஜைமினி என்பார்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து எனக்கு மனசாந்தி அளியுங்கள் என்றார். அப்பறவைகள் முனிவரே உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரிந்த வரை கூறுகிறோம் என்று பதிலளித்தன. ஜைமினி தனது சந்தேகங்களைக் கேட்டார்
1. கௌரவ பாண்டவ யுத்தத்தின் போது பலராமர் ஏன் தீர்த்த யாத்திரை சென்றார்?
2. திரௌபதிக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களும் திருமணம் கூட நிகழாமல் திக்கற்றவர் போல் அகால மரணமடையக் காரணம் என்ன?
பலராமர் பாண்டவர்களின் உறவினர். சுபத்திரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து சம்பந்தியானவர். துரியோதனனுக்கு கதை யுத்தம் பயிற்றுவித்து குருவானவர். கிருஷ்ணரோ பாண்டவர் பக்கம் நிற்பவர். யுத்தத்தில் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் தனக்குப் பிரியமானவர்களோடு போர் செய்ய வேண்டி வரும். அச்சமயம் பலராமர் நைமிசாரண்யம் சென்ற போது பாகவத கதை சொல்லிக் கொண்டிருந்த சூத முனிவர் தன்னைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கவில்லை என்ற கோபத்தில் அவரைக் கொன்று விட்டார். அங்கிருந்த மகரிஷிகள் பலராமரைப் பார்த்து வெறுப்புடன் நீ செய்த பாவத்தை எல்லோரிடமும் சொல்லியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை விரதம் அனுசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். தீர்த்த யாத்திரை செல்லும் சாக்கில் பலராமர் யுத்தத்திலிருந்து விலகி நின்றார்.
பாண்டவ புத்திரர்களான உப பாண்டவர்கள் முன் ஜென்மத்தில் விச்வேதேவர்கள் ஆவர்கள். ராஜா அரிச்சந்திரனை அரசுரிமையை விட்டு நீக்கி துன்புறுத்திய விச்வாமித்திரரை வானத்திலிருந்து பார்த்த விஸ்வேதேவர்கள் ஐந்து பேர் கருணை கொண்டு இத்தனை துன்பம் செய்கின்ற இந்த விசுவாமித்திரர் எந்த பாவ உலகிற்குச் செல்வரோ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அவ்வார்த்தைகளைக் கேட்ட விசுவாமித்திரர் ரோஷத்தோடு நீங்கள் ஐவரும் மனித உலகில் பிறப்பீராக என்று சாபமிட்டார். அப்போது விஸ்வேதேவர்கள் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க சாந்தமடைந்து நீங்கள் மனித ஜென்மமெடுத்தாலும் மனைவி, சந்ததி, காமம், க்ரோதம் போன்றவை இன்றி மீண்டும் தேவர்கள் ஆவீர்கள் என்று ஆசீர்வதித்தார். இந்த ஐந்து விஸ்வேதேவர்களே திரௌபதியின் கர்பத்தில் பிறந்து விவாகம் பிள்ளைகள் போன்ற பந்தங்களில் சிக்காமல் பிரம்மசாரிகளாகவே அஸ்வத்தாமனின் கையால் மரணமடைந்தனர். ஞான பக்ஷிகளின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த ஜைமினி அவைகளிடம் அரிச்சந்திரனின் வரலாற்றை சம்பூர்ணமாகக் கேட்டு அறிந்து கொண்டார்.
மஹாத்மாக்களே எனக்கு இன்னும் சில ஐயங்கள் உள்ளன. அவற்றையும் தீர்த்து வையுங்கள் என்று வேண்டிக் கொண்டார். பக்ஷிகள் சம்மதித்தன. பாவங்கள் என்றால் என்ன என்று கேட்டார் ஜைமினி. முனிவரே பாவங்கள் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இரண்டு வகைப்படும். சின்னச் சின்னப் பாவங்களுக்கு உடனுக்குடன் பலன்கள் கிடைத்து விடும். ஏதோ ஒரு வியாதியின் உருவில் அவை அனுபவிக்கப்பட்டு விடும். பெரிய பாவங்களானால் ஜென்ம ஜென்மமாகத் துரத்தி வரும். தெரித்து செய்த பாவங்களுக்குத் தண்டனை பெரிதாக இருக்கும் என்று பதிலளித்தன தர்ம பக்ஷிகள். இவ்விதமாக இன்னும் தத்தாத்திரேயரின் கதை, காலயவனனின் கதை, மதாலசா சரித்திரம், கிருஹஸ்தாசிரம தர்மங்கள் போன்ற எத்தனையோ சந்தேகங்களைக் கேட்டார் ஜைமினி. அவற்றுக்கெல்லாம் ஞானப் பறவைகள் தகுந்த விளக்கங்கள் அளித்து அதன் மூலம் முக்தி பெற்றன. சந்தேக நிவர்த்தி அடைந்த ஜைமினி ரிஷி ஞான பட்சிகளின் உருவத்தில் இருந்த முனி குமாரர்களை ஆசீர்வாதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.
No photo description available.
All reactions

பாஞ்சஜன்யம்

 பாஞ்சஜன்யம்

பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த ஒரு சங்கில் 4 சங்கங்கள் இருக்கும். மொத்தத்தில் ஐந்து சங்குகள் இருக்கும். இந்த சங்கு வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தது. சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம். அதிலும் சுத்தமாக அட்சரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். இந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கில் இருந்து எழக்கூடிய ஓம்கார நாதமானது அட்சரம் ஒரு துளியும் பிசகாத நாத பிரம்மமானது அதன் ஒலியைக் கேட்கும் அனைவரையும் தமது மூல இயல்பான ஆத்ம நிலையுடன் ஒரு கனம் ஒன்ற வைக்கும் விதமாக அவ்வொலி இருந்தது என்பதை மகான்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்கும். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்கும். சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.
தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக திருமாலுக்கு சிவபெருமான் சங்கினை வழங்கிய காரணத்தினால் இத்தல இறைவன் சங்காரண்யேஸ்வரர் சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். கிருஷ்ணன் தன் கையில் பாஞ்சஜன்யம் சங்கை வைத்திருக்கிறார். சங்கு மகாலக்ஷ்மியின் அம்சமாக உள்ளது. கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம் சங்கு அது போல் அர்ஜுனன் தேவதத்தம் சங்கையும் பீமன் மகாசங்கம் சங்கையும் தர்மர் அனந்த விஜயம் சங்கையும் நகுலன் சுகோஷம் சங்கையும் சகாதேவன் மணிபுஷ்பகம் சங்கையும் பயன்படுத்தினர்.
படத்தில் உள்ள இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
All reactions
2

குரோதம்

 குரோதம்

பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான். பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான். பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.
அண்ணா இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன். என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார். கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை. இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப் பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம் சாதாரண மனித வடிவை அடைந்தது. வா என் தோழனே என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார். அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது. அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன் அவனை அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும் சிறியவனாகிவிட்டான் அரக்கன். இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம். தம்பி எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர் இந்த அரக்கனின் பெயர் குரோதம். நீ கோபமாகும் போது அவனுக்கு அது உணவாகும். மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன் இவன். நீ உன்னுடைய கோபத்தைத் துறந்து விட்டு அன்பை அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி விடுவான் என்று சொல்லி முடித்தார்.
வெறுப்பால் வெறுப்பை யாராலும் சமாதானப்படுத்தவே இயலாது. அன்பின் மூலமாக எல்லாவற்றையும் வெல்லமுடியும்.
No photo description available.
All 

நவ துர்க்கை அவதாரங்கள்:

 நவ துர்க்கை

உலகையே துன்புறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை எதிர்த்து நின்று அவனை அழித்த துர்கா தேவியின் சக்தியை வழிபடும் நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபடுகிறோம். தீய சக்தியை வென்ற நல்ல சக்தியின் கதைதான் நவராத்திரி அம்பாளின் வழிபாட்டைக் குறிக்கிறது. வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. இவர்களை நவராத்திரி தினத்தில் வழிபட்டு அன்னையின் அருளை பெற்றிடுவோம்.

நவ துர்க்கை அவதாரங்கள்:
1.சைலபுத்ரி
2.பிரம்மச்சாரினி
3.சந்திரகாண்டா
4.குஷ்மந்தா
5.ஸ்கந்தமாதா
6.காத்யாயனி
7.காலராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி
1. சைலபுத்ரி
துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. சைலபுத்ரி என்றால் மலைமகள் என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி சதி பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. ஒன்பது சக்கரங்களில் இவள் மூலாதாரத்தில் இருப்பவள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்கி இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இவளின் வாகனம் நந்தி. ஆயுதமாக சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.
2. பிரம்மசாரிணி
பிரம்ம என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார். பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பேரறிவு பொறுமை மற்றும் ஞானத்தைப் பெறலாம். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவள். ஒன்பது சக்கரங்களில் இவள் சுவாதிஷ்டானத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள்.
3. சந்திரகாண்டா
நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். சந்திர என்றால் நிலவு. காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர மணி அணிந்து பத்து கைகளை கொண்டு சிங்க வாகனத்துடன் அருளுகின்றார். சந்திரகாண்டா போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது சக்கரங்களில் இவள் மணிபூரக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பார்கள்.
4. கூஷ்மாண்டா
1.கூ 2. உஷ்மா 3.ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே 1. சிறிய 2. வெப்பமான 3. உருண்டை என்ற பொருள் கொண்டது. கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரிய மண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. இவரை வணங்குவோர் உடல் மன வலிமை பெறுவர்கள். ஒன்பது சக்கரங்களில் இவள் அனாதக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் உடல் மன வலிமை பெறுவார்கள்.
5. ஸ்கந்த மாதா
ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை தேவர்களின் சேனைகளுக்கு தலைவனாக இருக்கும் முருகனின் தாய் ஆவார். இவர் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்ய முருகனுக்கு சக்தி கொடுத்தவள். நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையுடனும் ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் மற்றொரு கரத்தின் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார். இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசியும் நமக்கு கிட்டுகின்றது. ஒன்பது சக்கரங்களில் இவள் விசுத்தி சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்ரத்தை அடைவோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி மனமானது தூய்மையான கருத்துக்களால் நிறையும்.
6. காத்யாயனி
முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவளுக்கு காத்யாயனி என்ற பெயர் வந்தது. இவளுக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு. ஒன்பது சக்கரங்களில் இவள் ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் முக்காலத்தையும் உணரும் தன்மையை பெறுவார்கள்.
7. காளராத்திரி
அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம். காள என்றால் நேரத்தையும் மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக் கூடியது. இவளின் நான்கு கைகளின் ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும் மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது. இவளின் பார்வை பட்டாலே துன்பமும் பாவமும் தொலைந்திடும். ஒன்பது சக்கரங்களில் இவள் சகஸ்ரதள சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்களின் மாயை விலகும். இறை காட்சியை காண்பார்கள். தனக்குள்ளே இறைவனை உணர்வார்கள்.
8. மகாகௌரி
மகா என்றால் பெரிய என்றும் கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவள் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றாள். முற்காலத்தில் மகாகௌரி ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது. இவளது தவத்தின் பலனால் சிவன் இவரை மணந்து கொள்வதாக கூறினார். அதற்கு முன் இவளை கங்கை நீரில் நீராட இறைவன் பணித்தார். இறைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கங்கையில் நீராடிய தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால் இவள் மகாகௌரி என அழைக்கப்படுகிறார். நான்கு கரம் கொண்ட மகாகௌரி ஒரு கரத்தில் சூலம் மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு வெண்மையான காளை வாகனமாக இருக்கின்றது. யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கி பிறவியில்லாத நிலையை அடைவார்கள்.
9. சித்திதாத்ரி
சித்தி என்றால் சக்தி என்றும் தாத்ரி என்றாள் அருள்பவள் அருள்பவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகளான சித்திகள் அணிமா மகிமா கரிமா லஹிமா ப்ராப்தி பிரகாமியம் வாசித்வம் ஈசத்வம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி நான்கு கரங்களில் இடது கரத்தில் கதை சக்கரத்துடனும் வலக் கரத்தில் தாமரை சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம். இவள் சிவ பெருமானே வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தேவி புராணம் கூறுகிறது. மோட்சத்தை அருளக் கூடிய சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் தேவர் முனிவர் யட்சர் கிங்கரர் வழிபடுவார்கள்.
யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் அட்டமா சித்திகளை பெறுவார்கள்.
+5
All reactions:

யோக நரசிம்மரின் இளஞ்சிவப்பு நிறத்தில்

 நரசிம்மர்

விஷ்ணு பகவானின் அவதாரமான யோக நரசிம்மரின் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. நரசிம்மர் நான்கு கைகளுடன் உட்குடியாசனத்தில் அமர்ந்துள்ளார். நரசிம்மருக்கு 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு உள்ளது. மீதமுள்ள 2 கைகளும் கால்களும் யோகப்பட்டையுடன் உட்குடிகாசனத்தில் உள்ளது. டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்டது. இடம் ஓடிசா மாநிலம். காலம் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைபட்டது.
All reactions
4

சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும்

 வினாயகரின் சித்தி புத்தி தத்துவம்

சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும் விநாயகப் பெருமானே சித்தி புத்தி விநாயகர் ஆவார். உயிர்களின் பிரார்த்தனைகளை சித்திக்க அதாவது வெற்றிகரமாக நிறைவேற வைப்பவரும் நல்ல புத்தியைக் கொடுப்பவரும் சித்தி புத்தி வினாயகர் ஆவார்.

பார்வதிதேவியின் வெண்கலச் சிலை

 பார்வதிதேவி

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகைக் கொண்ட இந்த சோழர் காலத்தைச் சேர்ந்த பார்வதிதேவியின் வெண்கலச் சிலை நியூயார்க்கில் உள்ள தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட் என்ற மியூசியத்தில் தற்போது உள்ளது.

உக்ரநரசிம்மர் இடம் ஸ்ரீபிரஹலாதன் கோவில் அஹோபிலம்.

 உக்ரநரசிம்மர்

இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்? என்று இரணியன் தனது கதையால் தூணை அடித்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் உக்ரநரசிம்மர். இடம் ஸ்ரீபிரஹலாதன் கோவில் அஹோபிலம்.

விஷ்ணு இடம் கம்போடியா

 விஷ்ணு

கருடன் மீது சவாரி செய்யும் விஷ்ணு பகவானின் 9 ஆம் நூற்றாண்டு பழங்கால சிலை. இடம் கம்போடியா

கஜசம்ஹாரமூர்த்தி

 கஜசம்ஹாரமூர்த்தி

இடம்: திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில். கடலூர் மாவட்டம்.

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...