Friday, November 24, 2023

உணவில் உள்ள 5 வகை தோஷங்கள்

 உணவில் உள்ள 5 வகை தோஷங்கள்

வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யாரல் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது பிராணனைத் தாங்குவது. அதை யார் சமைக்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பது முக்கியம். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
1. அர்த்த தோஷம்
2. நிமித்த தோஷம்
3. ஸ்தான தோஷம்
4. ஜாதி தோஷம் (இது மனித ஜாதியை குறிப்பது அல்ல. சாத்வீக உணவை குறிக்கும்)
5. சம்ஸ்கார தோஷம்
1. அர்த்த தோஷம்
அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.
பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். தவறு செய்து விட்டோமே இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். பணத்தாசை பிடித்து தவறு செய்யும் ஒருவரிடம் உணவு அருந்தினால் வருவது அர்த்த தோஷம் ஆகும்.
2. நிமித்த தோஷம்
உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதோடு நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் திரௌபதி நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் அம்பின் வழியாக வெளியேறும் போது நான் பரிசுத்தவனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது என்று கூறினார். தீய எண்ணத்தோடு இருப்பவன் அளிக்கும் உணவு சாப்பிட்டால் தீமையான எண்ணங்களையே உருவாக்கும் இது நிமித்த தோஷம் ஆகும்.
3. ஸ்தான தோஷம்
உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும் இது ஸ்தான தோஷம் ஆகும்.
4. ஜாதி தோஷம்
மனிதனுக்கு சாத்வீக குணம் ரஜோ குணம் தாமச குணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. சாத்வீக உணவாக உட்கொள்ள வேண்டும். சாத்வீக உணவு இல்லை என்றால் அது ஜாதி தோஷம் ஆகும்.
சாத்வீக குணம் - உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால் நெய் அரிசி மாவு பருப்பு போன்றவை சாத்வீகமானவை. இதனை சாப்பிட்டால் இறைஉணர்வு. மனஅடக்கம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு அச்சப்படுதல், தானம், பணிவு, எளிமை ஆகியவை கிடைக்கும். சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.
ரஜோ குணம் - புளிப்பு உரைப்பு உப்பு உள்ளவை ராஜோ குணங்கள் கொண்ட உணவாகும். இந்த உணவை சாப்பிட்டால் ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய ரஜோ குணங்கள் வரும். ராஜோ உணவு உலகப்பற்று உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.
தாமச குணம் - பூண்டு வெங்காயம் மாமிசம் முட்டை போன்றவை தாமச உணவாகும். இதனை சாப்பிட்டால் சோம்பலும் ராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தாமச உணவு தீய குணத்தை வளர்க்கிறது.
5. சம்ஸ்கார தோஷம்
தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.
இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். அப்போது தான் மனம் அன்புடனும் தெளிந்த நல்அறிவுடனும் சலனமில்லாமலும் இறை சிந்தனையுடனும் இருக்கும். தானே சமைத்த உணவு தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
No photo description available.
All reactions:

ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

 ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

சுந்தரர் வெள்ளை யானை மீதேரியும் அவர் தோழராரன சேரமான் பெருமாள்நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் தானும் கைலாயம் செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய ஆரம்பித்தார். ஔவையாருக்கு விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும் கயிலைக்கு தான் அழைத்து செல்வதாகவும் அருளினார். ஔவையார் பொறுமையாக தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஔவையாரை கணபதி தனது துதிக்கையால் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கையிலை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது.

ஒரு மண்டலம் 48 நாள்

 ஒரு மண்டலம் 48 நாள்

சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவது போல் நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன. மற்ற கோள்கள் அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும் அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும் 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர். ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசிக்கூட்டங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்கள் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்.
கிரகங்கள் 9 ராசி கூட்டங்கள் 12 நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டினால் 9+12+27=48 இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை. இதன் காரணமாகவே தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிட்டால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும் என்பார்கள். மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அவர்களின் சிரத்தைக்கு ஏற்ப நிச்சயம் கைகூடும்.
No photo description available.
All reactions:

திரு முருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

 திரு முருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர். காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால்
நான் என்னுடைய பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டிவிடுங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.
அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான் 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்த சிறுவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான், 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.
No photo description available.
All reactions:


சேனைகளின் தலைவன் முருகன்

 சேனைகளின் தலைவன் முருகன்

தற்போது இருக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதிகள் அக்காலத்தில் காந்தாரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கோலத்தில் உள்ள முருகனின் சிலை. காலம் 2 ஆம் நூற்றாண்டு. தற்போது கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய 16 கால் மண்டபத்தில்

 வினாயகரின் அவதார சிற்பம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய 16 கால் மண்டபத்தில் வினாயகரின் அவதார சிற்பம் சுதை சிற்பமாக உள்ளது.

7 ஆம் நூற்றாண்டு விநாயகரின் எழில்மிகு சிற்பம்

 வினாயகர்

7 ஆம் நூற்றாண்டு விநாயகரின் எழில்மிகு சிற்பம். இடம் வியட்நாமில் உள்ள டானாங் ஊரில் என்ற அருங்காட்சியகத்தில் உள்ளது.

நந்தியும் அனுமனும்

 நந்தியும் அனுமனும்

சைவத்தில் போற்றப்படும் நந்தி பகவானும் வைணவத்தில் போற்றப்படும் அனுமனும் ஆரத்தழுவி கொள்ளும் சுதை சிற்பம். இடம் நவ திருப்பதிகளுள் ஒன்றான திருவரகுணமங்கை கோயில்.

தரங்கம்பாடி - செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம்

 சிவ வடிவங்கள் 64 - 44. தட்சயக்ஞஷதமுர்த்தி

உலகை படைக்க உதவியாக தட்சனை பிரம்மா படைத்தார். தட்சன் பிரம்மாவின் மானச புத்திரன். தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தவம் இருந்து பார்வதி தேவியை மகளாக அடைந்தான். அவளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தாட்சாயிணி பெரியவள் ஆனதும் சிவபெருமானைக் கண்டதும் தனது மாயை மறைந்து அவருடன் இணைந்து விட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் ஈசனுடன் இணைந்து விட்டாள் என்ற கோபத்தில் சிவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக் குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான்.
சிவபெரிமானின் துணைவியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணி தனது தந்தையான தட்சனிடம் நியாயம் கேட்டு வந்த போது அவளை மதிக்காமல் தட்சன் பேசவே தாட்சாயணி யாகத் தீயில் வீழ்ந்து யாகத்தை தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமான் கோபத்தில் ருத்திர தாண்டவம் ஆடி தனது அம்சமான வீரபத்திரரை அழைத்து தட்சனை வதம் செய்ய உத்தர விட்டார். வீரபத்திரர் தட்சனை அழிக்க யாக சாலை சென்று அங்கிருந்த தேவர் முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார். வீரபத்திரிரன் பூத கணங்கள் தட்சன் இருப்பிடம் யாகசாலை கோட்டை மதில் என அனைத்தையும் அழித்தனர். தட்சனின் சிரசை தம் கைவாளினால் வெட்டி வீழ்த்தினார் வீரபத்திரர். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார். பார்வதியின் உத்தரவிற்கு ஏற்ப மாண்ட அனைவரும் உயிர் பெற்றனர். தட்சனை பிழைக்க வைக்கும்படி பிரமன் வேண்ட உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலையை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்பித்தார். தட்சனின் ஆணவம் அகன்று சிவபெருமானை சரணடைந்தான். தட்சன் பார்வதி சிவபெருமான் தரிசனம் பெற்று சிவகணங்களில் ஒன்றானான். சிவனது அம்சமாக இருக்கும் வீரபத்திரருடன் மாண்ட அனைவரையும் பிழைக்க வைத்து அருள் செய்த பார்வதியும் ஆட்டுத் தலையுடன் இருக்கும் தட்சன் ஆகிய மூவரும் இருக்கும் கோலமே தட்சயக்ஞஷத மூர்த்தியாகும்.
தரங்கம்பாடி - செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூரில் இந்த வடிவத்தைக் காணலாம்.
May be an image of temple
All reactions:

உனகோடி என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு

 ஒரு கோடி தேவர்கள் சிற்பங்களாக

உனகோடி என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு (9999999) என்று பொருளாகும். இது ஒரு வங்காள மொழிச் சொல் ஆகும். இது ஒரு பழமையான சைவத்தலமாகும். இங்கு பாறைகளில் புடைப்புச் சிற்பங்களும் கற்சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. இந்த சிற்ப உருவங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள். இரண்டு கல் சிற்பங்கள். கல்லில் வெட்டப்பட்ட சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தலையும் பிரம்மாண்டமான விநாயகர் சிற்பமும் சிறப்பாக குறிப்பிடப்பிடத்தக்கன. கால பைரவர் என அழைக்கப்படும் இந்த சிவனின் சிலை சுமார் 30 அடியைவிட உயரமானதாக உள்ளது. இதில் கலை நயமிக்க சிவனின் தலை மட்டும் சுமார் 10 அடி உயரம் உள்ளது. சிவன் சிலையின் இருபக்கத்திலும் இரு பெண் தெய்வங்களின் முழு உருவங்கள் உள்ளன. அதில் ஒன்று சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை. அருகே நந்தி உருவமும் உள்ளது. நந்தி உருவம் அரைப்பகுதி தரையில் புதைந்துக் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு கல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த செதுக்கல்கள் அழகிய நிலப்பரப்பு வனப்பகுதியில் அமைந்துள்ளன சுற்றிலும் பசுமையான தாவரங்கள் உள்ளன. இது சிற்பங்களுக்கு அழகு சேர்க்கிறது. திரிபுரா மாநிலத்தில் உனகோடி அகர்தலாவில் இருந்து வடகிழக்கில் 178 கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் உள்ள எல்லாச் சிற்பங்களும் குல்லு கம்ஹார் என்று சிற்பியால் வடிக்கப்பட்டவை. அவர் பார்வதியின் பக்தர். பார்வதியும் சிவபிரானும், சிவகணங்களுடன் இந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினார் இந்தச் சிற்பி. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பிய அன்னை பக்தனுக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். இரவு முடிவதற்குள் ஒருகோடி உருவங்களைச் செதுக்கச் சொன்னாள். பார்வதியின் அருளால் விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பி செதுக்கி முடித்தார்.
இந்த சிற்பங்களுக்கு இன்னோரு புராண கதையும் சொல்லப்படுகிறது.
சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் காசிக்குச் செல்லும் வழியில் இந்த இடத்தில் இரவு தங்கினார். பின் அனைத்து தேவர்களையும் சூரியன் உதிக்கும் முன் எழுந்து காசிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காலையில் சிவனைத் தவிர வேறு யாரும் சோம்பல் காரணமாக எழுந்திருக்கவில்லை. எனவே அனைவரையும் கற்களாக மாறும்படி சபித்து விட்டு காசிக்கு தானே தனியாக புறப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான அசோகாஷ்டமி மேளா என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பயணிகள் கலந்து கொள்ளும் திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்தில் 1600 ஆண்டுகள் பழமையான விநாயகர்.

 விநாயகர்

ஆந்திர மாநிலத்தில் உள்ள உண்டவல்லி குகையில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான விநாயகர்.

குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம்

 சிவ வடிவங்கள் 64 - 45. கிராதமூர்த்தி (வேட மூர்த்தி)

பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்டிருந்தனர். அங்கே அவர்களின் குறைளை கேட்கவும் ஆலோசனைக் கூறவும் மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றிப் பேச வியாசமுனிவர் பாண்டவர்கள் இருந்த காட்டுப் பகுதிக்கு சென்றார். அங்கே பலவகையில் இன்னல்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் கூறினார். அப்போது கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு வேண்டிய சக்தி வாய்ந்த அஸ்திரத்தைப் பெற சிவபெருமானை நோக்கி தவமியற்றச் சொன்னார். அவரது அறிவுரைப்படி குறிப்பிட்ட நல்ல நாளில் தவம் செய்ய அர்ஜூனன் இமய மலையை அடைந்தான். அங்கே வசிக்கும் முனிவர் ரிஷிகள் தேவகணத்தினரின் ஆசியுடன் அங்கு சிவபெருமானை மனதில் நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தான். அர்ஜூனனின் தவத்தை சோதிக்க இந்திரன் விரும்பினான். ஆகவே தேவலோக நாட்டியக் கன்னிகளை அனுப்பி தவத்தைக் கலைக்கும்படி செய்தான். அவர்கள் அர்ஜூனன் முன்பு பலவித நாட்டியமாடியும் தவம் கலையவில்லை.
அர்ஜூனனின் தவப் பலனால் சிவபெருமான் வேடராகவும் பார்வதி தேவி வேடுவச்சியாகவும் முருகன் குழந்தையாகவும் வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும் தேவகணங்கள் வேடுவக் கூட்டமாகவும் மாறியது. அர்ஜூனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர். அங்கே அர்ஜூனனின் தவத்தை கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக் கண்ட சிவபெருமான் பன்றி மீது அம்பு ஏய்து அசுரனை கொன்றார். அப்போது தவம் கலைந்த அர்ஜூனன் வேடுவக் கோலத்தில் இருந்த இறைவனை பார்த்ததும் தன்னை எதிர்க்க வந்திருக்கிறார் என்று எண்ணி சிவனுடன் யுத்தம் புரிந்தான். பின் அர்ஜூனனுக்கு சிவபெருமான் தம்பதி சமேதராய் காட்சிக் கொடுத்தார். இறைவனிடம் யுத்தம் புரிந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை சரணடைந்த அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தை சிவனிடமிருந்து பெற்றான். அர்ஜூனனுடன் அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுக்க வந்த இறைவன் ஏற்ற வேடுவ வடிவமே கிராத மூர்த்தியாகும்.
குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் கோயிலி வில்வாரண்யேஸ்வரர் என்ற பெயரில் கிராத மூர்த்தி அருள்பாலிக்கிறார். கேரளாவில் அமைந்துள்ள வேட்டைக்கொருமகன் ஆலயங்கள் வேடுவக் கோலத்தில் ஈசனை மூலவராகக் கொண்ட கோயில்களாகும்.
No photo description available.
 reactions:

கிளி முகம் கொண்ட யோகினி உமாதேவி சிலை தற்போது குவாலியர் மாநில

 கிளி முகம் கொண்ட யோகினி உமாதேவி

தாந்த்ரீக வழிபாடு முறையின் யோகினியான கிளி முகம் கொண்ட பெண் தெய்வமான உமாதேவி இவள். ஒரு ஆட்டுக் குட்டியின் முகத்தைக் கொண்ட குழந்தையைப் பிடித்துக் கொண்டு காட்டுப் பன்றியின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள்.
காலம் 11 - 12 ஆம் நூற்றாண்டு இடம் ஹிராபூர் புவனேஸ்வரில் கண்டெடுக்கப்பட்ட இந்த பழமையான சிலை தற்போது குவாலியர் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல

 சிவ வடிவங்கள் 64 - 46. குருமூர்த்தி

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மாணிக்கவாசகர் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும் ஞானம் என்பதும் போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்து விட்டார் மாணிக்கவாசகர்.
பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.
பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.
மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். பல சிவ தலங்களுக்கும் சென்று பல பாடல்களை இயற்றினார்.
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருவடி தீட்சை கொடுத்து உபதேசம் செய்த உருவமே குருமூர்த்தி ஆகும்.
May be an illustration of 2 people and text that says 'ハ மாணிக்கவாசகர் திருவடி தீட்சை'

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...