Friday, November 24, 2023

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல

 சிவ வடிவங்கள் 64 - 46. குருமூர்த்தி

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மாணிக்கவாசகர் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும் ஞானம் என்பதும் போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்து விட்டார் மாணிக்கவாசகர்.
பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.
பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.
மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். பல சிவ தலங்களுக்கும் சென்று பல பாடல்களை இயற்றினார்.
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருவடி தீட்சை கொடுத்து உபதேசம் செய்த உருவமே குருமூர்த்தி ஆகும்.
May be an illustration of 2 people and text that says 'ハ மாணிக்கவாசகர் திருவடி தீட்சை'

சுயநலமில்லாத அன்பு தான்

 அன்பு

ஒரு நாள் குருவும் அவரது சீடர்களும் ஒரு குளக்கரையில் அமர்திருந்தார்கள். அப்போது ஒரு சீடன் எழுந்து குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு விளக்கமாக சொல்லுங்கள் என்றான். குரு சீடனுக்கு சுற்றிலும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது. குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான். குருவோ எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.
ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப்பை இருந்தது. அதில் மீன்களின் உணவான பொரி இருந்தது. அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே மீன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். குரு அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். பார்த்தாயா இருவரும் மீனின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் மீனென்றால் உயிர் என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன் மீன்களிடம் இருக்கும் ருசி என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது ஆனால் இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில் அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது நிரந்தரமானது என்று சொல்லி முடித்தார்.
No photo description available.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோப்பா

 கமண்டல கணபதி கோவில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோப்பா என்பது கடல் மட்டத்திலிருந்து 763 மீட்டர் உயரத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தில் உள்ள சிறிய கிராமம் கேசவே. இங்கு கமண்டல கணபதி திருக்கோவில் இருக்கிறது. இந்த இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளை இருக்கும். அதன் வழியே தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மழைக் காலங்களில் அதிக அளவிலும் வெயில் காலங்களில் குறைவாகவும் இந்த துளையில் இருந்து நீரூற்று வந்துகொண்டே இருக்கும். ஒருபோதும் இதில் நீர் வராமல் இருந்ததில்லை. இந்த அதிசயம் 1000 வருடங்களாக நடைபெற்று வருவதாக வரலாறு உள்ளது.
புராண வரலாற்றின்படி சனி பகவானின் கிரக நிலை ஆதிக்கத்தில் சில காலம் பார்வதி தேவி இருந்தாள். ஆகையால் அவர் துன்பத்தில் சிக்கினார். இதற்குத் தீர்வு காணும் வகையில் பூலோகம் வந்த பார்வதிதேவி தவம் செய்ய பூமியில் சிறந்த இடத்தைத் தேடி தவம் செய்ய முடிவு செய்தாள். தனது தவத்தில் உள்ள தடைகளைத் தவிர்ப்பதற்காகவும் சனி தோஷத்திலிருந்து விடுபடவும் விநாயகரை வழிபட விரும்பிய பார்திதேவி இங்கு கணபதியை ஸ்தாபித்தாள். விநாயகர் சுகாசனம் என்ற ஆசனத்தில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார். ஒரு கையில் மோதகமும் மறு கையில் அபயஹஸ்தா வும் ஏந்தியபடி இருக்கிறார். வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் தவித்த போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தன் ஆன கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில் வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.
விநாயகர் முன்பாக உள்ள இந்த துளையில் இருந்து வரும் நீரைத்தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் பொங்கியும் சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது. விநாயகரின் காலடியில் வெளிப்படும் இந்த நீரானது இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி அங்குள்ள துங்கா நதியில் கலக்கிறது.

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் காவியமான மகாபாரதம்

 நவகுஞ்சரம்

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் காவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட உயிரினம் ஆகும். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு நவகுஞ்சரம். நவ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர். ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தான். அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றியது. தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார். பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார். அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது என்பதை உணர்ந்தார் அர்ஜுனன். வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தான். தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.
ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும் அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஒவிய பாணியான படா சித்ரா ஓவியத்தில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

திருப்பெருந்துறையில் உள்ள ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி

 சிவ வடிவங்கள் 64 - 47. அசுவாருடமூர்த்தி

பாண்டிய மன்னன் குதிரைக்காக மாணிக்கவாசகரை துன்புறுத்த மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைந்தார். சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றார் இறைவன். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டு மாணிக்க வாசகரை மேலும் துன்புறுத்தினான். மீண்டும் மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைய சிவபெருமானின் திருவிளையாடலால் பாண்டிய மன்னன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.
மாணிக்கவாசகர்க்காக நரிகளை பரிகளாக்கி அதன் தலைவனாக சென்று வந்த கோலமே அசுவாருட மூர்த்தியாகும். திருப்பெருந்துறையில் உள்ள ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயிலில் உள்ள பஞ்சாட்சர மண்டபத்தின் தூண் ஒன்றில் இந்த மூர்த்தியின் சிற்பம் உள்ளது.
All reaction

திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:

 திருநீறு

திருநீற்று நான்கு வகைகளாக உள்ளது அவை:
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்
கல்பம்: கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாமல் தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி மந்திரங்களைச் சொல்லி சிவாக்கினியில் இட்டு எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.
அணுகல்பம்: காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்: மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத் தீயில் எரித்து பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்: அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
No photo description available.
All reactions:

இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில்

 பத்துக் கரங்களில் ஆயுதமேந்தியபடி நடனமாடும் சிவன்

இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில் இந்த சிலை உள்ளது. வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. உயரமான தலையலங்காரம் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி கணபதி முருகன் (முகம் சிதைக்கப் பட்டுள்ளது) தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த_மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்த பின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம்.

தாமரை லிங்கம் சோமநாதர்

 தாமரை லிங்கம் சோமநாதர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. இந்த ஊரில் அருள்மிகு சோமநாதர் திருக்கோவில் உள்ளது. புராணபெயர் சதூர்வேதி மங்கலம் பெருமூள்ளுர் பேரூர். மூலவர் ஸ்ரீசோமநாதர். சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்க பாணத்துடன் இறைவன் அருளுகின்றார். அம்பாள் சுந்தராம்பிகை குந்தளாம்பிகை. நின்ற கோலத்தில் அருள் காட்சி கொடுக்கின்றாள். தலவிருட்சம் செந்தாமரை கொடி. தீர்த்தம் லட்சுமி தீர்த்தம்.
இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். ஸ்ரீதிரிபுவன சித்தர் என்பவர் ஓர் அரிய தவத்தை மேற்கொண்டார். பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களிலும் அரிய ஒரு தெய்வீகத் தாமரைப் புஷ்பத்தை தன் தவத்தினால் லிங்கமாக உருவாக்கி வழிபட எண்ணம் கொண்டார். தன் எண்ணத்தின் படி பூலோகத்தில் இக்கோவிலின் தீர்த்தத்தில் இருந்து எடுத்த தாமரை மலரை தன் தவ வலிமையால் லிங்கமாக உருவாக்கி பிரதிஸ்டை செய்து வழிபட்டார். பாணலிங்கமே தாமரைத் தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல் வேறு எங்கும் காண இயலாது.
கிழக்கு நோக்கிய திருவாயில். விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் நவக்கிரகம் பைரவர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும் புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன.
தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன் மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான பெருமகளூரே பூலோகம் பூவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர் இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லும் போது ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.
பல யுகங்களாக இருந்த இந்த சிவலிங்கம் இந்த யுகத்தில் வெள்ளத்தின் காரணமாக குளத்திற்குள் மூழ்கியது. பிற்காலத்தில் இந்த குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழ மன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித் தழுவிய போது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து வைரம் வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
All reactions:

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...