Friday, November 24, 2023

சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி

 சிவ வடிவங்கள் 64 - 59. கூர்மசம்ஹாரமூர்த்தி

தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்து இருந்தார்கள். தங்களின் வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைய வேண்டும். அதனைக் கடைவதற்கு கூட தங்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தார்கள். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும் வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திர மலையின் அடியை தாங்கினார். பாற்கடலை கடைய கடைய பல பொருட்கள் வந்தது. அப்பொருட்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டார்கள். ஆலகால விஷத்திற்கு பின் இறுதியாக அமிர்தம் கிடைத்தது.
அமிர்தத்தை அசுரர்கள் பெற்றால் உலகிற்கு மேலும் தீமைகள் நடைபெறும் என்று எண்ணிய திருமால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தத்தை குடித்தார்கள். இதனை அறிந்த திருமால் கையில் இருந்த அகப்பையால் அவர்களது தலையை வெட்டி அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல் சிவபூஜை செய்து ராகு கேது கிரகங்களாக உருமாறினார்கள். இதனிடையே மந்திர மலையைத் தாங்கியபடி நின்ற திருமாலின் அவதாரமான ஆமை ஏழு கடல்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் அனைத்து கடல் நீரையும் குடித்த ஆமை கண்ணில் கண்ட அனைத்தையும் உண்டது. இதனால் உலக மாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர்கள். ஆமையை அழிக்குமாறு கூறினார்கள். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் ஆமையின் உடலைக் குத்தி ஆமையின் வலிமையை குறைந்து அதன் ஓட்டை தன் திருமார்பில் ஆபரணமாக அணிந்து கொண்டார். நடந்தவற்றிற்கு திருமால் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தனது திருபாற்கடலுக்கு சென்றார். திருமாலின் ஒரு அவதாரமாகிய ஆமையின் உருவத்தை அழித்ததால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
சென்னையில் பாரிமுனைக்கு அருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது ஓவியம் காணப்படுகின்றது. சிவலிங்கம் ஆமையின் மீது இருப்பதைக் காணலாம். கந்த புராணமும் காஞ்சி புராணமும் இந்த வரலாற்றை சிறப்பாக சொல்கிறது.
May be a doodle of text
All reactions:
5

கல்யாண சுந்தரமூர்த்தி இடம் பங்களாதேஷ் டக்காவின் தேசிய அருங்காட்சியகம்.

 கல்யாண சுந்தரமூர்த்தி

கல்யாண சுந்தரமூர்த்தியின் புராண சிற்பம். இடம் பங்களாதேஷ் டக்காவின் தேசிய அருங்காட்சியகம்.

மச்ச சம்ஹார மூர்த்தியாகும்.

 சிவ வடிவங்கள் 64 - 60. மச்ச சம்ஹாரமூர்த்தி

சோமுகாசுரன் என்ற அரக்கன் மூன்று உலகத்தவராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்து பெற்றார். அந்த வரத்தினால் கர்வம் கொண்டு நானே பெரியவன் என்ற எண்ணத்தில் பிரம்மனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரம்மன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். கடலிலுள் சென்ற மீன் சோமுகாசுரனைத் தேடிக் கடலை கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டு பிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்த வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மலையைப் போன்ற அந்த மீன் கடலில் கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். அதன் வீரியம் முழுவதையும் அடக்குவதற்காக அதன் விழிகள் இரண்டையும் பறித்து அவற்றைத் தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சுய உருவத்தைப் பெற்று சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க அவரும் தந்து ஆசி கூறினார். மீன் வடிவம் கொண்ட திருமால்லின் செருக்கை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தியாகும். அதர்வண வேதம் மீனுருவில் அட்டகாசம் செய்த திருமாலை அடக்கச் சிவபெருமான் கொக்கு வடிவம் எடுத்துச் சென்றதாக கூறுகிறது. இவரை காஞ்சிபுரத்துக் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது.

All rea

சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

 சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன் சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். தேவி நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால் சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே என்று உறுதிபடக் கூறிவிட்டான். அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்? என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி. ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான். வைகைக் கரைக்கு வந்து சேர்ந்த போது இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான் சோழன். அப்போது எங்கிருந்தோ திடீரென வந்து நின்ற ஓர் ஓடக்காரன் வைகையைக் கடக்க சோழனுக்கு உதவினான். அதுமட்டுமல்ல ஆலயம் வரை வழிகாட்டியபடி வந்தான். ஆனால் ஆலயமோ அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. சிவநேசன் பரிதவிப்பதைக் கண்ட ஓடக்காரன் மனமிரங்கி கவலை வேண்டாம். ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கேசப் பெருமானைத் தரிசிக்காமல் ஊர் திரும்ப வேண்டாம் என்றான். அவ்வாறே திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான்.
அர்த்தஜாம வழிபாடு முடிந்து ஆலய நடை சார்த்தப்பட்டால் பிறகு இரவில் மீண்டும் திறக்கும் வழக்கமில்லை. அப்படி வழிபடுவதும் தவறு. எல்லாம் தெரிந்திருந்தும் சிவநேசச் சோழன் ஆர்வ மிகுதியால் சொக்கேசனை மகிழ்வுடன் வணங்கினான். ஆலயக் கதவை பழையபடி மூடிச் சாவியை ஒப்படைத்துவிட்டு வந்தான் ஓடக்காரன். சோழனை வைகையின் மறுகரையில் கொண்டு விட்டான். சோழன் கொடுத்த பொற்காசுகளையும் வாங்க மறுத்துவிட்டான் அந்த அதிசய ஓடக்காரன். மறுநாள் ஆலயத்தைத் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய இலச்சினையான மீன முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான் இரவு ஒரு கனவு. அதில் சோமசுந்தரப் பெருமான் தோன்றினார்.
குலபூஷணா சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன். அவன் பக்தியை மெச்சி நான்தான் ஓடக்காரனாகச் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி முத்திரையிட்ட போது நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா நீ நினைப்பதுபோல் நந்தி முத்திரை பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜனின் சிறப்பு அடையாளம். இதை ஒரு காரணமாக்கி நீ சோழன் மீது போர் தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும் கனவில் வந்து சிவன் பேசப் பேச மெய் சிலிர்த்து போனார் பாண்டிய வேந்தர். பிறகு சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன் பாண்டிய மன்னன் ஆனான். ஆனால் ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை. இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான்.
சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன் ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி பிரபு பழசையெல்லாம் மறந்து விடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டு விட்டதால் உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க் கிடக்கிறாரே பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள் என்றாள். இல்லை தேவி தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்து விட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். சோழனுக்காக வாதிட என் தந்தையின் கனவில் மட்டுமே தோன்றினார். எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன் என்றான்.
சோழன் மகளை மணந்து உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன் மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால் மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம். முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசை மொழிகளை அர்ச்சித்து விட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். குலபூஷண பாண்டியனின் புதல்வனே என் மீது சினம் கொண்ட பிள்ளையே எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல. அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக் கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர் தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு விழி போராடு எதிரியை வெற்றிக் கொள் என்றார். சிவபிரான் பேசக்கேட்டு சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும் வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப் படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக் கொண்டு அப்பொழுதே புறப்பட்டான்.
சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம். வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும் தீப்பந்தங்களும் ஏந்தி நின்று காத்திருந்து மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம் மதுரைக்கு எதிரிகள் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன் எல்லோரும் கூறியது ஒரே தகவல் ஆஜானுபாகுவான ஒரு மனிதர் குதிரை மீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார். அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன் பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம் என்றனர். யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழ வேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். யார் அந்த மாய மனிதன்? என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.
அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம் பிரபோ தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான் என்றான். யார் நீ? என் ஊழியரில் எவரும் உன் போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்? இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும் பாண்டிய வீரன் சிவனாகிறார். இறைவா தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்? என்றான். அதற்கு இறைவன் பதற்றம் வேண்டாம் பாண்டிய மன்னா பரிகாரம் என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று பக்தனுக்காக இறைவனும் செய்யலாம். நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன் உன் ராஜ முத்திரையை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா? என்று கேட்டார். சிவ சிவா என்ன பேச்சு சுவாமி இது தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து மன்னித்து ஏற்றுக்கொள். அப்படியே ஆகட்டும் ஐயனே இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா? விண்ணும் மண்ணும் அதிர வாய் விட்டு சிரித்தார் இறைவன். பிறகு ராஜசேகரா என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? சிவன் என் கனவில் வரவேண்டும் என்றுதானே? வந்து விட்டேன் சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான் கனவு ஒரு வாழ்வுதான். கவலையை விடு கடமையைச் செய் சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று சொக்கேசப் பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவுகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.
No photo description available.

கங்காவதரணம் என்பது சிவபெருமானின்

 கங்காவதரணம்

கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இது பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர். ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி உடலைப் பின்புறமாக வளைத்து கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோக கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

தீர்க சுமங்கலி பவா

 தீர்க சுமங்கலி பவா

தீர்க சுமங்கலி பவா என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
ஒன்று திருமணத்தில்
2 வது 60 வயது சஷ்டியப்த பூர்த்தியில்
3 வது 70 வயது பீமரத சாந்தியில்
4 வது 80 வயது சதாபிஷேகத்தில்
5 வது 96 வயது கனகாபிஷேகத்தில்
60 வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் தனது என்ற பற்றை துறக்கும் போது செய்வது சஷ்டியப்த பூர்த்தி திருமணம் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
70 வது வயதில் தன்னுடைய மகன் மகள் சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். காமத்தை (ஆசைகள்) முற்றிலும் துறந்த நிலையே பீம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
80 வது வயதில் ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஜாதி மதம் இன பேதம் எதுவும் இல்லை. அனைத்திலும் அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார்.
96 வது வயதில் இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி ஆசி பெறுகிறார்கள்.
No photo description available.
All reactions:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.

 ஏலவார்குழலியை கரம் பற்றி ஏகாம்பரேஸ்வரர்

சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.

மாதங்கேஸ்வரர் இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்

 மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.
இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்
All reactions:
5

மௌனம் பற்றி

 ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 629

கேள்வி: மௌனம் பற்றி:
மௌனத்தை குறித்து பேசினாலே மௌனம் பங்கமாகிவிடுமப்பா. இதுபோல் நிலையிலேயே குரு தட்சிணாமூர்த்தியை குருவாரம் சென்று முடிந்த வரையில் வழிபாடுகளை செய்து வந்தாலும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை அன்றாடம் செய்து வந்தாலும் மௌனத்தவம் ஒருவனுக்கு சித்திக்கும்.
All reactions:

கங்காதர மூர்த்தி இடம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில்

 கங்காதர மூர்த்தி

கங்காதர மூர்த்தியின் வலது மேல் கரம் ஜடா முடியைப் பிடித்துக் கொண்டு வெகு வேகமாக வரும் கங்கையைத் தாங்குகிறது. வலது கீழ் கரத்தால் நாகத்தைப் பிடித்துள்ளார். இடது மேல் கரம் ஜடா முடியை அவிழ்ப்பது போல் உள்ளது. மற்றொரு கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்திருக்கிறார். வலது காலைத் தூக்கி முயலகன் தலை மீது வைக்க அவன் பாரம் தாங்காமல் சற்றுச் சாய்வாகப் படுத்து இடக்கையாலும் பாதத்தைத் தாங்குகிறான். அருகில் பகீரதன் இருக்க இறைவனைச் சுற்றி தேவர்களும் இருக்கின்றனர். கிமு 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவனால் கட்டப்பட்ட குடைவரைச் சிற்பம் இது.
இடம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னிதி செல்லும் வழியில் இடப் புறம் லலிதங்குரா பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இடத்தில் ஒரு சிறிய அறை போல் காணப்படும் பகுதியில் உள்ளது.

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...